கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 31 (Post No.12,488)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,488

Date uploaded in London – –  31 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 31

128.பட்டடக்கல் கோவில்கள்

ஐஹோல், பாதாமி, .பட்டடக்கல் ஆகிய மூன்றும் கர்நாடக மாநிலத்தில் அருகருகே இருந்தாலும் அவைகளை நன்றாகப் பார்க்க வேண்டுமானால் அதற்குப் பல நாட்கள் தேவைப்படும் .

பாதாமி (வாதாபி)யிலிருந்து .பட்டடக்கல் 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில்  இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவை  கி.பி. 7,8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரலாற்ற ச் சின்னங்கள் ஆகும்.   வேசர பாணியில் கட்டப்பட்ட  இந்துக் கோவில் களை இங்கே காணலாம் .பட்டடக்கல் நகரமும் சாளுக்கிய வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது இங்கு அவர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.

ஐஹோல் போலவே பட்டடக்கல்லிலும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ளன. இவை சாளுக்கிய வம்சத்தினரின் வரலாற்றை அறிய நமக்கு உதவுகின்றன. அங்குள்ள முக்கியக் கன்னட மொழிக் கல்வெட்டுகள் , விருபாட்சர் கோவிலிலும் , சங்கமேசுவரர் கோவிலிலும் உள்ளன இரண்டாம் விக்ரமாதித்தன் ,  விஜயாதித்தன்  ஆகிய சாளுக்கிய அரசர்களை இவைகள் குறிப்பிடுகின்றன.

மலப்ரபா ஆற்றின் கரையில் அமைந்த இந்த நகரின் மற்றும் ஒரு பெயர் ரக்தபுரம். செம்மண் பூமியாதலாதலால் ரக்தபுரம் என்று பெயர் ஏற்பட்டது மலப்பிரபா நதி, கிருஷ்ணா நதியின் உப நதி. இது இந்த ஊருக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்வதால் கங்கைக்கு சமமாகக் கருதப்படுகிறது . வடக்கிலுள்ள கயிலை மலையும்  கங்கை நதியும் இந்துக்களுக்கு புனிதமானவை. இங்கு முடிசூட்டிக்கொள்ளும் கல்லும் உள்ளது. வினயாதித்யன் முதலிய பல மன்னர்கள் இங்கு முடிசூட்டிக்கொண்டனர். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடங்கள் சீரும் சிறப்புடனும் திகழ்ந்தன. இன்று விரூ பாட்சர் கோவிலில் வழிபாடு நடக்கிறது

இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் சிவன் கோவில்கள். ஆயினும் விஷ்ணு, சக்தி வழிபாடுகளையும் சிறப்பிக்கும் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. ராமாயணமஹாபாரத, பாகவத புராணக் காட்சிகள் மட்டுமின்றி பஞ்சதந்திர , கிராதார்ஜுனிய   காட்சிகளையும்  காண முடிகிறது .

விரூபாட்சர் கோவில்

இங்குள்ள கோவில்களில் மிகவும் புகழ் வாய்ந்தது விரூபாட்சர் கோவில்; ஹம்பி நகரிலும் இதே பெயரில் கோவில் உண்டு. இரண்டாம் விக்கிரமாதித்தனின் வெற்றிகளைக் கொண்டாட இந்தக் கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது அவன் மனைவி பெயர் லோகமஹாதேவி. அவன் மூன்று முறை போர்முனைகளில் பல்லவ மன்னர்களை வெற்றி கொண்டான்

இந்தக்கோவிலில் உள்ள சிவலிங்கமும்  நந்தியும் பெரியவை; அழகானவை; இரண்டையும் பார்க்கும்போது நமக்கு பிருஹதீஸ்வரர், லெபாக்ஷி, சாமுண்டீஸ்வரி கோவில் நந்திகளும் லிங்கங்களும் மனக்கண் முன்னர் தோன்றும் .

இந்தக்கோவிலை சிற்பக் களஞ்சியம் என்றால் மிகையாகாது . 18 தூண்கள் முழுதும் புராண இதிஹாஸக் காட்சிகள் தான்.

