தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம் செய்த ஆணூர்ச் சர்க்கரை! (Post No.12,814)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,814

Date uploaded in London –  –  9 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

கொங்குமண்டல சதகம் பாடல் 52

தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம் செய்த ஆணூர்ச் சர்க்கரை!

ச.நாகராஜன்

தமிழகத்தில் புலவர்களுக்கு அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தனிப் பெரும் கௌரவத்தைக் கொடுத்து வந்தனர்.

புலவருக்குப் பரிசுகள் வழங்குதல், அவர் வாயிலிருந்து ஆசிச் சொற்களைப் பெறுதல், அவர் மனம் நோகாமல் நடத்தல் என்பனவற்றில் அனைவரும் கவனம் செலுத்தி வந்தனர்.

கொங்குமண்டலத்தில் தமிழ்ப் புலவனை இகழவே இல்லை என்று சத்தியம் செய்த ஒரு தலைவனின் அற்புத வரலாறு உண்டு.

இதை கொங்குமண்டல சதகம் 52ஆம் பாடலில் படம் பிடித்துக் காட்டுகிறது.

கீழ்கரை பூந்துறை நாட்டில் திருச்செங்கோடு நகரில் ஏகாலியர் (கொங்க வண்ணார்) மரபில்  வீரபத்திரன் என்னும் தமிழ்ப் புலவர் கல்வி கேள்விகளில் வல்லவராய்த் திகழ்ந்தார். மக்களிடம் பெரும் மதிப்பும் பெற்றார்.

தான் கற்ற கல்வியை அனைவருக்கும் நல்க எண்ணி அவர் ஊர் தோறும் விஜயம் செய்தார். மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

ஒரு நாள் அவர் கொங்குமண்டலத்தில் காரையூரை அடைந்தார். அங்கு நாட்டுத் தலைவனாக விளங்கிய சர்க்கரை என்பாரை அவர் அணுகினார்.

சர்க்கரை அவரை உரிய விதத்தில் வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அவருக்கு அமுது படைக்க எண்ணிய அவர் தன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் அவருக்கு உணவு படைப்பதற்கு ஏற்றதைச் செய்யுமாறு கூறினார்.

அவர் மனைவியுடன் இருந்த சமயத்தில் வெளியே புலவருடன் இருந்த ஒருவர், “ஐயா! தங்களுக்கு உணவு படைக்கச் சிறிது நேரம் ஆகும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

இதைக் கேட்ட புலவர் உள்ளே ஏதோ நம்மைப் பற்றி இழிவுரை நடந்திருக்கிறது என்று எண்ணினார். ஆகவே தான் வலிய வந்து இப்படி இந்த ஊழியர் சொல்கிறார் என்று நினைத்த புலவர் மதியார் வீட்டில் உணவு உண்ண வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.

உள்ளேயிருந்து வந்த சர்க்கரை புலவரைக் காணாது திகைத்தார்.

அவர் சென்று விட்டார் என்பதைக் கேட்ட அவர் ஓடோடிச் சென்று அவரைக் கண்டு அவர் முன்னால் நின்றார்.

“புலவரே! என்ன நடந்தது? ஏன் வெளியே சென்று விட்டீர்கள்? எது நடந்திருந்தாலும் என்னை மன்னியுங்கள்” என்றார்.

உடனே புலவர்  மலர்ச்சியற்ற முகத்துடன், “எதிர்த்தோர்க்கு மிண்டன் வித்வான்களுக்குத் தொண்டன் என்ற விருது உங்கள் முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு அறிந்து உங்களைச் சந்திக்க வந்தேன். உள்ளே சென்று நீங்கள் உணவு அருந்துவதாக உங்கள் ஊழியர்கள் மூலம் கேள்விப்பட்டேன். வந்தவர்களை உபசரித்து உணவு ஊட்டிப் பின் தான் புசிக்க வேண்டும் என்பது நல்ல குடிப்பிறந்தவர்களின் கடமை.

அதுமட்டுமின்றி, உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று உபசரிக்காதவர் வீட்டில் புசிப்பது தகாது என்பதால் திரும்பி விட்டேன். ஒரு புலவன் ஒருவரது இல்லத்திற்குச் செல்வது அவருக்கு கீர்த்தியை விளைவிப்பதற்கே ஆகும். இதற்கு முன் புலவர் புகழ்ந்து உங்களைப் பாடி இராவிடில் உங்களைத் தேடி நான் ஏன் வருகிறேன்? ஏராளமானோர் இருக்க உம்மை ஏன் நான் தேடி வருகிறேன்?” என்று கூறினார்.

இதைக் கேட்ட சர்க்கரையார் அதிர்ந்து போனார்.

