
picture of singer Sonu Nigam
Post No. 12,714
Date uploaded in London – – 14 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 10
ச.நாகராஜன்
பிரபல பாலிவுட் பாடகரான சோனு நிகம் (Sonu Nigam) வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.
ஒரு சமயம் அவர் தனது ரசிகர்களைச் சோதிப்பதற்காக மும்பையில் தெரு ஒன்றில் அமர்ந்து பிச்சைக்காரர் ஒருவர் பாடுவது போல பாட ஆரம்பித்தார்.
உடனே கூட்டம் கூட ஆரம்பித்தது.
கூட்டத்தில் அனைவரும் பாடலை வெகுவாக ரசித்தனர்; பாராட்டினார்; ஆனால் யாரும் ஒரு ரூபாய் கூட தர்மமாகத் தரவில்லை.
ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் அவரிடம் சென்று தன்னிடமிருந்த 12 ரூபாய்களைத் தந்தான்.
“நீங்கள் பசியோடு இருப்பீர்கள். இதோ இதை வைத்து சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான்.
அந்தப் பையனின் அன்பை நினைத்து சோனு நிகம் நெகிழ்ந்தார். கூட்டம் கலைந்த போது அந்தப் பையனைக் காணோம். அவன் வீட்டை நோக்கி ஓடி விட்டான்.
சோனு நிகம் கூறினார்:” இந்தச் சிறுவனின் தர்மமானது எனக்கு ஒரு பெரிய ட்ராபி கிடைத்தது போல என்று எண்ணுகிறேன். இதை எனது வாழ்க்கை முழுவதும் அப்படியே வைத்திருப்பேன்” என்றார்.
ஆதாரம் : ஹிந்துஸ்தான் ஹிந்தி நாளிதழில் 19-5-2016 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி
***
வால்டேரின் குறுக்கீடு
வால்டேரைப் பற்றிய ஏராளமான சம்பங்களில் அவரது பொறுமையின்மையைச் சுட்டிக்காட்டும் சம்பவம் இது.
பதினைந்தாம் லூயி பாரிஸிலிருந்து அவரை வெளியேற்றி இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. 1754ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிஸிலிருந்து வெளியேறிய அவர் 1778ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பாரிஸுக்கு வந்தார்.
அவருக்கு வயது 83. மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து பாரிஸுக்கு வந்த அவரைப் பார்க்க ஏராளமானோர் உற்சாகமாகக் கூடினர்.
அவரை வரவேற்கக் கூடிய கூட்டத்தில் ஒரு இளைஞன் உற்சாகமாக அவரைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தான்
“மகத்தானவரே! இன்று நான் ஹோமரைப் போற்றிப் புகழ வந்துள்ளேன். நாளை சொபோக்ளிஸைப் போற்றுவேன். நாளை மறுநாள் ….”அந்த இளைஞனை இடைமறித்த வால்டேர், “அப்பா! எனக்கு மிகவும் வயதாகி விட்டது. உனது எல்லா போற்றுதலையும் இன்றே முடித்துக் கொண்டால் நல்லது!” என்றார்.
அனைவரும் ஆரவாரித்தனர்.
**
விசித்திரமான மேதை ரிச்சர்ட் பக்மினிஸ்டர் ஃபுல்லர்
சிறந்த கட்டிடக் கலைஞரும் விஞ்ஞானியுமான அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பக்மினிஸ்டர் ஃபுல்லர் (Richard Buckminster Fuller) கவிகை மாடம் (Geodesic Dome) வடிவமைப்பதில் வல்லவர். (பிறப்பு : 12-7-1895 மறைவு 1-7-1983) எதிர்கால நகரங்களை அவர் மனக்கண்ணில் கண்டு வடிவமைப்பார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் டைமாக்ஸியன் (Dymaxion) என்ற ஒரு காரையும் அவர் வடிவமைத்தார். ஆனால் அவர் கொஞ்சம் விசித்திரமான மேதை. அடிக்கடி உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டே இருப்பது அவர் வழக்கம். ஆகவே அவர் பல்வேறு இடங்களில் என்ன நேரம் என்பதைக் காட்டும் மூன்று கடிகாரங்களைக் கையில் அணிந்து கொண்டிருப்பார். பல வருடங்கள் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் தூங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த தூக்கத்திற்கு டைமாக்ஸியன் தூக்கம் (Dymaxion sleep) என்று அவர் பெயர் கொடுத்தார். ஆனால் அவரது சகாவால் இப்படித் தூங்காமல் இருப்பது முடியவில்லை. ஆகவே அவர் பின்னாளில் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். தனது வாழ்நாளில் என்னென்ன நடக்கிறது என்பதை அவர் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை அவர் 1915ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருந்தார். அதற்கு டைமாக்ஸியன் க்ரானோஃபைல்ஸ் (Dymaxion chronofiles) என்று பெயர். அது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பைல்களின் உயரம் 272 அடி.
***