கால் பந்து மன்னன் பீலே! -1 (Post No.13,233)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.233

Date uploaded in London – — 12 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

கால் பந்து மன்னன் பீலே! -1

ச. நாகராஜன்

மிகுந்த ஏழ்மையில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி ஒரு நாட்டில் நடந்த போரையே தற்காலிகமாக நிறுத்தி தன்னைக் காணச் செய்த ஒரு பெரும் வீரர் யார்?

உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று!

பிறப்பும் இளமையும்

பீலே என்று உலகத்தினரால் அறியப்படும் எட்ஸன் அராண்டெஸ் டொ நாசிமெண்டோ 1940-ல் அக்டோபர் 23-ம் தேதி டொண்டின்ஹோ என்பவருக்கும் செலஸ்டி அராண்டெஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். சகோதரர்கள் இருவரில் இவரே  மூத்தவர். தந்தை ஒரு கால்பந்து விளையாட்டுக்காரர். பிரேஜில் நாட்டில் ட்ரெஸ் கொராகஸ் என்ற இடத்தில் அவர் பிறந்தார்.

மிக ஏழ்மையான குடும்பம்.

தனது 6-ம் வயதில் பீலே ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும், வறுத்த வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

தந்தையின் நண்பர் ஒருவரின் பெயரை தவறாக பீலே என்று உச்சரிக்க அவரை நண்பர்கள் செல்லமாக அவரை பீலே என்றனர். அதுவே நிலைத்து விட்டது.

ஆனால் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எடிஸன் பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டிருந்தது. தனது பெயருக்கு என்ன அர்த்தம் என்று தனக்குத் தெரியாது என்றும் போர்த்துக்கீசிய மொழியில் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்றும் அவர் தனது சுயசரிதத்தில் பின்னால் எழுதியுள்ள்ளார். ஆனால் எது எப்படியானாலும் உலகத்தினருக்கு அவர் பீலே தான்!

கால்பந்து விளையாட்டு

தந்தை கால்பந்தில் பயிற்சி தர, அந்த விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் கால்பந்து வாங்கக் காசில்லாமல் சாக்கில் கந்தல்துணிகளை அடைத்து கால்பந்து போலச் செய்து தனது பயிற்சியை அவர் தொடங்கினார். ஷூ போட வழியின்றி ஷு இல்லாமல் வெறும் காலோடு ஆங்காங்கே இருந்த விளையாட்டு மைதானங்களில் விளையாடி தனது விளையாட்டை அவர் செம்மைப் படுத்திக் கொண்டே இருந்தார்.

உலகக் கோப்பை வெற்றி

தனது 15-ம் வயதில் பிரேஜிலின் தேசிய விளையாட்டுக் குழுவில் சாண்டாஸ் நகரக் குழுவிற்காக அவர் விளையாட ஆரம்பித்தார்.

17-ம் வயதிலேயே உலகக் கோப்பையை வென்றார்.

1958, 1962, 1970 ஆகிய மூன்று போட்டிகளில் உலகக் கோப்பையை வென்ற அவரது சாதனையைப் பார்த்து உலகமே பிரமித்தது.

பிரேஜிலுக்காக அவர் 92 விளையாட்டுக்களில் 77 கோல்களைப் போட்டார். பிரேஜில் நாட்டின் கதாநாயகனாக ஆனார்.

இவர் விளையாடிய விளையாட்டுக்களில் ஒரு கோலாவது போட்டு விடுவார்.

1956-ல் விளையாடியதற்காக அவருக்குக் கிடைத்த தொகை வெறும் பத்து அமெரிக்க டாலர்களே! தனது வருமானத்தை வைத்துத் தான் குடும்பத்திற்காக கேஸ் ஸ்டவ்வையே முதலில் வாங்க வைத்தார்.

ஆனால் பெரும் விளையாட்டு வீரராக உலகை அவர் வலம் வந்த போது அவர் அமெரிக்காவில் தனது வருமானத்திற்கான வரியாக மட்டும் 20 லட்சம் டாலர்களைத் தர வேண்டி இருந்தது. சந்தோஷமாக அவ்வளவு பெரும் தொகையை அவர் வரியாகக் கட்டினார்.

பீலே போட்ட கோல்கள் எத்தனை?

பீலே கால்பந்து விளையாட்டில் போட்ட மொத்த கோல்கள் எத்தனை என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவுகின்றன. கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் அவரது சாதனையை அங்கீகர்த்து அவர் போட்ட கோல்கள் 1279 என்று அறிவித்திருக்கிறது. ஆனால் 2015-ல் பீலே தனன்னைப் பற்றிக் கூறுகையில் தான் போட்ட மொத்த கோல்கள் 1283 என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேஜிலுக்கு அவர் தந்த உலகக் கோப்பை

1958-ல் பீலே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு பிரேஜிலை முன் நிறுத்தினார். பின்னர் மூன்று உலகக் கோப்பைகளை வென்றார்.

இளம் வயதில் உலகக் கோப்பையை வென்றவரும் இவரே தான்,  மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரரும் இவரே தான்! 92 முறை ஹாட் ட்ரிக் கோல் அடித்த இவரது சாதனை என்றும் பேசும் பொருளாக ஆகி விட்டது! (ஒரு விளையாட்டில் மூன்று கோல்களைப் போடுவது ஹாட் ட்ரிக் சாதனையாகும்) 31 விளையாட்டுக்களில் இவர் நான்கு கோல்களைப் போட்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

1958-ல் இவர் நிகழ்த்திய சாதனையைப் பார்த்த மக்கள் இவருக்கு ‘ஓ ரெ’ என்ற பட்டப்பெயரைச் சூட்டினர். இதற்கான அர்த்தம் “மன்னன்” என்பதாகும்.

போரை நிறுத்திய பீலே

மின்னல் போல அங்குமிங்கும் களத்தில் அவர் விளையாடுவதையும் பந்து நகர்த்துவதையும் மடக்குவதையும் முன்னேறிச் சென்று அனாயாசமாக கோல் போடுவதையும் பார்க்க ஆயிரக்கணக்கானோர் முதலிலேயே வந்து நின்று விடுவர்.

அவரது தோற்றம் அனைவரையும் ஈர்த்தது. 1967-ல் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டு குழுக்களுக்குமிடையே நடந்த அந்த உக்கிரமான போர் பீலே அங்கு விளையாட வருகிறார் என்பது தெரிந்ததுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்காலிகமாக இரு நாட்கள் இப்படி ஒரு போரை தன் விளையாட்டால் நிறுத்திய ஒரே வீரர் அவரே.

அவரது பெயர் பொறித்த டி ஷர்ட்டுகளை அணிவது ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முப்பது சட்டைகள் வரை வைத்திருப்பர். இல்லாவிடில் அவர்களால் மைதானத்தை விட்டு வெளியேற முடியாது. அவ்வளவு டிமாண்ட் அந்தச் சட்டைகளுக்கு!

to be continued………………………………….

Leave a comment

1 Comment

  1. SundarShantha's avatar

    On his retirement dat Aur India released an ad. Maharaja telling something to Pele. You may add that your post

Leave a comment