குழந்தைகளும் ‘பெரிய யோசனை’  சொல்வார்கள்! (Post No.13,639)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.639

Date uploaded in London – 7 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

குழந்தைகளும் பெரிய யோசனை’ சொல்வார்கள்! 

ச. நாகராஜன் 

‘ஜர்னல் ஆஃப் கிரியேடிவ் பிஹேவியர்’ என்ற பத்திரிகை படைப்பாற்றலை, பயிற்சியினால் மேம்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது. அறிவியல் பூர்வமாக 170 உத்திகள் படைப்பாற்றலை மேம்படுத்த உள்ளன என்கிறது அது!

இந்த உத்தியில் ஒன்று ‘ஐடியா ஜெனரேஷன் டெக்னிக்’ எனப்படும் புதிய யோசனையை உருவாக்குவது! இதை உங்கள் வீட்டுக் குழந்தைகள் செய்ய முடியும் என்று சொன்னால் ஏளனப் புன்னகை பலருக்குத் தோன்றினாலும் தோன்றக் கூடும்! ஆனால் ஸ்வீடன் நாட்டுக் குழந்தைகள் வாங்கிய மழைக்காடுகள் பற்றிய உண்மைச் சம்பவத்தைக் கேட்டால் ‘அட, அப்படியா’ என்று ஆச்சரியப்படுவீர்கள்.

ஸ்வீடன் கிராமப்புறப் பள்ளி ஒன்றில் ஒரு ஆசிரியை! அவர் பெயர் ஈனா கெர்ன்.  ஒரு நாள் பாடம் நடத்துகையில் தென் துருவப் பகுதியில் ரெய்ன் ஃபாரஸ்ட் எனப்படும் மழைக்காடுகள் அழிந்து வருகின்றன என்று கூறிய கெர்ன் அதனால் சின்னச் சின்ன மிருகங்கள் முற்றிலுமாக அழிந்து வருகின்றன என்றார். வகுப்பறையில் இருந்த அனேகம் குழந்தைகள் நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை வளர்த்து வந்ததால் பெரிதும் கவலையுற்றனர். ‘மழைக்காடுகள் என்றால் என்ன? அதை நாங்கள் பார்க்க வேண்டும்’ என்று குழந்தைகள் அடம் பிடித்தனர்!

‘பெரியவர்களானவுடன் நீங்களே அதைப் பார்க்கலாம்” என்று கெர்ன் கூறிய போது, “அதற்குள் மிருகங்கள் இறந்து விடும் என்கிறீர்களே” என்றனர் குழந்தைகள்.

இந்த நிலையில் தான் ஒரு குழந்தை எழுந்து, “அந்தக் காடுகளை நாமே வாங்கி விட்டால் என்ன? அப்போது அதை யாராலும் அழிக்க விடாமல் செய்யலாமே” என்று கூறியது.

இன்னொரு ஆசிரியையாக இருந்தால் இந்த யோசனையைக் கேட்டு சிரித்து இருப்பார். கெர்ன் அப்படி இல்லை! அவர்களை ஊக்கப்படுத்தினார்.

குழந்தைகள், மழைக்காடுகள் வாங்க எவ்வளவு பணம் வேண்டும், ஒரு இடத்தை வாங்குவது என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்! எல்லாவற்றையும் விளக்கினார் கெர்ன்.

எல்லாக் குழந்தைகளும் உற்சாகமாகப் பணியைத் தொடங்கினர். சின்னச் சின்ன எக்ஸிபிஷன்கள், குதிரை ஓட்டம், நாய் ஓட்டப் பந்தயம், முயல்கள் கலந்து கொண்டு தாண்டி ஓடும் ரேஸ் என்று பல சிறுசிறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் செய்தி மெதுவாக நாடெங்கும் பரவியது. ஸ்வீடனின் அனைத்துப் பள்ளிகளும் இதில் ஈடுபட்டன. ஒரு புதுப்பாடல் உருவாக்கப்பட்டது.

“ஆஹா, அற்புதமான

மழைக்காடுகளே!

நீங்கள் ஏன் அழிய

வேண்டும்?

எல்லா உயிரினங்களுக்கும்

நீங்கள் தேவை

நாங்கள் அழிவைத்

தடுப்போம்!

நீங்கள் துண்டிக்கப்படக்

கூடாது!

எங்களுக்கு நீங்கள் தேவை!

முதலில் ஒரு சிறு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்த குழந்தைகள் பல நாடுகளிலிருந்து ஆதரவு குவியவே மழைக்காடுகளையே வாங்குமளவு பணத்தைச் சேர்த்தனர்!

ஸ்வீடன் தேசத்து அரசர் அந்தப் பள்ளிக்கு நேரடியாக வந்து குழந்தைகளைப் பாராட்டினார்!

உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைத் தீர்க்க குழந்தைகளிடம் வழி கேளுங்கள் என்கிறார் கெர்ன்!

நாளைக்கு உங்கள் குழந்தை ஒரு யோசனை சொல்லும்போது ஸ்வீடன் தேசத்துச் சம்பவத்தை நினைவில் கொண்டு அதற்குரிய மதிப்பைக் கொடுத்து அதை அமுல்படுத்த முடியுமா என்று பாருங்கள்.

சிறுபிள்ளைத்தனமான யோசனை என்று சொல்வது தான் சிறுபிள்ளைத்தனமானது. 170 படைப்பாற்றல் உத்திகளில் மேம்பட்ட உத்திகளுள் ஒன்று குழந்தைகளின் யோசனை!

**

சினேகிதி மாத இதழில் 2005, ஜூலை மாதம் வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment