கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்! (Post No13,221)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.221

Date uploaded in London – — 9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 10-5-2024  அக்ஷய த்ரிதியை 

அக்ஷய த்ரிதியை – சிறப்புக் கட்டுரை

கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்!

ச.நாகராஜன்

கிருஷ்ண ரகசியம்!

கிருஷ்ணர் தனக்குப் பிடித்தமான பல இரகசிய விஷயங்களை தகுதி உள்ளவர்களிடம் அவ்வப்பொழுது கூறியுள்ளார். இந்த ரகசியங்கள்.

நம் வாழ்வில் முன்னேறுவதற்கான ரகசியங்கள்.

இதில் கிருஷ்ண பஞ்சமி என்பது கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களாகும்.

கிருஷ்ண பஞ்சமி

கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!

 மஹாபாரதத்தில் ஆஸ்வமேதிக பர்வத்தில் (அத் 92) வரும் ஒரு விஷயம் கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களைப் பற்றிக் கூறுகிறது.

அமாவாசை, பௌர்ணமி தினங்களும் அவற்றை அடுத்து வரும் த்வாதசி தினங்களும் ச்ரவண நக்ஷத்திர தினங்களும் ஆக இந்த ஐந்து தினங்களும் கிருஷ்ண பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து தினங்களும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான தினங்களாகும்.

பர்வத்வயம் சா த்வாச்யௌ ச்ரவணம் ச நராதிப |

மத்பஞ்சமீதி விக்யாதா மதிப்ரியா ச விசேஷத: ||

அக்ஷய த்ருதியை

அடுத்து மிக முக்கியமான விஷயங்கள் நடந்தது அக்ஷய த்ரிதியை தினத்திலே தான்.

அவற்றில் மூன்று பிரதான விஷயங்களை இங்கு பார்ப்போம்.

மஹாபாரதம் இயற்ற ஆரம்பித்த தினம்

மஹாபாரதத்தை இயற்றுமாறும் அதற்காக கணபதியை த்யானம் செய்யுமாறும் பிரம்மா வியாஸரிடம் கூற அவர் விநாயகரை தியானித்தார்.

விநாயகர் அவர் முன் தோன்றி மஹாபாரதத்தை எழுதுவதாகவும் ஆனால் தனது எழுதுகோல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்குமாறு அவர் ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும் என்றும் வியாஸரிடம் நிபந்தனை விதித்தார். வியாஸர் யோசித்தார். ‘சரி’ என்று அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்ட வியாஸர், விநாயகரை நோக்கி, “ஆனால் பொருளைப் புரிந்து கொண்ட பின்னரே எழுத வேண்டும்” என்று எதிர் நிபந்தனை விதித்தார்.

விநாயகர் புரிந்து கொள்ளக் கஷ்டமான ‘கூட ஸ்லோகங்கள்’ என்று கூறப்படும் புதிர் ஸ்லோகங்கள் 8800-ஐ வியாஸர் அவ்வப்பொழுது இயற்றவே அவற்றின் பொருள் இன்னதென விநாயகர் யோசிக்கலானார். அப்போது வியாஸர் இன்னும் பல்லாயிரம் ஸ்லோகங்களை மனதில் கவனப்படுத்திக் கொண்டார்.

இப்படியாக இயற்றப்பட்ட மஹாபாரதத்தின் மொத்த ஸ்லோகங்கள் அறுபது லக்ஷம் ஸ்லோகங்கள். அவற்றில் முப்பது லக்ஷம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் நின்றன. பதினைந்து லக்ஷம் ஸ்லோகங்கள் பிதுர்லோகத்திலும் பதினான்கு லக்ஷம் ராட்சஸர்கள், யக்ஷர்களிடத்திலும் மீதி ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் மனிதர் வாழும் பூமியிலும் நின்றன.

இந்த மஹாபாரதம் இயற்ற ஆரம்பிக்கப்பட்ட தினம் அக்ஷய த்ருதியை தினம்.

செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கும் தினமான இதில் ஆரம்பித்த எதுவும் அழியாது. காலம் செல்லச் செல்ல புகழைப் பெறும்.

மஹாபாரதமே இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

சூரிய அனுக்ரஹமும் ஶ்ரீ கிருஷ்ணரின் அனுக்ரஹமும்

வனவாசத்தின் போது தன் நிலையை எண்ணி வருந்திய திரௌபதி சூரிய பகவானை நோக்கி வேண்ட சூரியன் அக்ஷய பாத்திரத்தை அவளிடம் தந்து அழியாத உணவைத் தரும் பாத்திரமாக அதை அளித்தான்.

துரியோதனனால் தூண்டப்பட்ட துர்வாச முனிவர் திடீரென்று ஒரு நாள் பாண்டவர் இருக்குமிடம் வந்து தான் அதிதியாக வந்திருப்பதைத் தெரிவித்து உணவருந்த ஸ்நானம் செய்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

உணவு நேரம் முடிந்து அக்ஷய பாத்திரத்தை சுத்தப்படுத்தி வைத்த திரௌபதி திகைத்தாள். கண்ணனை வேண்ட அவர் முன் தோன்றிய கண்ணபிரான அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வருமாறு திரௌபதியிடம் கூறினார்.

திரௌபதி கொண்டு வந்த அக்ஷய பாத்திரத்தில் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு அரிசி மணி இருக்க அதை உண்டார் கிருஷ்ணன். அனைவரது வயிறும் நிரம்பியது அந்தக் கணத்திலேயே. திருப்தியுடன் துர்வாசர் சென்றார்.

சூரியன் அக்ஷய பாத்திரத்தை திரௌபதியிடம் அளித்த தினம் அக்ஷய த்ருதியை தினம். ஶ்ரீ கிருஷ்ணர் அக்ஷய பாத்திரத்திலிருந்து ஒரு மணி அரிசியை உண்டு அனைவரையும் திருப்திப் படுத்தியதும் அக்ஷய த்ருதியை தினம் தான்.

குசேலரின் ஏழ்மை நீங்கிய தினம்

பால்ய சிநேகிதனான குசேலர் கிருஷ்ணன் அரசனாக அரசாள்வதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்து அவனைப் பார்க்கக் கிளம்புகிறார். அவரது மனைவி வெறும் கையுடன் அவரைப் பார்க்கப் போகலாமா என்று கேட்டு சிறிது அவல் கொண்ட மூட்டையை அவரிடம் தருகிறாள்.

கஷ்டப்பட்டு நண்பனின் அரண்மனையை அடைந்த குசேலர் கிருஷ்ணரைப் பார்த்து நலம் விசாரிக்க குசேலரைக் கட்டி அணைத்த கிருஷ்ணர் எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ என்று ஆவலுடன் கேட்டார்.

அவல் மூட்டையை சற்று வெட்கத்துடன் தந்தார் குசேலர். ஆவலுடன் அதைப் பிரித்த கிருஷ்ணர் ஒரு பிடி அவலை வாயில் போட்டுக் கொண்டார்.

ஏழை குசேலரின் சிறு குடில் அந்தக் கணமே மாட மாளிகை ஆனது. அவரது மனைவி குழந்தைகள் பட்டாடை மினுமினுக்க செல்வச் செழிப்புடன் ஆனார்கள்.

இப்படி குசேலருக்கு கிருஷ்ணன் அனைத்தும் அருளிய தினம் அக்ஷய த்ருதியை தினம் தான்.

இந்த தினத்தின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு.

அழியாத செல்வத்திற்கும் நீடித்த புகழிற்கும் காலத்தை வென்ற வெற்றிக்கும் நாம் எதையும் ஆரம்பிக்க வேண்டிய தினம் அக்ஷய த்ருதியை தினமே!

***

Leave a comment

Leave a comment