WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.491
Date uploaded in London – —30 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (57)
ராமாயணத்தில் சாபங்கள் (57) வசிஷ்ட முனிவர் ஸௌதாஸருக்கு சாபம் கொடுத்தது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் அறுபத்தைந்தாவது ஸர்க்கம் ‘ஸௌதாஸ சரிதம்’ என்ற ஸர்க்கம்.
ராமர் சத்ருக்னனிடம் லவணனை வதம் செய்து வருமாறு ஆணையிட சத்ருக்னன் அதன் பொருட்டு பிரயாணத்தை மேற்கொண்டார். வழியில் இரவில் வால்மீகி ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அங்குள்ள யாகசாலை ஒன்றைப் பார்த்து இது யாருடையது என்று கேட்டார்.
உடனே மஹரிஷி வால்மீகி சௌதாஸ சரிதத்தைச் சொல்லத் தொடங்கினார்.
இக்ஷ்வாகு வமிசத்தில் தோன்றிய முன்னோர்களில் ஒருவர் சுதாஸர் என்ற சக்ரவர்த்தி. அவரது மகன் பெயர் வீரஸஹர். அவரை ஸௌதாஸர் என்று அழைப்பர். ஒரு நாள் அவர் வேட்டையாடச் செல்லும் சமயத்தில் இரு பேய்களைக் கண்டு அதில் ஒன்றை பாணத்தால் கொன்றார்.
அது அரக்கனது உருவமாக இருந்தது. இன்னொரு அரக்கன் ஸௌதாஸரைப் பார்த்து, “ஒரு அபராதமும் செய்யாத எனது துணைவனை நீ கொன்றாய். ஆகவே இதற்குப் பழி வாங்குவேன்” என்று சொல்லி விட்டு மறைந்து விட்டான்.
பின்னர் காலகிரமத்தில் ஸௌதாஸர் மன்னரானார். அப்போது அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்ய ஆரம்பித்தார். அதை வசிஷ்டர் நடத்தி வைத்தார். அது வெகு காலம் நீண்டது.
பழி வாங்க எண்ணிய அரக்கன் வசிஷ்ட முனிவராக வேடம் பூண்டு ஸௌதாஸரிம் வந்து, “ யாகம் முடிந்து விட்டது. இப்போது நர மாமிசத்துடன் உணவு படைப்பாயாக” என்றான்.
ஸௌதாஸனும் வந்திருப்பது மாறுவேடத்தில் வந்த அரக்கன் என்பதை அறியாது மாமிசத்தை (நிஜமான) வசிஷ்டருக்குப் படைத்தான்.
இதைக் கண்ணுற்ற வசிஷ்டர் மிக்க கோபத்தை அடைந்தார்.
உடனே இப்படி ஒரு சாபத்தை ஸௌதாஸ மன்னனுக்கு அளித்தார்:
யஸ்மாத்த்வம் போஜனம் ராஜன்மமைத்தாதுமிச்சஸி |
தஸ்மாத்போஜனமேததே பவிஷ்யதி ந சம்சய: ||
ராஜன் – ஹே, மன்னா!
த்வம் – நீ
மம – எனக்கு
ஏதத் போஜனம் – இந்த போஜனத்தை
தாதும் – அளிக்க
இச்சஸி – எண்ணினாய்
யஸ்மாத் தஸ்மாத் – ஆகவே
ஏதத் – இது ஒன்றே
தே – உனக்கு
போஜனம் – உணவாய்
பவிஷ்யதி – ஆகக் கடவது
ந சம்சய: – இதற்கு ஐயமில்லை.
இப்படி ஒரு சாபத்தை வசிஷ்டர் தந்தார்.
உடனே ஸௌதாஸர் தனது மனைவி மதயந்தியுடன் வசிஷ்டரை வணங்கி முன்பு வசிஷ்ட முனிவர் போல் வேஷத்தில் வந்தவன் சொன்னதைக் கூறினார்.
விஷயத்தை அறிந்து கொண்ட வசிஷ்டர் தவறு ஏற்பட்டதை அறிந்து
மீண்டும் அந்த சாபம் எப்போது முடிவடையும் என்று கூறினார்.
அதை அடுத்துப் பார்ப்போம்
**