
Post No. 12,796
Date uploaded in London – – – 4 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 23
கோவில் எண்கள்- 24, 25
மேலும் 2 வைணவ தலங்கள்: திருநாவாய், திருவிதாங்கோடு கோவில்கள்
108 வைணவ தலங்களில் கேரளத்தில் உள்ள மேலும் இரண்டு கோவில்கள் திருநாவாய், திருவிதாங்கோடு ஆகும்..

திருநாவாய்
சென்னை- கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு ) ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ஸ்டேஷன் அமைந்துள்ளது . ஸ்டேஷனிலிருந்து 2 கி.மீ. நடந்தால் கோவிலை அடையலாம். ஷோரனூரிலிருந்து பஸ்ஸில் வரலாம். திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது.
மூலவர் – நாவாய் முகுந்தன் , நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய கருவறை ; முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.
தாயார் – மலர் மங்கை நாச்சியார், சிறு தேவி
தீர்த்தம் செங்கமல சரஸ்
விமானம்- வேத விமானம்
பிராத்தியட்சமானது – லக்ஷ்மி , கஜேந்திரன், நவ யோகிகள் முன்னிலையில்
மங்களாசாசனம் – திருமங்கை ஆழ்வார் , நம்மாழ்வார்
வரலாறு- 1200 ஆண்டுகளுக்கும் முந்தைய கோவில்
சிறப்பு அம்சங்கள்
பரதப்புழை (பொன்னானி ஆறு) ஒரு புனித நதி. அந்த நதியை ஒட்டி கோவில் இருக்கிறது .
எதிர்க்கரையில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் கோவில்கள் இருப்பதால் மும்மூர்த்திகளையும் ஒரே மூச்சில் தரிசிக்கலாம்..
இந்த இடத்தைக் காசிக்கு சமமாகக் கருதி நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் சம்பிரதாயமும் உளது
மலையாளத்தில் லட்சுமி சந்நிதி இங்கே இருப்பது ஒரு சிறப்பாகும் .
9 யோகிகள்
இந்த ஸ்தலத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் திரு நவ யோகி என்று அழைத்தனர். அது காலப்போக்கில் மருவி திரு நாவாய் ஆகிவிட்டது .
மகாலட்சுமியும் கஜேந்திரனும் ஒரே குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து விஷ்ணுவைப் பூஜித்ததாகவும், லெட்சுமி முன் கூட்டியே வந்து தாமரைகளைப் பறித்துவிடுவதால் கஜேந்திரனுக்கு பூ கிடைக்காததால் அவர் விஷ்ணுவிடம் முறையிட்டததாகவும் தலவரலாறு செப்பும். உடனே விஷ்ணுவே லெட்சுமி, மலர் பறிப்பதைத் தடுத்து, தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் — ஒரே ஆசனத்தில்- அமர்த்திக்கொண்டதாகவும் தல வரலாறு பகரும்.
திருநாவாயில் மாமாங்கம் திருவிழா போல 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது.
கார்கடக அமாவாசை அன்று, வட கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கோயிலுக்குச் சென்று, தங்கள் மூதாதையர்களுக்கு மோட்சத்தைத் அளிக்குமாறு பித்ருகிரியைகளை (பலி தர்பணம்) செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதற்காக வருகிறார்கள் .
இக்கோவில் வளாகத்தில் கணபதி, ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச் சந்நிதி கள் இருக்கின்றன.
கும்பம் (மாசி) மாதத்தில் வரும் ஏகாதசி நாளை நவமுகுந்த ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மேஷம் (சித்திரை) மாதம் தொடக்கத்திலிருந்து பத்து நாட்கள் சிறப்பு விழா நடைபெறும் .
18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.
1520.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
3758.
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!— , நம்மாழ்வார்
xxxxxx
திருவித்துவக்கோடு

பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி என்னும் ஊருக்கு அருகில் திருவித்துவக்கோடு இருக்கிறது; ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர்.
இங்குள்ள விஷ்ணு கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று; குல சேகர ஆழ்வாரால் பாடப்பெற்றது ஆகையால் 1200 ஆண்டுக்கும் மேலாக பழமை உடையது .
மூலவர்- உய்யவந்த பெருமாள் , அபயப் ரதன் ;
நின்ற திருக்கோலம்; தெற்கு நோக்கிய சந்நிதி
தாயார் – வித்துவக்கோட்டு வல்லி , பத்மாசனி
தீர்த்தம் – சக்ர தீர்த்தம்
விமானம் – தத்துவ காஞ்சன விமானம்
பிராத்தியட்சம் ஆனது- அம்பரீஷன் முன்னால்
மங்களாசாசனம் –குலசேகர ஆழ்வார்
சிறப்பு அம்சங்கள்
சிவன் சந்நிதியும் விஷ்ணு சந்நிதியும் ஒரே கோவிலில் இருக்கின்றன. இது போல 108 வைணவ ஸ்தலங்களில் பத்து ஊர்களில் இருக்கின்றன.
கோவிலுக்குள் சென்றவுடன் முதலில் காட்சி தருவது சிவ பெருமான். அதற்குப் பின்னாலுள்ள சந்நிதியில் பெருமாளை சேவிக்கலாம். பெருமாளை வ்யூஹ அவதாரத்தில் காணவிரும்புவதாக அம்பரீஷன் வேண்டியதால் இங்கு பகவான் 4 அவதாரங்களில் தோன்றியதாக ஐதீகம். எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன்,அநிருத்தன் எனும் நான்கு வடிவங்களில் காட்சிதன்தா ர்.
நடுவில் உள்ள மூர்த்தியை தர்ம புத்திரரும்
மேற்கில் உள்ள மூர்த்தியை அர்ஜுனனும்
இடது புறத்தில் உள்ள மூர்த்தியை பீம சேனனும்
வலது உள்ள மூர்த்தியை நகுல, சகாதேவர்களும் பூஜித்ததாக வரலாறு.
அம்பரீஷன் முக்தி அடைந்ததும் பஞ்ச பாண்டவர் ஐவரும் வழிபட்டதும் கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டது.
XXXX Subham XXXXX
TAGS- கோவில் எண்கள்- 24, 25, திருநாவாய், திருவித்துவக்கோடு கோவில், PART 23