ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? (Post No.13,623)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.623

Date uploaded in London – 3 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? 

ச. நாகராஜன் 

ஏழை, பணக்காரன், ஆண், பெண், குழந்தை, முதியவர் ஆகிய பேதமின்றி எல்லா மனிதருக்கும் ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணி நேரமே கிடைக்கிறது. இதை இன்னும் இரண்டு மணி நேரம் கூட்ட முடியுமா என்ற கேள்வியே விசித்திரமானது தான்!

 என்றாலும் கூட வின்ஸ்பனெல்லா என்ற நேரக்கட்டுப்பாட்டு நிபுணர் ‘ ‘தி 26 ஹவர் எ டே’ என்ற தனது புத்தகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் அதிகமாகப் பெறுவது சாத்தியமே என்கிறார்!

 ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கத்தில் கழிகிறது. இப்படி எட்டு மணி நேரம் தூங்கியும் பகல் நேரத்தில் சக்தி இன்றி, செய்ய வேண்டிய வேலைகளைத் திறமையின்றி செயலாற்றி, தோல்வி அடைவோரைப் பார்க்கிறோம்.

 ஆனால் தூக்கத்தைத் திறம்படச் சக்தி உள்ளதாக ஆக்கி அதன் மூலம் அதை நாளைக்கு இரண்டு மணி நேரம் அதிகம் பெறும் அற்புதமாக்கலாம் என காஸ்பர் பொடாவ்ஸ்கி என்ற தூக்க இயல் நிபுணர் கூறுகிறார். தூக்கம் பற்றிய உலகின் பிரபல ஆராய்ச்சியாளரான இவர், ‘பவர் ஃபுல் ஸ்லீப்’ என்ற அரிய நூலை எழுதியுள்ளார்.

 ஒரேயடியாக எட்டு மணி நேரத் தூக்கத்திற்குப் பதிலாக பவர் நேப் (POWER NAP) எனப்படும் குட்டித் தூக்கம் அதிக சக்தியைத் தரும் என்பது விஞ்ஞானி பொடாவ்ஸ்கி கூறும் உண்மை!

 “இந்தத் தூக்கத்தில் சில ரகசியங்கள் உள்ளன. அதை அறிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்!

 தூக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. முதல் நிலையும், இரண்டாம் நிலையும் லேசான தூக்கத்தைத் தருவதாகும். இந்த நிலைகளில் இருப்பவரைச் சுலபமாக எழுப்பி விடலாம். இந்த இரண்டு நிலைகளும் தரும் சக்தி அற்புதமானது.

 “இரண்டாம் நிலையோடு நிற்கும் தூக்கம்” பத்து நிமிடத்தில் கிடைத்து விடும்! இது எட்டு மணி நேரம் ஒருவர் தூங்கினால் எந்த புத்துணர்ச்சியைப் பெறுவாரோ அதைத் தந்து விடும். இந்தச் ‘சக்தித் தூக்கம்’ என்பது 45 நிமிடங்களோடு முடிந்து விடுகிறது.

 மூன்றாம் நிலை, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை தூக்கம் ஆகியவை ஆழ்ந்த உறக்கம் எனப்படுகிறது.

 45 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை தூங்கும் போது இந்த ஆழ்ந்த உறக்க நிலை ஆரம்பிக்கிறது; அடையப்படுகிறது.

 இந்தத் தூக்கத்தின்போது உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில் உடல் உஷ்ணம், இதயத் துடிப்பு, சுவாச எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது.

 ஆகவே தான் குட்டித் தூக்கம் போட்டால் வழக்கமான தூக்க நேரம் குறைவதோடு அதிக சக்தியை அபரிமிதமாகப் பெறலாம். இதைப் ‘பூனைத் தூக்கம்’ என்பார்கள். 45 நிமிட நேரம் அதிகம் என்பதால் அதிக பட்சமாக 15 முதல் 20 நிமிடக் குட்டித் தூக்கமே போதுமானது.

 அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி பகலில் எந்த நேரத்தில் ‘பவர் நேப்’ செய்யலாம் என்பதை அவரவரே கண்டுபிடிக்கலாம்; நிர்ணயிக்கலாம்!

 ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் உணவு இடைவேளையில் ஒரு பத்து நிமிடம் பூனைத் தூக்கம் போடுபவர்கள் புத்துணர்ச்சி பெறும் ரகசியத்தை அறிந்தவர்கள்!

 இந்தக் குட்டித் தூக்கத்திற்குப் பின்னர் எந்த வேலை செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது. இதுவே உடல் உஷ்ண நிலையை சீக்கிரம் உயர்த்த வழி வகுக்கிறது. ஆக, பகலில் எந்த நேரத்தில் பத்து நிமிடம் தூங்க வேண்டும்,  எழுந்தவுடன் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற இரண்டு ரகசியங்களை உணர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு நிச்சயம் இரண்டு மணி நேரம் அதிகம் பெறலாம்! ஏனெனில் எட்டு மணி நேரத் தூக்கத்தை வெகுவாகக் குறைத்து எட்டு மணி நேரத் தூக்கத்தில் பெறக் கூடிய ஆற்றலை விட மிக அதிக ஆற்றலை பவர் நேப் மூலம் பெறலாம் என்பதே நிதர்சனமான உண்மை!.

சினேகிதி மாத இதழில் 2005, ஆகஸ்ட் மாதம் வெளியான கட்டுரை.

xxxxx

Leave a comment

Leave a comment