
Post No. 12,383
Date uploaded in London – – 7 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
_(14484817881).jpg)
83.பேலூர் BELUR CHENNA KESAVA TEMPLE
பேலூரூ சென்ன கேசவ ஆலயம் / கோவில்
ஹாசன் நகரிலிருந்து 38 கி.மீ.இது யாகாச்சி நதியின் கரையில் அமைந்தது. பழைய பெயர் வேலூர், வேலாபுரி. தென் பாரதத்தின் காசி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இது கி.பி (பொது ஆண்டு) 1117ல் கட்டி முடிக்கப்பட்டது ஏனைய ஹொய்சாளர் கோவில்களைப் போல நட்சத்திர வடிவ மேடையில் அமைந்தது . இத்தகைய கோவில்களில் சுவாமியை வலம் வருவதற்கு, மேடையிலிருந்து இறங்கி பிரதட்சிணம் செய்ய வேண்டி இருக்கும்
இந்தக் கோவிலைக் கட்டி முடிக்க 103 ஆண்டுகள் ஆயின.
கர்ப்பாக்கிரகத்தில் விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ சென்னை கேசவப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் காட்சி தருகிறார்.சங்கு சக்ரம், கதாயுதம் , தாமரை மலர்களைக் கைகளில் ஏந்த, பூதேவி ,ஸ்ரீ தேவி சூழ, நிற்கிறார். கோவிலில் தசாவதாரக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக பார்க்க வேண்டிய சிற்பங்கள்
தர்ப்பண சுந்தரி என்னும் கண்ணாடியில் முகம் பார்க்கும் அழகி ;
நிறைய நகைகள் அணிந்த மதனிகா ;
மேல் மாட கல் ஜன்னல்கள் ;
கிழக்கு வாயிலில் ரதி மன்மதன் ;
கோவிலைச் சுற்றி யானை, சிங்கம், குதிரை;
மேல் பாகத்தில் அழகு சுந்தரிகள்
அழகியுடன் பாடும் கிளி ;
வெற்றிலையுடன் பெண்மணி ;
காதல் கடிதம் எழுதும் அழகி;;
பெண்ணின் புடவையை இழுக்கும் குரங்கு;
சிகை அலங்காரம் செய்யும் அழகி;
உடலை திரி பங்கி வடிவத்தில் வளைத்து நடனமாடும் அழகி ;
நாட்டிய மோகினி;
வாத்யத்துடன் காட்சிதரும் அழகி ;
மாம்பழத் தோட்டக்காரி
தேளைக் கண்டு நடுங்கும் அழகி
இந்து மத கடவுளர் என்று நூற்றுக்கணக்கில் சிலைகள் உள்ளன.
ஹளபீடு போல மியூசியக் கோவில் அல்ல இது; இரண்டு நேரங்களிலும் பூஜை நடக்கும் கோவில் இது.
48 தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
மன்னன் விஷ்ணுவர்தனனின் மனைவி மஹாராணி சாந்தலா தேவியும் ஒய்யாரமாகக் கட்சி தருகிறாள் ஒரு சிலையில் .
சென்ன கேசவ ஆலயத்தின் பின்புறத்தில், வீர நாராயண கோவில், ஸெளம்ய முகீ ஆலயம், ஆண்டாள் /ரங்க நாயகி கோவில்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் எண்ணிலடங்காத சிற்பங்கள் !!
XXXXX

84.சிரவண பெலகோலா SHRAVANABELAGOLA GOMATESHWRA STATUE
இது இந்துக்களின் கோவில் இல்லை என்றாலும் இன்று அதிகமாக இந்துக்ளே செல்கின்றனர்
2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தில் தான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி அற்புதமான படங்கள் , காட்சிகள் யூ ட்யூபில் கிடைக்கின்றன.

57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும்
மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார்.
சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள் இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள்.
பெல கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!
இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன.

Xxxxx
TO BE CONTINUED………………………………………….
tags- பேலூர், சென்ன கேசவ பெருமாள், கோவில், சிரவண பெலகோலா , கோமடேஸ்வர் , மகா மஸ்தகாபிஷேகம்