சரஸ்வதி கண்டாபரணம் (Post No.12,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,325

Date uploaded in London –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சரஸ்வதி கண்டாபரணம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 5

ச.நாகராஜன்

பாரதம் கண்ட மிகப்பெரும் மன்னனும் பேரறிஞனுமான போஜ தேவ மஹாராஜன் இயற்றிய சம்ஸ்கிருத நூல் சரஸ்வதி கண்டாபரணம்.

கண்டாபரணம் என்றால் நெக்லஸ் என்று பொருள். சரஸ்வதிக்கான நெக்லஸ் – கழுத்தில் அணியும் ஆபரணம் என்ற அர்த்தத்தில் கவிதை இலக்கணம் எனப்படும் யாப்பிலக்கணம் பற்றிய அழகிய நூல் இது.

ஏராளமான உதாரணங்களுடன் இதில் பல்வேறு விஷயங்களை போஜ ராஜன் விளக்கியிருக்கும் விதம் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

போஜனின் காலம் கி.பி. 1015 முதல் 1055 முடிய என வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயித்துள்ளனர். மாள்வாவை ஆண்டு வந்த போஜன் கவிஞர்களைப் பெருமளவு ஆதரித்த மாமன்னன்.

இந்த நூல் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

எதையும் நுணுக்கமாக ஆராயும் போஜன் இதில் பல்வேறு சூத்திரங்களைத் தருகிறார்.

ச்ரவ்ய காவியம், த்ருஷ்ய காவியம் என காவியங்களை இருவிதமாகப் பிரிக்கும் போஜன், ச்ரவ்யம் ஆறு வகைப்படும் என்றும் த்ருஷ்யம்

ஆறு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் விளக்குகிறார்.

ஒரு வாக்கியத்தில் வரும் சொற்குணங்கள் 24. ப்ரேயான், ஸமாதி, விஸ்தரம், பாவிகம், ரீதி, உக்தி என இப்படி 24 வகைகளை உதாரணங்களுடன் இந்த நூலில் காணலாம்.

வாக்கியத்தில் உள்ள பொருள் குணம் 24. அர்த்த வியக்தி, சிலேஷம், மாதுரியம், அர்த்த வியக்தி, காந்தி, உதாரதை, பிரேயஸ் உள்ளிட்ட 24 குணங்களை இந்த நூல் உதாரணங்களுடன் விளக்குகிறது.

ஒரு செய்யுளில் குற்றமாயிருப்பினும் அது குணமாகும். எப்படி? நூலில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். இப்படி உள்ளவை அஸாது, அப்ரயுக்தம், கஷ்டம், அநர்த்தகம், அப்ரதீதம் உள்ளிட்டவையாகும்.

இந்த சம்ஸ்கிருத நூலை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைத் தமிழில் விளக்கமாக செந்தமிழ் இதழில் 1940, 1941ஆம் ஆண்டுகளில் (செந்தமிழ் தொகுதி 37, 38 உள்ளிட்ட தொகுதிகள்) ஸரஸ்வதீகண்டாபரணம் – கலைமகள் கழுத்தணி என்ற தலைப்பில் மதுரையைச் சேர்ந்த V.S. ராமஸ்வாமி சாஸ்திரி B.A.B.L அவர்கள் தந்துள்ளார்.

கவிதா ரஸிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

இதைப் பற்றிய எனது கட்டுரையை www.tamilandvedas.com இல் படிக்கலாம். கட்டுரை எண 7948 வெளியிட்ட தேதி 10-5-2020.

அதில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்.

உக்தி என்ற கவிதை இலக்கணத்தை விளக்க வந்த போஜ ராஜன் அருமையான கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாக காட்டுகிறான்.

கவிதை இது தான் :

குஷலம் தஸ்யா ஜீவதி

  குஷலம் ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் |

புனரபி ததேவ கதயஸி

  ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி ||

குஷலம் – அவள் நன்றாக இருக்கிறாளா?  (Is she well and cheerful?)

தஸ்யா ஜீவதி – அவள் உயிரோடு இருக்கிறாள்! (She lives)

குஷலம் – நான் கேட்டது அவள் நன்றாக இருக்கிறாளா என்று! (“I ask you, “is she well?”)

ப்ருஷ்டாஸி  ஜீவதீத்யுக்தம் –  நான் பதில் சொன்னேன் – அவள் உயிரோடு இருக்கிறாள் என்று (I have replied , “She lives”)

புனரபி ததேவ கதயஸி –  நீ சொன்னதையே திருப்பிச் சொல்கிறாய்! (You are saying again the same thing)

ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி – அவள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் போது அவளை இறந்து விட்டாள் என்று சொல்லச் சொல்கிறாயா?

(“Am I to say she is dead when she still breathes?”)

(English Translation : A.A.R)

ஆர்யா சந்தத்தில் அமைந்துள்ள இது காலத்தை வென்ற ஒரு காதல் கவிதை.

தோழியிடம் அவன் காதலியைப் பற்றி தலைவன் ஆவலுடன் நலம் விசாரிக்கிறான்.

தோழியோ அவள் மூச்சு மட்டும் நிற்கவில்லை – உன்னைப் பிரிந்து என்பதை அழுத்தம் திருத்தமாக, “தஸ்யா ஜீவதி” என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறாள்.

அவளுடைய எல்லா நலன்களும் அழிந்தொழிந்தன; நடைப்பிணமாக இருக்கிறாள் (கோமா ஸ்டேஜிலோ?!) – மூச்சு மட்டும் ஓடுகிறது என்று இப்படிச் சிறப்பாகச் சொல்வது காவிய சொற்குணங்களில் உக்தி என்ற பெயரை அடையும்.

இப்படி 24 சொற்குணங்கள் உள்ளன. 23ஆவதாக அமைவது உக்தி. எப்படிப்பட்ட மஹா ரஸிகனாக இருந்திருந்தால் போஜன் தான் இதை ரஸித்ததோடு காலம் காலமாக உலக மக்கள் அனைவரும் ரஸிக்கத் தக்க ஒரு உதாரணக் கவிதையாகக் காட்டி இருப்பான்?

!***

Leave a comment

Leave a comment