வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் –இலங்கை  ஆலயங்கள்  – 20 (Post.12,561)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,561

Date uploaded in London – –  –  7 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 PICTURES ARE FROM WIKIPEDIA

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 20 

40.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் , யாழ்ப்பாணம்

VAITHEESWARAN KOVIL, VANNARPANNAI, JAFFNA

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு செட்டியார் கோவில் என்ற பெயரும் உண்டு; காரணம், வைத்திலிங்க செட்டியார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் இலங்கையில் இந்துமதம் தழைக்க வித்தூன்றிய ஆறுமுக நாவலர்,  முதலில் சமயச் சொற்பொழிவு ஆற்றிய கோவில் இதுதான்

இந்தியாவிலிருந்து வந்த கோபால செட்டியார்  வணிகம் மூலம் பெரும் பொருளை ஈட்டினார். இதனால் அப்போது ஆட்சி செய்துவந்த ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது  அவருடைய மகன்தான் வைத்திலிங்க செட்டியார். அவரும் முத்துக்குளித்தல் முதலிய தொழில்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். மேலும் தனது செல்வத்தை தர்மப்பணியில் செலவிட்டார். கூழங்கைத் தம்பிரான் கூறியபடி சிவன் கோவிலை   எடுப்பித்தார். அங்கே வைத்தியநாதனையும் தையல் நாயகியையும் பிரதிஷ்டை செய்தார்.

சோழ  நாட்டில்  மிகவும் பிரசித்தமான கோவில் மாயூரம் / சீர்காழிக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆகும். அந்த வட்டார மக்களுக்கு வைத்திய நாதனே குல தெய்வம் என்பதும் குறிப்பிடத்தக்கது

வண்ணார்பண்ணை கோவில் உருவான வரலாறு சுவையான வரலாறு. போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் இலங்கையிலுள்ள 4000 கோவில்களில் பெரும்பாலானவற்றை தரை மட்டமாக்கி அந்தக் கற்களைக் கொண்டு சர்ச்சுகளையும் கோட்டைகளையும் கட்டினார்கள். நெதர்லாந்து/ ஹாலந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவர்ளுக்கு மதவெறி கொஞ்சம்  குறைவு . ஆகையால் இந்துக்  கோவில்களைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதற்கும் பணம் வசூலித்துவிடுவார்கள் ; வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லவா !

பனங்காமம் நல்ல மாப்பாண வன்னியனை தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்தனர் டச்சுக்காரர்கள் . வைத்திலிங்க செட்டியார் தனது செல்வாவாக்கைப் பயன்படுத்தி விடுதலை செய்தார். அதற்கு நன்றி பாராட்டும் முகத்தான்,  அவர் 20,000 பனை மரங்களை கோவில் கட்டுவதற்கான வேலைகளுக்கு அளித்தார் . அவரை விடுதலை செய்ய, செட்டியார் கொடுத்த தொகை 1200 டாலர். அது அக்காலத்தில் பெரும் தொகை . டச்சுக்காரர்கள் எவ்வளவு கில்லாடிகள் என்பதை அறிய இது உதவும் .

மாப்பாண வன்னியன் பனை மர நன்கொடையோடு நிற்கவில்லை. வைத்திய நாத சுவாமி- தையல் நாயகி அம்மனின் நித்திய பூஜைக்காக துணுக்கை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தையும் கோவிலுக்கு தானம் செய்தார் அதன் நெல்வயல்களும் குளமும் கோவிலுக்குச் சொந்தமாயின.

1791-ம் ஆண்டில் கோவில் கட்டப்பட்டது. நித்திய பூஜைகளோடு ஆண்டுதோறும் விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. பிற்காலத்தில் வசந்த மண்டபம், ராஜகோபுரம் எழுப்பப்பட்டன.

மார்ச் மாதம்வரும் பெளர்ணமியில் 20 நாள் சிவ பெருமான் உற்சவம் நிறைவு பெறுகிறது . ஜுலை மாத அமாவாசையில் அம்பாளின் தீர்த்த உற்சவத்தோடு தேவியின் திருவிழா முடிவடையும் .

ஏ . முத்துத் தம்பி பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வரலாற்றில் மேல் விவரம் கிடைக்கும் JAFFNA HISTORY, A. MOOTOOTAMBY PILLAY.

