
Copper plated roof, Tiruvangad Ramaswami Temple
Post No. 12,804
Date uploaded in London – – – 6 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 25
கோவில் எண்–27 திரு வண் காடு TIRUVANGAD RAMASWAMI TEMPLE

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள் தொடர்ச்சி……………
கேரளத்தில் உள்ள மூன்று ராமர் கோவில்களில் திருப்ரியார் / திரு ப்பரையார் என்பதை முன்னர் கண்டோம். நேற்று திரு வண் காடு பற்றி கேட்டீர்கள். இதோ மேலும் சில சுவையான விஷயங்கள் .
தலைச்சேரி/ திருவண்காடு பெருமாள் கோவில்
பெருமாளின் விக்கிரகம் அழகான தோற்றத்துடன் இருக்கிறது ; கருவறைக்கு வெளியே இடது புறம் ஹனுமான், வலது புறம் சுப்பிரமணியர் , கணபதி சந்நிதிகள்; முக மண்டபம், நமஸ்கார மண்டபங்களும் இருக்கின்றன. அங்கு போர்க்களி பகவதி சிலை இருக்கிறது; கதகளி ஆட்டத்தின் நிபுணரான கோட்டயம் ராஜா வித்வான் தம்புரான் ,அவளை வாகீஸ்வரி என்று வணங்கியதால் அவள் புகழ் மேலும் பரவியது .
கூண்டுக்குள் பகவதி, வேகாத அரிசி நைவேத்தியம் !!
போர்க்களி பகவதி பற்றி சுவையான கதை யுமுண்டு ; இப்போது அவள் சிலை ஒரு மரக் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது ; ஒரு சமயம் கோவிலில் முரசு அடிக்கும் மாரருக்கும் அர்ச்சகருக்கும் இடையே சுவையான வாக்குவாதம் எழுந்தது . மாரர் சொன்னார் – நான் என் ஜண்டை வாத்தியத்தை பாணி யின் படி வாசித்தால் பகவதியே இங்கு நேரில் வந்துவிடுவாள்.
உடனே அர்ச்சக்கர் சொன்னார் – அப்படி வந்தால் உடனே நைவேத்தியம் படைக்கிறேன் .
முறைப்படி பாணி வாசித்தவுடன் பகவதி நேரில் வந்தாள் ; அர்ச்சகருக்கு நைவேத்தியம் செய்ய நேரமில்லை; களைந்த அரிசியை அப்படியே நைவேத்தியம் செய்தார்; தேவியோ அங்கும் இங்கும் அலையத் தொடங்கினாள். உடனே மந்திர தந்திரங்கள் மூலம் அவளது ஆட்டத்தை ஒடுக்கி கூண்டுக்குள் வைத்தனர். இன்றும் தண்ணீரில் களைந்த , வேகாத அரிசியே அவளுக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் உப்பிலியப்பன்/ ஒப்பிலா அப்பன் பிரசாதம் போல இது ஒரு கதை!!!
கலைக்கூடம்

