
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.225
Date uploaded in London – — 10 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் மே மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்!
ச. நாகராஜன்
நைமிசாரண்யத்தில் குழுமும் ரிஷிகளும் மகான்களும் தங்களை விட மூத்த ரிஷிகளை அணுகி, “எங்கள் முன்னோர்களின் சரித்திரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று பயபக்தியுடன் பவ்யமாகக் கேட்பது வழக்கம்.
அவர்களது சிரத்தையினால் மகிழும் மாபெரும் ரிஷிகள் அற்புதமான முன்னோர்களின் வரலாறுகளைக் கூறுவர்.
அதைக் கேட்கும் ரிஷிகள், எப்படிப்பட்ட உன்னதமான பரம்பரையில் வந்தவர்கள் நாம் என்று மனம் மகிழ்து உத்வேகம் பெற்று இன்னும் அதிகமதிகம் முன்னேறத் துடிப்பார்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்திலோ நம் முன்னோர்கள் சரித்திரத்தைக் கேட்பாரும் இல்லை; அதைச் சொல்வாரும் இல்லை; ஏன், அதை அறிந்து சொல்லக் கூடியவரும் அவ்வளவாக இல்லை.
இதனால் தான் நமது சரித்திரம் சிதைந்து சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது.
உலகிற்கே ஆயுர்வேதம் என்ற அற்புத சிகிச்சை முறையை அளித்தவர்கள் நாம்.
அதற்கு ஆசாரியராக சரகர், சுஸ்ருதர் போன்ற மாபெரும் மேதைகள் இருந்தனர்.
இவர்களைப் பற்றி முழுவதுமாக யாருக்குத் தெரியும்? அவர்களின் சிறப்புகள் பற்றி யார் அறிவர்? அறிவதற்கு ஆசையுடன் இருப்பவர்கள் யார்?

சுஸ்ருதர் 122 (சிலர் 125 என்று குற்ப்பிடுகின்றனர்) சஸ்த்ர சிகிச்சைக் கருவிகளை உருவாக்கி அனாயாசமாக உடலை பதமாக அறுத்து சிகிச்சை செய்ய வேண்டிய அங்கங்களுக்கு உரிய சிகிச்சை அளித்தவர் என்றால் நம்ப முடிகிறதா?
மூளை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வெற்றிகரமாக ஏராளமானோரின் உயிரைக் காத்த மாபெரும் வைத்தியர் அவர் என்பதை நமது வரலாறை சரியான முறையில் அணுகிப் பார்த்தால் தெரியவரும்.
இப்போது ஒரு கேள்வி எழும்?
அப்படியானால் அவர் கண்டுபிடித்த கருவிகள் எங்கே? அநத சிகிச்சை முறைகளை ஏன் யாரும் மேற்கொண்டு பின்பற்றவில்லை?
சரியான கேள்வி.
விடை காண சரித்திரத்தை நாட வேண்டும்.
ஆயிரக்கணக்கான பேர்களை கலிங்கப் போரில் கொன்று குவித்த அசோக சக்கரவர்த்தி மனம் மாறி புத்த மதத்தை ஏற்றான். அஹிம்சையே பரம தர்மம் என்பதை உணர்ந்தான். கொலைகாரக் கருவிகளை அவன் தடை செய்தான். ஆனால் சுஸ்ருதர் மருத்துவத்திற்காகக் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சை கருவிகளையும் சேர்த்து அவன் தடை செய்தான்.
அதைப் பின்பற்றுபவரையும் அவன் தடுத்து நிறுத்தினான்.
உயிர் காக்க உதவிய சஸ்த்ர சிகிச்சை கருவிகள் முற்றிலுமாக ஒழிந்து போயின.
பின்னால் ஏற்பட்ட முகலாய மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் கொஞ்ச நஞ்சமிருந்த மீதிக் கலைகள் பற்றிய அறிவை முற்றிலுமாக ஒழித்தன. அது இன்றைய நிலையில் கொண்டு விட்டிருக்கிறது!
மிஸௌரி கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் 2003-ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒரு அபூர்வ உண்மையைக் கண்டறிந்தனர்.
8000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் பல்லைக் குடைந்து பல் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர் என்பதே அந்த உண்மை. படிமப் பாறைகளை ஆராய்ந்த அவர்கள் இதைக் கண்டுபிடித்துக் கூறினர்.
இப்படி மருத்துவத் துறையில் சிகரம் ஏறிய ஒரு நாடு இந்தியா என்பதை அனைவரும் உணர வேண்டும்.
சுஸ்ருத சம்ஹிதா
சுஸ்ருதர் கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அவர் எழுதிய நூல் : சுஸ்ருத சம்ஹிதா.
இதில் 186 அத்தியாயங்கள் உள்ளன.
