
Date uploaded in London – 8 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
“ஆசாரக்கோவை நூல் சொல்லும் பயன்படும் ஆரோக்கிய குறிப்புகள்” (Post No.13,300) ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இது இரண்டாவது பகுதி
ஆசாரக்கோவை நூல் சொல்லும் மேலும் சிலஆரோக்கிய குறிப்புகளைக் காண்போம்
ஆசாரக்கோவை பாடல்கள்
பாடல் 46 : இல்லம் பொலியச் செய்வன
காட்டுக் களைந்து கலங்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பிலுள் தீப்பெய்க
நல்ல துறல்வேண்டு வார்.
‘பொருள் :
நல்ல செல்வத்தை அடைய விரும்புபவர், அதிகாலையில் எழுந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கி (பசுஞ்சாணம் தெளித்துத்) தூய்மை செய்து, குடங்களில் நீர் நிறைத்து, மலரணிந்து, இல்லம் விளங்கும்படி அடுப்பில் தீ மூட்டுதல் வேண்டும்.
என் கருத்து
இந்தப்பாடலை உற்று நோக்குவோம் உடலில் சுத்தம் தேவை ; பின்னர் நாம் வாழும் இடம் தூய்மையாக இருக்கவேண்டும் . அதுமட்டுமல்ல நாம் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்கவேண்டும் . இது எல்லாவாற்றிற்கும் மேலாக பாசிட்டிவ் வைப்ஸ் positive vibrations இருக்கவேண்டும். ஆகையால் பெண்கள் மலரணிந்து வலம் வருவதோ சமையல் செய்வதோ அவர்களின் சுத்தத்தை அறிவித்து இந்த இடத்தில் நல்லெண்ண உணர்வுகளைப் பரப்பும் .
உலகத்தில் எந்தப்பிராணியின் மலமும் துர் நாற்றத்தை வீசும்; கிருமிகளைப் பரப்பும். ஆனால் பசுமாட்டின் சாணிக்கும் மூத்திரத்துக்கும் கிருமிகளைக் கொல்லும் தன்மை இருக்கிறது. அடுப்பு மற்றும் சமயல் அறையை மெழுகவும் வாசலைச் சுத்தப்படுத்தவும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
xxxx

பாடல் 57 : ஆரோக்கியம் வேண்டுவோர் செய்யக்கூடாது
பாழ்மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;
நோயின்மை வேண்டு பவர்.
பொருள் :
நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவர் பாழடைந்த வீடு, கோயில், சுடுகாடு, ஊரில்லாத இடத்தில் தனியே இருக்கும் முதுமரம், ஆகிய இடங்களுக்கு தான் மட்டும் தனியே போக மாட்டார். பகலில் உறங்க மாட்டார்.
XXXXX
பாடல் 10 : குளிக்க வேண்டிய பொழுதுகள்
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும் ஐயுறா தாடுக நீர்.
பொருள் :
சந்தேகமின்றி உடனே நீராட வேண்டிய 10 பொழுதுகள் :
இறைவழிபாடு செய்வதற்கு முன்னரும், கெட்ட கனவு கண்டபின்னரும், அசுத்தப்பட்டபொழுதும், வாந்தியெடுத்த பொழுதும், மயிர்களைந்தபின்னரும், உணவுண்ணும் முன்னரும், மாலையில் தூங்கிய பின்னரும், ஆண்-பெண் சேர்க்கைக்கு பின்னரும், தூய்மையற்றவரை தொட்டபின்னரும், மலஜலம் கழித்த பின்னரும் அவசியம் குளிக்கவேண்டும்.
என் கருத்து
இதில் பெரும்பாலோருக்கு ஒப்புதல் இருக்கும். முடி வெட்டுதல் வாந்தி எடுத்தல், அசுத்தமானோரைத் தொடுதல் ஆகியன என்ன கெடுதல்களை உண்டாகும் என்பது கோவிட் என்ற சீன வைரஸ் நோய் உலகம் முழுதும் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்த பின்னர்தான் நமக்குப் புரிந்தது
xxxxx

பாடல் 12 : தவிர்க்க வேண்டிய சில
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்,
பிறருடுத்த மாசணியும் தீண்டார், செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.
பொருள் :
தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புகளில் தேய்க்கக் கூடாது. பிறர் உடுத்திய அழுக்கு ஆடைகளை தொடக்கூடாது. அவசரமான செயல் என்றாலும் பிறருடைய காலணிகளை அணிந்துசெல்லுதல் கூடாது.
என் கருத்து
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் தூசி, புழுதி அதிகம் இருக்கும். தலையில் எண்ணைப் பசை இருப்பதால் அதிக அழுக்கு சேர்ந்து ஒட்டிக்கொள்ளும். எல்லோரும் தினமும் தலை முழுகுவ தும் இல்லை. அந்த சூழ்நிலையில் தலையிலுள்ள எண்ணை உடலில் பட்டால் என்ன நிகழும் என்பது எல்லோரும் அறியக்கூடியதே. இந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டும் நீண்ட கூந்தல் உளது; பாடலை எழுதிய காலத்தில் ஆண்களும் நீண்ட சடைகளுடன் இருந்தனர். நிலத்தில் உழும் விவசாயி முதல் கோவிலில் பூஜிக்கும் அர்ச்சகர் வரை எல்லோருக்கும் நீண்ட முடி இருந்தது. கோவிட் நோய் பரவியது முதல் இப்போது செருப்பு, பிறர் துணியினை யாரும் தொடுவதற்கு அஞ்சுவர்.
–subham—
Tags —ஆசாரக்கோவை பாடல்கள், ஆரோக்கிய குறிப்புகள்-2,
குளிக்கும் நேரங்கள், குளித்தல்