இன்றையப் பெண்களுக்கு இயந்திரங்களே தெய்வம்! (Post No.13,689)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.689

Date uploaded in London – 20 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இன்றையப் பெண்களுக்கு இயந்திரங்களே தெய்வம்! 

ச. நாகராஜன் 

அறிவியல் முன்னேற்றத்தின் தாக்கம் அதிகம் ஆக ஆக அதற்கு ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் பெண்கள், தாங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று புரியாமல் இன்று தவிக்கின்றனர். 

பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இனிய மாலை நேரங்களில் பக்தர்களின் கேள்விகளுக்கு அன்னை பதில் அளிப்பது வழக்கம். 

ஒருநாள் சாதாரண நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது லட்சியமாக இருக்க வேண்டும் என்ற வினா எழுப்பப்பட்டது. 

“சாதாரண வாழ்க்கையில் பெண்களுக்கு உடல் நலமும், சீரிய லயமுமே லட்சியமாக இருக்க வேண்டும்” என்றார் அவர். 

ஆனால் வேகமயமான இன்றைய உலகில் பெண்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் இரண்டு பெரிய இழப்புகள் அவர்களின் உடல் நலமும், சீரிய லயமுமே! எதிலும் டென்ஷன்! எங்கும் டென்ஷன்! 

தேவியே பெண்ணுருவம் கொண்டு இந்தியப் பெண்களுக்கு வழி காட்ட வந்தது என்று கருதப்படும் மா ஆனந்த மயி பெண்களைத் தம் அருகே இழுத்து அணைத்து வாழ்க்கையின் புதிய பரிணாமத்தைக் காட்டி புது அர்த்தத்தைத் தந்தவர். 

கமலா நேருவும் அவருடைய புதல்வி மறைந்த பாரதப் பிரதமர் இந்தியா காந்தியும் அடிக்கடி அவரை நாடி வருவது வழக்கம். அவர் மறைந்த போது ஹெலிகாப்டரில் டார்ஜிலிங் வந்து அஞ்சலி செலுத்தினார் இந்திரா காந்தி. பெண்களை மிக நெருக்கமாகத் தம் அருகில் வரச்செய்வது, அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சரி சமமாக உயர முடியும் என்று உணர்த்துவது ஆகிய காரணங்களுக்காகவே அவர் பெண்ணாக உருக்கொண்டார் என்பது பக்தர்களின் எண்ணம்.

 இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண்மணி என்ன ஆன்மீக சாதனையை மேற்கொள்ள முடியும் என்று ஒரு பெண் கேள்வி கேட்ட போது அவர் எளிமையாக இரண்டே வார்த்தைகளில் பதில் தந்தார் – “சேவையும், ஜபமும்”. 

“தன்னலமற்ற சேவையைச் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் அர்ப்பண மனப்பான்மையுடன் செய்யுங்கள். இறைவனை நினைத்து ஒவ்வொரு பணியும் அவன் தந்த பல்வேறு வாய்ப்புகளே என்று நினைத்து அதில் ஈடுபடுங்கள்” என்றார் அவர்!

 இயற்கையின் சூழலில் இன்பமாக ஒரு காலத்தில் வாழ்ந்த பெண்மணிகள் இன்று காலையில் தண்ணீருக்காக மோட்டார் ஸ்விட்சைப் போட்டு,  மாவு அரைக்க கிரைண்டரை இயக்கி, மிக்ஸியில் அரைத்து, டெலிபோனில் தான் கிளம்புவதை அறிவித்து, ஸ்கூட்டரில் ஏறி அலுவலகம் அடைந்து, லிஃப்டில் பரபரப்புடன் ஏறி, தன் இருக்கையில் கணினி முன்னே அமர்ந்து அதை டென்ஷனுடன் ஆன் செய்து இயக்க ஆரம்பிக்கிறார்கள். 

நாள் முழுதும் மெஷினுடன் போராடி மாலையில் வீடு திரும்பியவுடன் தொலைக்காட்சிப் பெட்டி முன்னே சீரியலுக்கு மீளாத அடிமை ஆகிறார்கள். கணவனுக்கு அடிமையாக இருப்பதா என்று ஒரு காலத்தில் போர்க்கொடி தூக்கிய இவர்கள் இன்று மெஷின்களுக்கும் டி.வி. சீரியல்களுக்கும் அடிமையாகி இருப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! இவர்களைப் பார்த்து மெஷின் வொர்ஷிப்பர்ஸ் என்று பிரபல கவிஞர் டி.எஸ். எலியட் கேலி செய்வதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை!

 ஶ்ரீ சத்ய சாயிபாபா, பெண்கள் தங்களின் லட்சியமாக உதயபாரதியைக் கொள்ள வேண்டும் என்று கூறி விளக்குகிறார்.

 சங்கரருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடந்த விவாதத்தில் மண்டனமிஸ்ரரின் மனைவியான உதயபாரதியே நடுவராக இருந்தார். பாரபட்சமற்ற தீர்ப்பு கிடைக்கும் என்று சங்கரரும் அதற்குச் சம்மதித்தார். 

:இந்த மாலைகளை அணிந்து கொண்டு வாதிடுங்கள். தோற்றவரின் மாலை வாடி விடும் என்று கூறி உதயபாரதி ஆளுக்கு ஒரு மாலையை வழங்கினார். வாதத்தைக் கவனித்தவாறே, அவர் தனது சமையல் வேலைகளையும் இதர வீட்டு வேலைகளையும் செய்து கொண்டே இருந்தார். 

மண்டனமிஸ்ரரின் மாலை வாடியது. அவர் தோற்றார். ஆனால் உதயபாரதி விடவில்லை. “அவரில் பாதி நான். ஆகவே என்னையும் ஜெயித்தால் தான் மறு பாதியையும் ஜெயித்து முழு வெற்றி அடைந்ததாக அர்த்தம் என்று கூறி, தானே களத்தில் இறங்கினார். 

சங்கரரிடம் அவர் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்க, பதில் அளிக்க அவர் யோசிக்க வேண்டியதாக இருந்தது. இறுதியில் ஞான சரஸ்வதியாக இருந்த உதயபாரதியை சங்கரர், ‘சாரதை’யாக உணர்ந்து வணங்கினார். 

சீரியல் வொர்ஷிப்பராக இருப்பதை விட்டு விட்டு உடல் நலம், வாழ்க்கையில் சீரிய நலம், சேவை, ஜபம் என்ற லட்சியங்களை ஏற்று புதுமைப் பெண்கள் உதயபாரதிகளாக மாறினால் புதிய பாரதம் உருவாகும், இல்லையா?! 

சினேகிதி மாத இதழில் 2003, நவம்பர் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment