அவ்வையாரின் ஆத்திச்சூடியில்   அருமையான மருத்துவ அறிவுரைகள்-2 (Post No.13,616)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,616

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Part 2

33.காப்பது விரதம்

33.FASTING MUST BE OBSERVED

உண்ணாவிரதம் இருப்பதால் வயிற்றுக்கும் குடலுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. இதனால் உடலும் மனமும் சுத்தமாகிறது. இந்துக்கள் மாதத்துக்கு இரண்டு  முறை வரும் ஏகாதஸி நாட்களை பட்டினி விரதத்துக்கு ஒதுக்கியுள்ளனர். . அந்த நாட்களில் இறைவனையும் நினைக்க வேண்டும்; நாம் உணவில்லாமல் இருக்கும்போதுதான், ,உணவே கிடைக்காமல் கஷ்டப்படுவோரின் நிலையும் நமக்கு விளங்குகிறது.

உடனே வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது :

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.–குறள் 322

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

xxx

54.சோம்பித் திரியேல்

54.DO NOT WANDER ABOUT IN IDLENESS

சோம்பேறியாக வாழ்க்கை நடத்தி, உறவினர்கள் சேர்த்துவைத்த சொத்து சுகங்களை அனுபவித்தால் , பிற்காலத்தில் உடம்பு வேலை செய்ய வணங்காது . மேலும் மன நிலையும் பாதிக்கப்பட்டு சூதாட்ட, சீட்டாட்டங்களில் ஈடுபடும்.. இழப்புகள் வருகையில் மன நிலை  பாதிக்கப்பட்டு மன நோயாளி ஆகிவிட வாய்ப்பு உண்டு.

xxxx

59. துன்பத்திற்கு இடம் கொடேல்.

59.DO NOT GIVE WAY TO TROUBLE

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.–குறள் 621

–என்ற வள்ளுவன் குறளை நினைவிற் கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை. மன நிலை பாதிக்காதபடி இருக்க கவலைப் படுவதை நிறுத்த வேண்டும்.

xxxx

நீர் விளையாடேல்.

69.DO NOT PLAY IN WATER

கடல், ஆறு, குளம்,ஏரி , கிணற்றில் தவறி விழுந்து இறப்போரின் செய்திகள் வாரம் தோறும்  பத்திரிக்கைகளில் வருகின்றன. குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும்தான் இப்படி இறக்கிறார்கள் நீச்சல் தெரிந்தபோதும் அதிக உற்சாகத்தில் எல்லை மீறி நடந்து கொள்கிறர்கள்  ஆகையால் இந்த எச்சரிக்கையை சிறுவர்களிடம் பரப்பவேண்டும்.

xxxx

நுண்மை நுகரேல்.

70.DO NOT EAT DAINTIES/ OR NOT NICE IN FOOD

இதை நொறுக்குத் தீனி கூடாது என்று பொருள் கொள்ளலாம்..

உடலுக்கு அவசியம் இல்லாத, ருசிக்காக தின்னும் உணவுகள் இவை.

குறிப்பாக நொறுக்குத் தீனிகள் எண்ணெய்ப் பண்டங்களாகவோ அல்லது இனிப்புப் பண்டங்களாகவோதான் இருக்கும்; அவை இரண்டும் சர்க்கரை வியாதி, கொழுப்புச் சத்து தொடர்பான இருதய நோய்களை உண்டாக்கும். ஒருவேளை சத்தான உணவானாலும் கூட , முதலில் சாப்பிட்டது செரிமானம் ஆன பின்னரே அடுத்த உணவினை எடுக்க வேண்டும் . இதை வள்ளுவன் அழகாகச் சொல்லுவான்  :

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்–குறள் 942

முன் உண்ட உணவு செரித்த தன்மையை  அறிந்து தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. என்பது இதன் பொருள்.

xxxx

நைவினை நணுகேல்.

74.DO NOT GO NEAR WHAT IS DANGEROUS/ DO NOT FOLLOW WHAT IS DESTRUCTIVE.

அபாயகரமானது எது , கெட்டது எது என்பதை புஸ்தகங்கள் சொல்லுவதை விட பெரியோர்கள் சொல்லுவதை விட, ஒருவரின் மனச்சாட்சியே சொல்லிவிடும் ; 12 வயத்துக்குக் குறைவான சிறுவர், சிறுமியருக்கு வேண்டுமானால் நாம் சொல்லித் தெரியும். ஏனையோருக்கு சொல்லாமலேயே தெரியும்.

சட்டத்தின் பிடியில் சிக்குவோர் எல்லாம் இப்படி ஆபத்தான அறநெறிக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு அகப்படுவதை , பிடிபடுவதை நாம் அன்றாடம் பத்திரிகைகளில் படிக்கிறோம். அப்படியும் இது நூற்றாண்டுக் கணக்கில் நடைபெறுவதால் அவ்வை நம்மை எச்சரிக்கிறார் ; இது ஒருவரின் மன நிலையை மிகவும் பாதிப்பதோடு அந்தக் குடும்பம், அவரது நெருங்கிய நண்பர்கள் மன நிலையையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை

xxx

நோய்க்கு இடம் கொடேல்.

76.DO NOT GIVE OCCASION TO DISEASE

வள்ளலார் ஒருமையுடன் நினது …….என்ற பாடலில் நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் என்று முருகனை வேண்டுகிறார் . அபிராமி பதிகம் பாடிய அபிராமி பட்டர் கலையாத கல்வியும் …….. என்ற பதிகத்தில் கழுபிணி இலாத உடல் வேண்டும் என்கிறார் . திருப்புகழில் அருணகிரிநாதரோ ஏராளமான பாடல்களில் நோய்களின் பட்டியலைக் கொடுத்து , அவைகள் எல்லாம் வேண்டாம் என்கிறார். திருமூலரும் உடலே கோவில் என்று சொல்லி அதைப் பாதுகாக்க அறிவுறுத்துகிறார். ஏன் ?

நாம் உணவு விஷயத்திலும் ஒழுக்கம் விஷயத்திலும் கவனம் செலுத்தாவிடில் நோய்க்கு இன்விடேஷன் அனுப்பி என் வீட்டுக்கு/ உடலுக்கு வந்து தங்கி விட்டுப்போ என்று சொல்வதற்குச் சமம் ஆகும் .

அந்தக் காலத்தில் என் மேல் படாதே என்னைத் தொடாதே என்று சொன்னதை எல்லாம் கிண்டல் செய்தவர்கள் கோவிட் என்னும் சீன வைரஸ் பரவிய காலத்தில் படவும் இல்லை; தொடவும் இல்லை; அது மட்டுமல்ல; மூன்றடி விலகி நின்றனர் ; வாயை மூடி கவசம் போட்டனர் ; வெளிநாட்டுத் தலைவர்களும் கைகூப்பி நமஸ்தே சொன்னார்கள் ; நோய்க்கு இடங்கொடேல் என்பதை விளக்க இவை போதும் !

அவ்வையார் போன்றோர் இதே ஆத்திச் சூடியில் உணவு பற்றிதான் நம்மை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார்கள்.

இதை மேலும் காணப் போகிறோம்.

தொடரும் …………………………

Tags- அவ்வையார், ஆத்திச்சூடி,  அருமையான மருத்துவ அறிவுரைகள்  பகுதி -2, நோய், உணவு, நீர் விளையாட்டு

Leave a comment

Leave a comment