மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி-1 (Post.12,479)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,479

Date uploaded in London –  29 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

ஏழு முக்தி தலங்களில் ஒன்று காசி!

அயோத்யா, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), த்வாரகா ஆகிய ஏழு மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் காலம் காலமாக பக்தர்களால் மிகவும் விரும்பி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தலமாகும்.

காசி ரயில்நிலையத்திற்கு தினமும் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விமானம், கார், பஸ் என பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகளின் மூலமாக வருவோர் இன்னும் பல ஆயிரம்.

இது சென்னையிலிருந்து சுமார் 1156 மைல் தொலைவிலும் லக்னௌவிலிருந்து சுமார் 194 மைல் தொலைவிலும் உள்ள தலமாகும்.

1800 கோவில்கள் கொண்ட திரு நகரம்!

இதன் புனிதத்தன்மையையும்  மஹிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர்.

அன்னபூரணி, விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன ஹனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மஹிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.

அத்துடன் மிக அதிகமான புண்ணிய ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.

காசி ரகசியம்!

கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலி யுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாக காசி ரகஸ்யம் கூறுகிறது.

காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.

காசிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய ரகசியம் ஒன்று உண்டு.

பிரளய காலம் என்று ஒன்று உண்டு. அப்போது மூலப் பொருள் தம் படைப்பு முழுவதையும் சுருக்கி ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. இதுவே மகாகவி கம்பன் ராமாயணத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் ‘உலகம் யாவையும் தாம் உளவாக்கல்” என்பதாகும்.

பிறகு தக்க தருணம் வரும் போது அது வெளி விடுகிறது.

அந்தக் குடுக்கையைப் பத்திரப்படுத்தும் இடம் தான் காசி திருத்தலம்!

ஆக பேரண்டப் படைப்பில், காசி தான் உற்பத்தி கேந்திரமாகவும் லய கேந்திரமாகவும் ஆகிறது.

இப்படிப்பட்ட பெருமை வேறு எந்தத் தலத்திற்கும் கிடையாது.

இன்னொரு காரணமும் இந்தத் தலத்தின் சிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இதர தலங்களில் நல்வினை செய்தோருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். ஆனால் இந்தத் தலத்திலோ நல்வினை, தீவினை என்றில்லாமல் அனைவருக்கும் முக்தி கிட்டுமாம். இப்படி சனத்குமார சம்ஹிதை கூறுகிறது.

வாரணாசி

காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அஸி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது.

காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள்.

அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.

64 கட்டங்கள்

கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.

அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம். வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும்.

இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும் போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.

இந்த ஸ்நானத்தை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று ஸ்வாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம்.  மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.

காசி விசுவநாதர் ஆலயம்

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று விஸ்வநாதர்.

     காசி விசுவநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்ருஹம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.

இந்த ஆலயத்தை 1767 முதல் 1795 முடிய இந்தூரை ஆண்ட மஹாராணி ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அவர் கோவிலுக்குச் செய்த நற்பணிகள் பற்பல.

கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

·                     தொடரும்

Leave a comment

Leave a comment