
Post No. 12,252
Date uploaded in London – 10 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –
அத்தியாயம் 5
ச.நாகராஜன்
பாராட்டு, பாராட்டு!
பாராட்டுவது என்பது உலகில் பலருக்கும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்தியாவிலோ ஒருவருக்குப் பாராட்டு கிடைத்தது என்றால் அது மிகப்பெரிய அபூர்வமான விஷயம் தான்!
பாரிஸில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி இது.
ஒரு சமயம் ஒபேரா அரங்கம் ஒன்றில் ஒரு பிரபல பாடகர் வருவதாக இருந்தது. ஆகவே டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனையாகி அரங்கமே நிரம்பி வழிந்தது.
நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கும் தருணத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் மைக்கைப் பிடித்தார். “அன்பார்ந்த ரசிகர்களே! நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் பாடகருக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் கூட அவருக்குப் பதிலாக இன்னொருவர் வந்து உங்களை மகிழ்விப்பார்” என்றார் அவர்.
கூட்டத்தினருக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. பலர் உறுமினர். பலர் கொதித்தனர்.
பதிலியாக வந்தவர் தனது திறமையைக் காட்டலானார். அற்புதமாக அந்த நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது. ஆனால் அரங்கத்தில் ஒரே மௌனம் தான். யாரும் கைதட்டவில்லை.
திடீரென்று பால்கனியிலிருந்து ஒரு இளம் குரல் சத்தமாகக் கேட்டது. “அப்பா! ரொம்ப அருமை! அற்புதம்” என்றது அந்தக் குரல்.
ஒரு நிமிட தாமதத்திற்குப் பின்னர் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.
நம் அனைவருக்குமே தேவையாக இருப்பது நமக்காக நம்மைப் பாராட்டிக் கைதட்ட முதலாவதாக ஒரு ஆள் வேண்டும் என்பது தான்!
*

திணிக்கப்படும் சந்தர்ப்பங்கள், திடீர் முடிவுகள்!
மீன் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ஒருவர் ஏரிக்குப் போன போதெல்லாம் அவரால் ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடிவதில்லை.
ஆனால் அவருக்குத் தெரிந்த ஒருவரோ எப்போதுமே மீன் நிரம்பிய கூடையுடன் தான் ஏரியிலிருந்து திரும்புவது வழக்கம்.
தனக்கு மட்டும் ஏன் மீன் கிடைப்பதில்லை, அவருக்கு மட்டும் எப்படி மீன்கள் இந்த அளவில் கிடைக்கிறது என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.
ஒரு நாள் தன் நண்பரை அணுகிய அவர், “ராம்! உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மீன்கள் கிடைக்கின்றன?” என்றார்.
அதற்கு ராம், “என்னுடன் படகில் ஏறுங்கள்” என்றார்.
நண்பரும் ராமின் படகில் ஏறினார். மிகப் பெரிய ஏரியின் நடுவில் படகு சென்றது. நின்றது.
ராம் தனது பையிலிருந்து ஒரு டைனமைட்டை எடுத்தார். பொருத்தினார். அதை ஆகாயத்தில் தூக்கி எறிந்தார். அவ்வளவு தான்! படார் என்ற சத்தத்துடன் அது வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த வெடிப்பினால் இறந்து போன மீன்கள் ஏராளமாக நீரில் மிதக்க ஆரம்பித்தன. ராம் தனது வலையை விரித்தார். மீன்கள் அனைத்தையும் அதில் பிடித்தார். பின்னர் அள்ளித் தன் கூடையில் போட்டார்.
“பார்த்தாயா! இது தான் என் வழி!“ என்றார் ராம் தனது நண்பரிடம்.
நண்பர் அரண்டு போனார்.
அடுத்த டைனமைட்டை ராம் எடுத்தவுடன் நண்பர் அலறினார்.
“ஓ! இது தப்பு, தப்பு! உன்னை ஜெயிலில் வைக்க நானே ஏற்பாடு செய்வேன்” என்றார் நண்பர்.
ராம் தான் எடுத்த டைனமைட்டைப் பொருத்தி நண்பரிடம் தூக்கிப் போட்டார்.
“இப்படி நாள் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கப் போகிறாயா? அல்லது மீன்களைப் பிடிக்கப் போகிறாயா?” என்றார்.
உடனடியாக முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார் நண்பர்.
டைனமிட்டைத் தூக்கி வானத்தில் எறிந்தார். புகார் செய்ய இருந்தவர் மீன் பிடிக்கும் பங்காளி ஆனார்.
வெடிப்பான முடிவுகள் சில சமயம் வாழ்க்கையில் துடிப்பாக எடுக்கப்பட வேண்டியிருக்கிறது!
வாழ்க்கையே இப்படித் தான்!
எதிர்பாராத, நாம் விரும்பாத, நாம் வரவேற்காத, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் உடனடியாக முடிவை எடுக்கத் தூண்டுகின்றன.
நாம் கேட்காமலேயே இவை நம் மீது திணிக்கப்படுகின்றன.
சீக்கிரமாக, வேகமாக, உடனடியாக, திடீரென்று, சிந்திக்க, ஆலோசிக்க, அடுத்தவரிடம் யோசனை கேட்க முடியாதபடி உடனடியாக முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.
எடுக்கிறோம் ‘டமால்’ என்று!
**