திரு வண் காடு கோவில் ஒரு கலைக் கூடம் என்றால் மிகையாகாது; அற்புதமான மரச் சிற்பங்களில் ராமாயணக் காட்சிகளைக் காணலாம். புராண சிற்பங்களும் , இராமாயண ஓவியங்களும் இருக்கின்றன. கர்ப்பக்கிரக சுவர்களும் கூரையும் தாமிர/ செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது . அதன் உச்சியில் மூன்று தங்க ஸ்தூபிகள் .
கோட்டையா கோவிலா ?
இந்தக் கோவில், வரலாற்றில் பங்கு வகித்த, கோவில்; ஏனெனில் இங்குதான்- அதாவது கோவிலுக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் முக்கியக் கூட்டங்களை நடத்தி , மன்னர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதற்கு முன்னர் திப்பு சுல்தானின் படைகள் தாக்கி கோவிலின் சில பகுதிகளை அழித்தன .
திப்பு சுல்தானின் அட்டூழியம்
கிழக்குப் பகுதியிலிருந்து கோவிலைப் பார்த்தால் கோட்டை போலவே தோன்றும் .திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள் கோவிலின் 7 நிலைக் கோபுரத்தையும் கோவில் மதில் சுவர்களையும் இடித்துத் தள் ளின. இன்றும் அவற்றின் வடுக்களை, தடயங்களைக் காணலாம்.
திப்பு சுல்தான் கோவிலுக்கு அருகிலுள்ள குன்று பகுதியில் நின்று கொண்டு பீரங்கிக் குண்டுகளை கிழக்கு கோபுரத்தின் மீது வீசினான்; அதில் ஒரு குண்டு திரும்பி வந்து திப்புவின் பீரங்கியின் மீது விழுந்து அதைச் செயலற்றதாக ஆக்கியது. திப்பு, சகுனம் சரியில்லை என்று கருதி பின்வாங்கினான். அவன் படைகள் தங்கிய இடம் இன்றும் தூய தமிழ்ச் சொற்களால் பெரும் போர்க்களம்/ பெருங் களம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இறைவனின் பலி வேட்டை உற்சவம் இங்குதான் நடைபெறுகிறது .
திப்பு சுல்தானை வென்ற பிரிட்டிஷாரில் சிலர், கோவிலின் பக்தர்கள் ஆயினர் .

Two Shiva Temples in Rama temple

தாமஸ் ஹார்வி பாபர் THOMAS HARVEY BABER, 1815
தாமஸ் ஹார்வி பாபர் THOMAS HARVEY BABER , பெருமாளின் பக்தர் ஆனதோடு கோவிலுக்கு வந்து வணங்குவதை வழக்கம் ஆக்கிக்கொண்டார். இது ஏன் என்றால் அவர் ஒரு அதிசயத்தைக் கண்டார். முதலில் கோவிலை அவமதித்து, குதிரை மீதேறி, கோவில் வளாகத்திலும் பவனி வந்தார்; எல்லோரும் இப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தனர். அவரோ கேட்பதாக இல்லை. ஒரு முறை இப்படி கோவில் வளாகத்துக்குள் குதிரை சவாரி வந்தபோது, அது முன்னேயும் போகாமல் பின்னேயும் நகராமல் தெனாலி ராமன் குதிரை போல முரண்டு பிடித்தது. எல்லோரும் இதன் காரணத்தை விளக்கியவுடன் அவர் இறங்கி ராமபிரானுக்கு சல்யூட் அடித்தார் பின்னர் எல்லாம் சரியானது. அப்போது முதல் பெருமாளை சேவிக்கத் துவங்கிய அவர், கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்களையும் கட்டிக்கொடுத்தார். அவர் இப்படி சுவர் எழுப்பியதை இன்றும் அங்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டு பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.
The wall around this Pagoda was constructed under the supervision and patronage of T H Baber Esq in 1815
xxxx
கோவில் உற்சவம்
வருடாந்திர உற்சவம் மேடம்/மேஷம் மாதத்தில் விஷு அன்று துவங்கி 7 நாட் களுக்கு நடைபெறும் .
இந்தக் கோவிலில் ஒரு குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக சாக்கியர் கூத்து நடத்தி வருகின்றது .
தளி கோவிலைப் போலவே அறிஞர்களுக்கு பட்ட தானம் வழங்கப்படுகிறது; கோவில் மூலவர் பிரதிஷ்டை நடந்த மகர மாத திருவோண நட்சத்திரத்தன்று இந்தப் பட்டங்களை வழங்குவார்கள் .
இங்குள்ள மற்றும் ஒரு சிறப்பு ராமருக்கு களபம் சாத்துதல் ஆகும். அதாவது சந்தனத்தை ராமபிரானுக்கு சார்த்துவார்கள் ; ஹனுமனுக்கு அவல் பிரசாதம் .
இவ்வாறு கலைகள் , பூஜைகள் ஆகிய அனைத்திலும் எதாவது ஒரு புதிய அம்சம் இருப்பதை இந்தக் கோவிலில் காணலாம்.
—subham—
Tags- மூன்று ராமர் கோவில்கள், , PART 25, தலைச்சேரி, திருவண்காடு, பெருமாள் கோவில், TIRUVANGAD RAMASWAMI TEMPLE