வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை-1 (Post No.12,367)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,367

Date uploaded in London –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆடி  மாத அம்மன் தலங்கள் வரிசையில் 2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை

(முதல் பகுதி ) 

ச.நாகராஜன்

குடசாத்ரி மலைச்சிகரத்தில் கொல்லூர் 

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லூர் திருத்தலம் சக்தி வாய்ந்த அம்மனின் திருத்தலம் ஆகும். இங்கு மூகாம்பிகை தேவி குடியிருந்து லக்ஷக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.

இந்தத் திருத்தலம் உடுப்பியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் குடசாத்ரி மலையில் ஒரு சிகரத்தில் இது உள்ளது.

 கொல்லூர் பெயர்க் காரணம்

மிகப் பண்டைய காலத்தில் த்வாபர யுகத்தில் கோலன் என்ற மஹரிஷி தவம் புரிந்த திருத்தலம் இது. கோல மஹரிஷி தவம் புரிந்த தலம் என்பதால் இது கொல்லூர் என்ற பெயரைப் பெற்றது.

இங்கு கொலுவீற்றிருக்கும் மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும்படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள்.

மூகாம்பிகையின் இந்த ஆலயம் தெள்ளிய நீர் ஓடும் சௌபர்ணிகா நதிதீரத்தில் அமைந்துள்ளது. குடசாத்ரி மலையிலிருந்து உருவாகி விழும் 64 நீர்வீழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சௌபர்ணிகா நதியாக மாறிப் பாய்கிறது. இது 64 மூலிகைகளின் நீராக அமைகிறது. தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும் தீர்த்தம் இது.

ஸ்வயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள். கர்பக்ரஹ விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

கர்பக்ரஹத்தில் அம்பாளின் முன்னர் தரையோடு தரையாக சுயம்பு லிங்கம் உள்ளது. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்கள் வலது புறத்தில் இருக்க, ஒரு தங்கச் சங்கிலி இடது புறத்தைத் தனியே பிரிக்கும் காட்சி அரிய காட்சியாகும்.

கர்பக்ரஹத்தின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் சிம்ம வாகனம் இருக்க, இரு புறமும் தியான மண்டபம் உள்ளன.

இந்த தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கர் என்றும் ஶ்ரீ சக்ரத்தின் மீது இதை அவர் நிறுவியுள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது.

வெளி பிரகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. சௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர் இயற்றிய இடம் இதுவே எனக் கூறப்படுகிறது.

ஆதி சங்கரர் அமைத்துள்ள வழிபாட்டு முறையின் படியே கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன. சங்கர பீடம் ஒன்றை கர்பக்ரஹத்தின் மேற்குப் புறத்தில் காணலாம்.

கர்பக்ரஹத்தின் முன்னே கொடிக் கம்பம் உள்ளது. அருகில் ஒரே கல்லினால் ஆன விளக்குத்தூணில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.

புராண வரலாறு

பழைய புராண வரலாற்றைக் கொண்ட அரிய தலம் இது. கம்ஹாசுரன் என்ற ஒரு அசுரனை தேவி வதைத்த தலம் இது. அரிய தவம் ஒன்றைச் செய்து பூமியை நடுங்கச் செய்ய உள்ளம் கொண்ட அந்த அசுரனை பார்வதி தேவி பூமியைப் பாதிக்கும்படியான வரத்தை அவன் கேட்பதைத் தடுத்து நிறுத்த அவனை ஊமையாக்கினாள். ஆகவே அவன் மூகாசுரன் என்ற பெயரைப் பெற்றான். மூகம் என்றால் ஊமை என்று பொருள்.

என்றாலும் கூட அசுரர்களின் குருவான சுக்ராசாரியரின் ஆசியினால் அவன் பேசும் சக்தியைப் பெற்று முனிவர்களைக் கொல்ல ஆரம்பித்தான். இந்தக் கொடுஞ்செயல் பொறுக்க முடியாதபடி எல்லை தாண்டிச் சென்ற போது பார்வதி தேவி  மூகாசுரனை வதம் செய்தாள். ஆகவே மூகாம்பிகை என்ற பெயரையும் பெற்றாள். ஆகவே இந்தத் தலம் கொல்லூர் மூகாம்பிகை தலம் ஆனது.

சங்கரர் பற்றிய வரலாறு

இன்னொரு சுவையான வரலாறும் இந்தத் திருக்கோவில் அமைந்த விதம் பற்றிக் கூறப்படுகிறது.

ஆதி சங்கரர் சரஸ்வதிக்கு ஒரு ஆலயத்தை கேரளத்தில் அமைக்க விரும்பினார். இதற்காகத் தவம் இயற்றிய போது சரஸ்வதி தோன்றி ஆதி சங்கரரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அருளினாள். ஆனால் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அவர் தன்னைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் ஆனால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதுமே நிபந்தனையாக விதிக்கப்பட்டது. இதன்படி ஆதிசங்கரர் முன்னே நடக்க பின்னால் தேவி வந்து கொண்டிருந்தாள். தேவியின் நூபுர ஓசை ஆதிசங்கரர் காதில் விழ அவர் மகிழ்ச்சியுடன் முன்னேறினார். ஆனால் திடீரென்று அந்த ஓசை நின்று விட சங்கரர் திரும்பிப் பார்த்தார். அவர் இப்படி நிபந்தனையை மீறி விட்டதால் தேவி அந்த இடத்திலேயே இருந்து விட்டாள். அந்த இடம் தான் கொல்லூர். என்றாலும் தன்னை நோக்கிக் கடும் தவம் இயற்றிய காரணத்தால் தேவி கேரளத்தில் சோட்டாணிக்கரை அம்மன் கோவிலும் மூகாம்பிகை ஆலயத்திலும் இருந்து அருள் பாலிப்பதாக வாக்குத் தந்தாள். ஆகவே தான் இன்றளவும் சோட்டாணிக்கரை அம்மன் கோவில் மூகாம்பிகை கோவில் திறக்கப்பட்ட பின்னரேயே உடனே திறக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

–    தொடரும்

Leave a comment

Leave a comment