
Date uploaded in London – 5 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஆந்திர பூமியில் புகழ்பெற்ற 5 நரசிம்மர் கோவில்கள் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20
ஆந்திர- தெலுங்கானா மாநிலங்கள் நரசிம்மர் வழிபாட்டில் முன்னிலையில் நிற்கின்றன . அங்குள்ள நரசிம்மர் கோவில்களை பஞ்ச (5) அல்லது நவ(9) நரசிம்மர் கோவில்கள் என்று பிரித்துள்ளார்கள்.
நரசிம்மர் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று. பிரஹலாதன் என்ற சிறுவனைக் காப்பாற்றுவதற்காக , விஷ்ணு சிங்க முகத்துடன் தோன்றி நாஸ்தீகனான ஹிரண்யகசிபுவைக் கிழித்தெறிந்தார்.
நரசிம்மர் கோவில்களில் யோக நரசிம்மர், லெட்சுமி நரசிம்மர் , உக்ர நரசிம்மர் என்று பல வகைகள் உண்டு
புகழ்பெற்ற பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் யாவை ?
இவற்றில் மூன்று ஆந்திரத்திலும் இரண்டு தலங்கள் தெலுங்கனாவிலும் உள்ளன. காடுகளுக்கு இடையே மலைப்பாங்கான பகுதிகளிலோ அல்லது கிருஷ்ணா நதிக்கரையிலோ அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
ஸ்ரீ யோகாநந்த நரசிம்ம கோவில் , மட்டபள்ளி ;
ஸ்ரீ லெட்சுமி நரசிம்ம கோவில், வட பள்ளி ;
ஸ்ரீ வஜ்ர நரசிம்ம கோவில், கேதவரம் ;
ஸ்ரீ பனகல நரசிம்ம கோவில்; மங்களகிரி
ஸ்ரீ யோகாநந்த நரசிம்ம கோவில் , வேதாத்ரி
xxxx
நவ நரசிம்ம ஸ்தலங்கள் யாவை ?
ஆந்திரத்தில் அஹோபிலம், சிம்மாசலம், பஞ்சலகோண, வேதாத்ரி, அந்தவேதி ,மங்களகிரி, மலகொண்ட அல்லது மலயாத்ரி யதகிரி, தர்மபுரி (தெலுங்கானா பகுதி),
அஹோபிலம் என்னும் இடத்தில் மட்டுமே நவ நரசிம்மர்களும் உண்டு (முன்னர் வெளியான கட்டுரையில் விவரங்கள் உள்ளன.
முதலில் மங்களகிரி-பனகல நரசிம்மர் கோவிலைத் தரிசனம் செய்வோம் .
எங்கே இருக்கிறது ?
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா அருகில் இருக்கிறது. விஜயவாடா நகரிலிருந்து 13 கி.மீ மட்டுமே. நல்ல அருமையான சாலை போடப்பட்டுள்ளது. உள்ளுர் பஸ்களும் மங்களகிரி வரை செல்கின் றன.
யானை உருவத்தில் அமைந்துள்ள குன்றின் மேல் கோவில் இருக்கிறது. பங்கல நரசிம்மர் என்றும் மக்கள் சொல்லுவார்கள் இந்த இடத்துக்கு வேதாத்ரி, தோத்தாத்ரி, தர்மாத்ரி என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
நமுசி என்ற அரக்கனை துவம்சம் செய்த இடம் என்றும் அவன் ரத்தம் ஓடிய ஆறு சிவப்பானதாகவும் கதை. இப்போது அந்த ஓடை வெறும் சிவப்பு மணலுடன் காணப்படுகிறது
சிறப்புகள் என்ன ?
தென் இந்தியக் கோவில்களில் உயரமான கோபுரம் உடைய கோவில்களில் இது குறிப்பிடத்தக்கது.
பானகம் என்னும் ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் உடைய வெல்லநீரை எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். பாதி வெல்ல நீரை நரசிம்மர் வாய்க்குள் விட்டால், அதை அவர் விழுங்கும் சப்தம் கேட்கும். பாதி பானகத்தை மட்டும் சிலையின் வாயில் ஊற்றிவிட்டு மிச்சசத்தை நமக்கு பிரசாதமாகக் கொடுப்பர்.
இந்தக் கோவிலின் வரலாறு சாதவாஹனர் காலம் முதல் துவங்குவதால் 2300 ஆண்டுகள் வரலாறு இருக்கிது . சாத வாஹனர் காலம் துவங்கி விஜய நகர பேரரசசு காலம் வரை வழிபடப்பட்டுள்ளதை அறிகிறோம்.
பல சாது சன்யாசிகளால் பாடப்பெற்ற தலம் இது. சிருங்கேரி சங்கராசார்யார்களில் ஒருவர் நரசிம்மரை வழிபட்டு துதிகளை இயற்றியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ண சைதன்யப் பிரபு 1310-ல் வந்து சென்றதையும் அறிகிறோம். ராமாநுஜாசாரியாரும் வந்தார்.
யானை வடிவான குன்று ஆதலால் கல்வெட்டுகளில் ஹஸ்திகிரி, யானை மலை என்றே குறிப்பிட்டுள்ளனர். மதுரை அருகிலுள்ள யானை மாலையிலும் பாண்டியர் கால நரசிம்மர் கோவிலும், நிறைய கல்வெட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது
இந்த யானை மலை பற்றி இன்னும் ஒரு கதையும் மக்களிடையே வழங்குகிறது. பரியாத்ரா என்ற மன்னரின் மகன் ருஷ்ய சுருங்கி இங்கே தவம் செய்து தானே யானையாக வந்து குன்று ஆகி நரசிம்மருக்கு கோவில் அமைக்க இடம் ஆனான் என்பது அந்தக் கதை
சுமார் 400 படிகளைக் கடந்தால் கோவிலை அடையலாம்.
மங்களகிரி நரஸ்மிம்மர் சிலையின் வாய் அகலமாகக் காணப்படும்.சுமார் 15 செ .மீ. திறந்த வாய்; இதுஒரு குடைவரைக் கோவில். சிற்பங்கள் அதிகம் இல்லை. லெட்சுமி சந்நிதி, பின்புறம் அமைந்துள்ளது. கருடனுடைய சிலை கோவிலுக்கு வெளியே இருப்பதால், முன்னர் வேறு ஒரு கோவில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
முஸ்லீம் சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோவிலின் புகழ் மங்கியது. பின்னர் அமராவதி வெங்கடாத்ரி நாயுடு 153 அடி உயர ராஜ கோபுரத்தை எழுப்பினார். 11 நிலைகள் கொண்ட இந்த கோபுரம் ஒல்லியாக (slender) இருக்கும்.
xxxx
அதிசயக் கிணறு கண்டுபிடிப்பு
2023ம் ஆண்டு கோவில் வளாகத்தில் ஒரு ஆழமான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது முதலில் கோவில் குளம் என்று நினைத்து தோண்டிப்பார்த்தனர். ஆனால் அது 152 அடி ஆழம் வரை சென்றது. வடக்கிலுள்ள படிக்கட்டு கிணறு போல அமைக்க நினைத்து ஒருவேளை பாதியில் நிறுத்திவிட்டா ர்களோ என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலுள்ள மண்ணை 3500 லாரிகளில் ஏற்றி அனுப்பினார்கள். இது விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் – அதாவது 400 முதல் 600 ஆண்டுகளுக்கு முன்னர்— தோண் டப்பட்டிருக்கலாம் இந்த இடத்தில் கல்வெட்டுகள், தாமிர நாணயங்கள் முதலியனவும் கிடைத்தன.
மங்களகிரியில் மேலும் இரண்டு பழைய கோவில்கள் உள .அவை ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணர் கோவில்கள் ஆகும்.
–SUBHAM—
TAGS- ஆந்திர பூமியில் புகழ்பெற்ற 5 நரசிம்மர் கோவில்கள் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20