அதிலும் முக்கியமானது கொற்றவையின் சிற்பம். இதில், மகிஷனின் தலைமீது ஒரு காலை வைத்து, அவன் கழுத்தில் தன் ஒரு கை சூலத்தைப் பாய்ச்சி, மற்றொரு கரத்தில் இருக்கும் வாளை அவன் மார்பில் செலுத்தும் காட்சி பிரமிக்கவைக்கிறது. மேலும், இங்குள்ள சுவர் முழுவதும் ஆண்கள் மற்றும் கன்னியர்களின் சிற்பங்களும் உள்ளன. முஸ்லீம் படையெடுப்புகளால் சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், எஞ்சிய சிற்பங்கள் பேரழகுடன் காட்சியளிக்கின்றன.

மல்லிகார்ஜுனர் கோவில்: விருபாட்சர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் இந்த சிவன் கோயில், சாளுக்கியப் பேரரசி திரைலோக்ய மகாதேவி அளித்த மானியத்தின் மூலம் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இந்தக் கோவில் அரசியின் பெயரில் ‘திரைலோகேஸ்வர மகா சைலம்’ என்று அழைக்கப்படுகிறது.  ஒவ்வொரு தூணும் சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. கோயில் சுவரில் பாற்கடல் கடையும் காட்சி, மகாபாரதக் காட்சி, பஞ்ச தந்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அழகிய பல சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன.

காசிவிஸ்வநாதர் கோவில். : இது ஒரு பழைமையான கோவில்.  . ஏழாம் நூற்றாண்டுக்கோவில் சுவர்களின் பீடத்தில் அனைத்து திசைகளிலும் குதிரை, சிங்கம், மயில் ஆகியவற்றின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்களில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், ராவணன் கயிலாய மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் காட்சி, கண்ணனின் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரையில் எண்திசைக் காவலர்கள் காவலிருக்க, சிவபெருமான் பார்வதி, கார்த்திகேயன், நந்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியும் சிற்பமாக்கப்பட்டிருக்கிறது.

சங்கமேஸ்வரர்கோவில். : பட்டடக்கல்லில் காணப்படும் மிகப் பெரிய கோவில்.களில் சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. இதற்கு `விஜயேஸ்வரர் கோவில். என்றும் பெயர் உண்டு. இங்கே காணப்படும் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  இங்கு, நடராஜர் வடிவத்தில், சக்தியுடன் இருப்பதாக சிவன் அமைக்கப்பட்டுள்ளது.

காளகநாதர் கோவில். 

இதன் மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. . லிங்கத்துடன் காணப்படும் கருவறையை நோக்கி, வெளியே நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஜம்பு லிங்கேஸ்வரர் கோவில்: பட்டடக்கல்லில் காணப்படும் மிகச் சிறிய கோவில்களில் இதுவும் ஒன்று. 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த கோயிலின் சிற்பங்கள் சேதமடைந்து தெளிவில்லாமல் இருக்கின்றன.

கடசித்தேஸ்வரா கோவில்: இங்குள்ள கருவறையின் வெளிப்புறச் சுவரின் வடக்கில் அர்த்தநாரீஸ்வரர் (பாதி சிவன், பாதி பார்வதி), மேற்கில் ஹரிஹரன் (பாதி சிவன், பாதி விஷ்ணு) மற்றும் தெற்கே லகுலிஷாவின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறந்த கட்டடக்கலையும், சிற்பக்கலைகளின் கருவூலமாகவும் உள்ள நினைவுச்சின்னங்களை,  யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது

இங்கே பார்க்க வேண்டிய இடங்கள்

காளகநாதர் கோயில்

காடசித்தேசுவரர் கோயில்

சம்புலிங்கேசுவரர் கோயில்

சங்கமேசுவரர் கோயில்

சந்திரசேகரர் கோயில்

விருபாட்சர் கோயில்

மல்லிகார்ச்சுனர் கோயில்

காசி விசுவநாதர் கோயில்

பாபநாதர் கோயில்

சமணர் கோயில்

—SUBHAM—

Tags–கர்நாடக மாநில, 108 ,புகழ்பெற்ற கோவில்கள், part – 31, பட்டடக்கல்

Leave a comment

Leave a comment