“ஐயா! புலவர் திலகமே! அறிஞர்களின் வடிவம். பிறப்பு முதலியவற்றை விசாரித்தல் மரபு அல்ல. புலவர்கள் பிரசங்கங்களாலும் நூல்களாலும் உலகிற்கு நல்லதைச் செய்கிறார்கள்; பெருமை சேர்க்கிறார்கள். என்னை கௌரவிக்க வந்துள்ள உங்களை நான் இகழவில்லை. இதை இப்போதே மெய்ப்பிக்கிறேன்” என்று கூறிய சர்க்கரையார் நெய்யைக் கொதிக்க வைத்து அதில் தன் கையை விட்டுச் சத்தியம் செய்தார்.

அவர் இகழவில்லை என்பதை அறிந்து கொண்ட புலவர் திருப்தியுடன் அவருடன் அமர்ந்து உணவு உண்டார்.

பின்னர் அவர், “ஐயா மன்றாடியாரே! நீர் சத்தியம் செய்தும் என்  மனம் சமாதானம் ஆகவில்லை. உமது சத்தியம் உண்மை என்றால் என் எச்சில் வாயைக் கழுவி விடுவீரா?” என்று கேட்டார்.

உடனே மகிழ்ச்சியுடன் புலவரின் எச்சில் வாயையும் கையையும் சர்க்கரையார் கழுவி விட்டார்.

புலவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

உடனே அவர் மீது கொண்ட பெருங்காதலால் ‘காதல்’ என்னும் ஒரு பிரபந்தத்தையே இயற்றினார்; அதை அரங்கேற்றினார்.

புலவர் மகிழும் படி சர்க்கரையார் அவருக்கு பரிசில் அளித்தார்.

இந்த வரலாற்றை இரகுநாத சேதுபதி சமஸ்தான தளவாய் அண்ணாமலை பிள்ளை மீது பொன்னாங் காணி அமுதகவிராயர் கூறிய விருத்தத்தில் கூறுகிறார் இப்படி:

சீரிலகுமான்மணிப் பாய்சுமந்தான் கம்பர் சிவிகை

       பாண்டிய னேந்தினான்

     செல்வமுயர் கச்சியப்பன் உதை பொறுத்தனன்றிழ்சுட்டி 

     சோமனீந்தான்

தாரிலகு குமணனுந் தலை கொடுத்தான் சிவன்
      றானுமொரு தூது சென்றான்

        சர்க்கரையு மெச்சில் வாய் கழுவினான் காளத்தி

      தனதிருகை புற்றிலிட்டான்

பேரிலகு கம்பயனும் விரலாழி யீந்தனன் பெரியவன்

     பெண்  கொடுத்தான்

      பிணிமுகத் தான் கீரனைப் புரந்தான் பேதை முதுகிலன்

     மொருவனிட்டான்

பாருலகி லித்தமிழ்க் குத்தொண்டு செய்தபேர்

        பார்க்கிற்’  கணக்கில்லையே

       பரராசர் பணிகின்ற வண்ணாமலைக் குரிசில் பாதத்தை

       வருடினானே

இந்த அமுத கவிராயர் ஒரு துறைக்கோவையாகப் பாடிய இரகுநாத சேதுபதி கி.பி. 1647 முதல் 1662 வரை வாழ்ந்தவர்.

 எனவே முந்நூற்றி எழுபது வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மகிழ்ந்துகா ரைப்பதியில் வாழ்சர்க் கரைதான்

புகழ்ந்து திரிபுல வோரை – இகழ்ந்து நான்

வையவில்லை யென்று சொல்லி மண்டலமெ லாந்துதிக்க

நெய்யிலே கையை விட்டா னேர்ந்து

–          செந்தமிழ்த் தொகுதி மூன்று – பக்கம் 22

–           

தூசர் குல வாணனுக்கோர் சோர்வுரைக்க வில்லையென

நேசமுட நேகாய்ந்த நெய்தனிறி கையை விட்டோன்

என இப்படி நல்லதம்பி சர்க்கரை – காதல் கூறுகிறது.

இப்படிப்பட்ட அற்புதமான வரலாற்றை கொங்குமண்டல சதகம் பதிவு செய்கிறது பாடல் 52இல் :

முகஞ்சோர்ந் தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்னநின்றே

யிகழ்ந்தே நிலையைய வென்று சுடுநெய் யினிற்கையைவிட்

டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி  யுவப்பியற்றி

மகிழ்ந்தே புகழ்பெரு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தன்னை இகழ்ந்ததாகக் கேள்வியுற்று முகம் வாடித் திரும்பிச் சென்ற வீரபத்திரன் என்னும் ஏகாலியர் குலத்தில் உதித்த புலவரைப் பின் தொடர்ந்து சென்று மறித்து நின்று, ‘ஐயா உம்மை இகழவில்லை’ என்று கொதி நெய்யில் கையை விட்டுச் சத்தியம் செய்து, அப்புலவனின் எச்சில் வாயைக் கழுவி அப்புலவனை மகிழ்வித்த சர்க்கரை என்னும் உபகாரி வாழ்ந்ததும்

கொங்குமண்டலமேயாம்.

***

Leave a comment

Leave a comment