பகவத் கீதையை அறிமுகப்படுத்திய ஜெர்மானியர் (Post No.13,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,715

Date uploaded in London – 27 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிராமணர்களின் (BRAHMIN EMIGRATION) தென்கிழக்காசிய குடியேற்றம் பற்றியும், இந்தோனேஷியாவின் கவி மொழி KAWI LANGUAGE

பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் வில்லியம் வான் ஹம்போல்ட் 1767-1835 (WILHEM VON HUMBOLDT 1767-1835). சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சேவைகளைச் செய்தது குறிப்பிடத் தக்கது.

கவி மொழி என்பது இந்தோனேஷியாவில் வழங்கிய பழைய ஜாவானிய மொழி. OLD JAVANESE . இந்துக்களின் பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் உருவானதுபோல  தென் கிழக்காசியா முழுதும் கவி என்னும் எழுத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பயன்பட்டது. இதைக் கொண்டு சென்றவர்கள் பிராமணர்கள் என்பது ஹம்போல்ட்டின் துணிபு. இந்தோனேஷிய மொழிகளில் பிராக்ருதக் கலப்பு இல்லாமல் தூய சம்ஸ்க்ருதம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் இது பற்றிச் செய்த ஆராய்ச்சி நீடிக்க முடியாதபடி அவரது மரணம் குறுக்கிட்டது. முதல் தொகுதி மட்டும் அவரது சகோதரர் அலெக்சாண்டர் மற்றும் அறிஞர் புச்மான் (ALEXANDER VON HUMBOLDT, J K E BUSCHMANN)  மூலம் 1836- ஆம் ஆண்டில் வெளியானது.

இந்தத் தொகுதியின் முதல் பகுதியில் இந்தியா – ஜாவா தொடர்பும், இரண்டாவது பகுதியில் கவி மொழி ஆராய்ச்சியும் மூன்றாவது பகுதியில் மலாய் மொழி ஆராய்ச்சியும் உள்ளன.

கவி மொழியில் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதால் இந்திய ர்கள் அரசியலிலும் கலாசாரத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தது விளங்கும்  இதற்கு காரணம் பிராமணர்கள் குடியேற்றம். அவர்கள் மஹாபாரத, இராமாயண இதிஹாஸக் கதைகளை எடுத்து வந்து பரப்பினார்கள். இதனால் தோல் பாவைக்கூத்து (PUPPET SHOW) , பொம்மலாட்டக் கலைகள் தோன்றின.

புத்த சமண மதங்கள் பரவும் இடங்களில் பிராகிருத மொழியின் தாக்கத்தைக் காணலாம். கவி மொழியில் அவை இல்லாமல் தூய ஸம்ஸ்க்ருதம் இருப்பதால் பிராகிருதம் தோன்றுவதற்கு முன்னுள்ள ஆதிகாலத்திலேயே பிராமணர்கள் இந்தக் கதைகளை கொண்டுவந்திருக்க வேண்டும் என்பதும் அவரது துணிபு.

இதற்கெல்லாம் முன்னர் ஹம்போல்ட் செய்த முக்கிய பணி பகவத் கீதை பற்றி ராயல் பிரஷ்யன் அகாடமி ROYAL PRUSSIAN ACADEMY வெளியீடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு (1825 TO 1827) கட்டுரைகள் எழுதியதாகும். கீதையின் முழுக்கருத்துக்களையும் வெளியிடுவதே தனது லட்சியம் என்றார். சம்ஸ்க்ருத இலக்கணம் தொடர்பான கட்டுரைகளை ஸ்லெகல் நடத்திய A E SCHLEGEL’S INDISCHE BIBILOTHEK பத்திரிகைகளுக்கு எழுதினார் .

****

எங்கே பிறந்தார்? எங்கே சம்ஸ்க்ருதம் கற்றார் ?

கார்ல் வில்லியம் வான் ஹம்போல்ட்  ஒரு மொழியியல் அறிஞர், ராஜதந்திரி ஆவார்  அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் சம்ஸ்க்ருத அறிஞர் பிரான்ஸ் பாப்பை  (FRANZ BOPP)  அலுத்து ஸம்ஸ்க்ருதத் துறையை உருவாக்கினார்

அவருடைய மொழிக்கொள்கை —

ஒரு மொழியின் குணமும் கட்டமைப்பும் அதைப் பேசுவோரின் அறிவையும் வாழ்க்கையையும் காட்டிவிடும் என்று முதன் முதலில் அறிவித்தார் . இவைகள் மக்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதையும் காட்டினார்.

அவர் பிறந்த இடம் பாட்ஸ்டேம் POTSDAM ;

பிறந்த தேதி -22-6-1767

முதலில் அவர் பிரஷ்யா எனப்படும் ஜெர்மனியின் தூதராக இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். அந்தப் பதவியைத் துறந்த பின்னர் பெர்லின் யூனிவர்சிட்டியைத் தோற்றுவித்தார். மாணவர்கள் அறிவை வளர் ப்பதோடு ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும்; நிறைய ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தினார்

மேலும் பல பதவிகளை வகித்த அவர்,  பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்  தனது சொந்த எஸ்டேட்டில் வசித்தவர் 8-4-1835 –ல் காலமானார்.

ஸம்ஸ்க்ருதப் படிப்பு

முதலில் கிரேக்க இலக்கியம் பற்றி கட்டுரைகள் எழுதினார் ஸ்பெயினில் பயணம் செய்தபோது உலகில் வேறு எதிலும் ஒட்டாமல் தீவு போல நிற்கும் பாஸ்க் BASQUE  மொழியில் ஆர்வம் ஏற்பட்டது; அந்த மொழி பற்றிய இவரது கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

அவர் லண்டனில் பிரான்ஸ் பாப்  (FRANZ BOPP) என்பவரிடம் சம்ஸ்க்ருதம் பயின்றார். சம்ஸ்க்ருதம் மற்றும் சீன மொழி ஆகிய இரண்டும் முழுக்க முழுக்க வித்தியாசமானவை என்பனவற்றை உணர்ந்து ஒப்பிட்டு இலக்கணம் குறித்தும் எழுதினார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப் பல புதுமைகளை புகுத்தி மொழியியல் ஆராய்ச்சியில் புத்துணர்வு ஏற்படுத்தினார்.

—SUBHAM—

TAGS-பகவத் கீதை, அறிமுகம், ஜெர்மானியர் , கவி மொழி ,

வில்லியம் வான் ஹம்போல்ட்

Leave a comment

Leave a comment