XXXX

41.நல்லூர் சட்டநாதர் கோவில்  , யாழ்ப்பாணம் Saddanathar Sivan Kovil

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி கூழங்கை சிங்கை ஆரியன்,  நல்லூர் நகரை அமைத்து ,  நான்கு திசைகளில் 4 கோவில்களையும் கட்டினார் ; வட  திசைக்குக்  காவலாக எழுப்பப்பட்டது சட்டநாதேசுவரர் கோவில் ஆகும் .

அவரை அடுத்து ஆட்சி செய்த ஆரிய சக்ரவர்த்திகளும் கோவில்களை நன்கு பராமரித்தனர் குறிப்பாக கனக சூரியன் சிங்கை ஆரியன் (14401478), இந்து தர்மத்தைப் போற்றினார் .

அதற்குப்பின்னர் கிறிஸ்தவ வெறியர்கள் போர்ச்சிகீசிய கவர்னர் பிலிப் தெ ஒலிவீர  PHILIP DE OLIVEIRA உத்தரவில் கோவிலை தரை மட்டம் ஆக்கினர்.  அதற்கு முன்னர், கோவில் குருக்கள்கள் , விக்கிரகங்களை குளத்தில் போட்டு மறைத்து வைத்தனர்.

தென்னாட்டுக் கோவில்களை மாலிக்காபூர் என்னும் மத வெறியன் கொள்ளை அடித்த போது , அர்ச்சகர்கள் கையாண்ட இதே தந்திரத்தை யாழ்ப்பாணத் தமிழர்களும் கையாண்டனர்.

1621-ம் ஆண்ட்டில் தரை மட்டமான இந்துக்கோவில், பீனிக்ஸ் PHOENIX  பறவை போல, 1815-ம் ஆண்டில் புத்துயிர் பெற்றது . தம்பையா பிள்ளை , தெய்வீக ஆற்றல் பெற்று, குளத்தில் கிடந்த பல விக்கிரகங்களை மீட்டார்.

கிடைத்த விக்கிரகங்களில் நல்லை நாயகி அம்மன் விக்கிரகம் மட்டும் புதுக்கருக்கு அழியாமல், முழு வடிவில் கிடைக்கவே , கோவில் கட்டி அதை பிரதிட்டை செய்தார். அதே நேரத்தில் மூலஸ்தானத்தில் சிவலிங்கமும் நிறுவப்பட்டது.ஏனைய விக்கிரகங்கள் யாழ்ப்பாண மியூசியத்துக்கு வழங்கப்பட்டன. கஜ லெட்சுமி, வள்ளி தெய்வானை, தட்சிணா மூர்த்தி , சனைச்சரன் (சனீஸ்வரர்), ஒற்றைக் கல்லிலான மயில் மேலமர்ந்த சுப்பிரமணியர் ஆகியனவும் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிலைகள் ஆகும். இவை அனைத்தும் விஜய நகர சாம்ராஜ்ய காலத்தவை..

தம்பையா பிள்ளை வம்சத்தில் வந்துதித்த  சிவப்பிரகாச பிள்ளை , தம்பையா பிள்ளை ஆகியோர் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, மணிக்கூண்டு கோபுரத்தை எழுப்பினர். நர்மதை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து ஸ்வயம்பூ லிங்கங்களை டாக்டர் டி . நல்லைநாதன் நிறுவி புண்ணியம் சம்பாதித்துக் கொண்டார்.

நர்மதா நதிக்கரைகளில் இயற்கையில் கிடைக்கும் லிங்க வடிவக் கற்களை இந்தியா முழுதும் காணலாம் . நல்லை நாதன் பிரதிஷ்டை செய்த பஞ்ச லிங்கங்களில் சக்கரக் குறியீடுகள் இருப்பது கூடுதல் சிறப்புடைத்து .

நல்லை நாயகி சமேத நல்லை நாத லிங்க மூர்த்திக்கு , எல்லா சிவாலயங்களிலும் நடத்தப்படும் அனைத்து ஆராதனைகளும் சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வருகின்றன .

TO BE CONTINUED………………………………………………

Tags-  நல்லூர் ,சட்டநாதர் கோவில்  , யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, வைத்தீஸ்வரன் கோவில் , செட்டியார் , டச்சுக்காரர், மாப்பாண வன்னியன்

Leave a comment

Leave a comment