WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.652
Date uploaded in London – —11 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்!
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் கவிதா இலக்கியம் உலகில் பரவி பாராட்டப்படும் அளவில் அதிகமாகப் பேசப்படாதவை அவரது அற்புதமான கதைகள்!
இவற்றில் ஒன்று நவதந்திரக் கதைகள்.
கதைக்குள் கதை சொல்லும் பாணி தொன்று தொட்டு பாரத நாட்டில் இருந்து வரும் ஒரு பாணி. பஞ்ச தந்திரக் கதைகள்,விக்கிரமாதித்தன் கதைகள் போல மஹாகவி அமைத்திருக்கும் ஒரு தொடர் கதை நவதந்திரக் கதைகள்.
சுதேசமித்திரன் இதழில் 10-8-1916 முதல் தொடராக இது வந்தது. சில சமயம் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை.
மிக நீண்ட தொடராக அமைய வேண்டிய இது முற்றுப் பெறவும் இல்லை. 26-2-1918 இதழுடன் இது நின்று விட்டது.
இந்தக் கதைகள் பாரதி பிரசுராலயத்தாரால் 1928-ம் வருடம் நூலாக வெளியிடப்பட்டது.
இதற்கு தினமணியில் க.நா.சு. அவர்கள் ஒரு விமரிசனத்தையும் எழுதி இருந்தார்.
வேதாரண்யத்தில் விவேக சாஸ்திரி என்ற பிராமணருக்கு மூன்று குமாரர்கள். அவர்களுக்கு உலகியல் ஞானம் இல்லை என்று குறைப்பட்ட சாஸ்திரி தனது ஆயுள் முடிய இன்னும் ஒரு வருடமே இருப்பதால் கவலை மிகக் கொண்டார்.
தன் குமாரர்களை லௌகீக ஞானம் பெறும் பொருட்டு சில கதைகளைக் கூறலானார்.
அதுவே நவதந்திரக் கதைகள்.
இந்தக் கதைகளில் நுட்பமான செய்திகள் மஹாகவியால் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.
கதைகளில் மனிதர்களோடு பறவைகளும், விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன.
எளிய நடை, ஆங்காங்கே தனக்கே உரித்தான நகைச்சுவை, படிக்கத் தூண்டும் கதை அமைப்பு ஆகியவற்றால் இது சிறந்து விளங்குகிறது.
தெய்வ பக்தி எதையும் சாதிக்கும். விவேகம் வெற்றி தரும். துரோகம் செய்வது பாவம். தன் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம். நேர்மை, அன்பு, விவேகம், இறை பக்தி இவை அனைத்தும் நல்லனவற்றை நல்கும் என்பன போன்ற நீதிகளை இந்தக் கதைகளை ஊன்றிப் படித்து அறியலாம்.
விவேக சாஸ்திரி தனது பிள்ளைகளுக்குக் கூறுவது போல மஹாகவி அனைத்து மக்களுக்கும் நீதிகளைச் சொல்கிறார்.
ஆனால் மிக பிரம்மாண்டமாக அமைய வேண்டிய இந்தத் தொடர் டக்கென்று முடிந்தது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டமே!
கதையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். இவை முழுக் கதையையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
இந்தக் கதைகளை இணைய தளத்தில் இப்போது படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
1
ஆராய்ந்து காரியத்தில் இறங்கு!
கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்?
2
மானி அய்யன் மாணிக்கஞ் செட்டியிடம் கூறுவது:
மானி அய்யன் : “கதையில்லை, செட்டியாரே, காரியம்.
இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டுவோனையும், தலையிலே வைத்து, சாமர்த்தியமுள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?”
3
ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!
சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- “ம யே ம ஏ” . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்.”
நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,
“மற்றவனை யேமாற்றியவனை
மற்றவன் ஏமாற்றுவான்”
4
பக்தியுடன் விவேகம் சேர்ந்தால் வெற்றி!
விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: “தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்” என்றார்.
5
தெய்வ பக்தி மேன்மையான பலன்களைத் தரும்!
இதுவரை சொன்ன பகுதி ‘பயனறிதல்’ எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு ‘நம்பிக்கை’ என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கடமுண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்” என்றார்.
6
பக்தியும் கர்மமும்
“பக்திமான் பிழைகளும் செய்வானோ?”
விவேக சாஸ்திரி: “மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்.”
ஆஞ்சநேயன்: “கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?”
“விவேக: “பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும்.
இது போன்ற ஏராளமான அருமையான அறநெறி உபதேசப் பகுதிகளை இந்த நவதந்திரக் கதைகளிலிருந்து நாம் பெறுகிறோம்.
பாரதியார் இலக்கியத்தை மூன்று வகையாக அணுகலாம்.
கவிதை
கட்டுரை
கதைகள்.
இதில் கவிதை பற்றி ஏராளமான நூல்கள் வெளி வந்து விட்டன.
கட்டுரை மற்றும் கதைகள் பற்றி அவ்வளவாக நூல்கள் வெளியாகவில்லை.
இனி வரும் காலத்தில் இவை குறித்தும் அதிக நூல்கள் வெளிவரும் என்று நம்புவோம்!
***