1120 வியாதிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.
700 மூலிகைகள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.
தாது வகைகளில் 64 தயாரிப்புகளும் மிருகங்களின் அடிப்படையில் 57 தயாரிப்புகளும் விளக்கப்படுகின்றன.
வியாதி வந்து சிகிச்சை தருவதை விட வியாதி வராமல் இருக்க வழி வகைகளைக் கூறுவதே முக்கியம் என்பது சுஸ்ருதர் கருத்து.
1.சூத்ர ஸ்தானம் 2. நிதான ஸ்தானம் 3. சரீர ஸ்தானம் 4. சிகித்ஸா ஸ்தானம் 5. கல்ப ஸ்தானம் 6. உத்தர ஸ்தானம்
என்று இப்படி ஆறு பிரிவுகளைக் கொண்டது இந்த நூல்
ஆஹர்யம் – உடலிலிருந்து அழுகிய பகுதிகளைப் பிரித்தெடுத்தல், பேத்யம் – துண்டித்தல், சேத்யம் – ஆழமாகக் கிழித்தல், எஸ்யம் – கண்டறிதல், லெக்ய – சுரண்டுதல், சிவ்யம் – தையல் போடுதல், வேத்யம் – சிறு துவாரம் இடுதல், விஷ்ரவனியம் – திரவங்களைப் பிரித்தெடுத்தல், என இப்படி பல்வேறு சிகிச்சை முறைகளை சுஸ்ருதர் நுட்பமாகக் குறிப்பிடுகிறார்.
அகுப்ரஷர்
சுஸ்ருதர் அகுப்ரஷர் பற்றியும் குறிப்பிடுகிறார்.
சூஸோ வேத சிகித்ஸா என்று இது குறிப்பிடப்படுகிறது.
சரீர ஸ்தானம் பிரிவில் 6 மற்றும் 8-ம் அத்தியாயங்களில் இது விவரிக்கப்படுகிறது.
ஆறாவது அத்தியாயத்தில் நாளங்கள் மற்றும் அது இருக்கும் இடங்கள் பற்றி நுட்பமாக விளக்கப்படுகிறது. இதை நன்கு அறிந்தால் தான் சிகிச்சை வெற்றிகரமாக இருக்கும் என்பதால் இதில் உள்ள 34 அத்தியாயங்களையும் ஒருவர் முறைப்படி படித்து அனுபவபூர்வமாக தேர்ந்தால் தான் சிறந்த வைத்தியராக ஆக முடியும்.
7வது அத்தியாயத்தில் 12 பகுதிகள் உள்ளன. இதில் நாளங்கள் உள்ள இடங்கள் கூறப்படுகின்றன. தமனிகள் எந்த நாளங்கள் வழியே செல்கின்றன என்பது உள்ளிட்ட நுண்ணிய விவரங்கள் தரப்படுவதோடு எந்த நாளங்கள் வாயு, பித்தம், கபம் ஆகியவற்றை ஏந்திச் செல்கின்றன என்பதும் விளக்கப்படுகிறது!
எட்டாவது அத்தியாயத்தில் இப்படிப்பட்ட சிகிச்சைமுறையில் தேர்ச்சியைச் சிலரே பெறமுடியும் என்பதும் எல்லோரும் சகட்டுமேனிக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.
எந்த பருவத்தில் எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
45 விதமான வியாதிகளுக்கு ஊசியின் அளவும் வடிவமும் தனித்தனியே இருக்க வேண்டும்.
இவர்களுக்கான பத்திய உணவு தனி.
சீனாவில் அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாக அகு ப்ரஷர் ஆனதும் அது பிரபலமாக ஆரம்பித்தது.
ஆனால் அதன் ஆரம்பம் பாரதமே என்பது சுஸ்ருத ஸம்ஹிதையால் தெரிய வருகிறது.
பழைய கலைகளை அதன் ,மகோன்னதமான ஸ்தானத்திற்கு மீண்டும் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து முயற்சி செய்தால் அதற்கு ஆதாரமாக அமைவது ஆயுர்வேதமாகும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் எல்லாக் கலைகளும் தானே வரும் இல்லையா, சிந்திப்போம், செயல்படுவோம்!
***
https://archive.org/details/sushruta-samhita
என்ற தளத்திலிருந்து இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருத நூல் இது. மொத்த பக்கங்கள் 500.
என்ற தளத்திலிருந்து இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் தொகுதி இது..
Kaviraj Kunja Lal அவர்களால் எடிட் செய்யப்பட்ட நூல் இது. 332 பக்கங்கள் கொண்ட நூல் இது. இதில் சுஸ்ருதரின் அறுவை சிகிச்சை கருவிகளின் படங்களையும் பார்த்து பிரமிக்கலாம்.
***