காந்திஜியின் வாழ்க்கையில்…! (Post No.13,735)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.735

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம்.

மகாத்மாவிற்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

காந்திஜியின் வாழ்க்கையில்…! 

ச.நாகராஜன்

1

டிக் டிக் பையன்!

ப்ரதாப் ஒரு குழந்தை. ஒரு நாள் பாபுஜியின் வாட்ச் அவர் இடுப்பிலிருந்து தொங்குவதை அவன் கவனித்தான். அவனுக்கு ஒரே ஆவல் அது என்ன என்று தெரிந்து கொள்ள!. தன் தாயாரின் புடவையைப் பிடித்து இழுத்த அவன், அந்த வாட்ச் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தான்.

காந்திஜிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். என்றாலும் கூட தேவையற்ற விஷயங்களில் குழந்தைகள் பிடிவாதம் பிடித்தால் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதை நல்லவிதமாக நயமாகச் சொல்லித் திருத்த வேண்டும் என்பார்.

ஆகவே வாட்சைக் கேட்ட ப்ரதாபின் அருகில் வந்த காந்திஜி அதை அவன் காதுகள் அருகே ஆட்டி, “ இதோ பார்! இது எப்படி டிக் டிக் என்று அடிக்கிறது என்று. ஆனால் இது உன்னுடைய பொம்மை இல்லை. இது என்னுடையது. ஆகவே இது உனக்குக் கிடைக்காது” என்று மெதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அன்றிலிருந்து அந்தப் பையனை காந்திஜி பார்க்கும் போதெல்லாம், இருவரும் டிக் டிக் என்று அழைத்துக் கொள்வார்கள்.

அத்துடன் அந்த விஷயம் முடிந்தது!

2

பொதுமக்கள் பணத்தில் வீண் செலவு கூடாது!

பாபுஜியின் பேரனான காந்திலால் மைசூரில் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பாபுஜியின் ஆசிரமத்திற்கு வந்த போது ஒரு பெரிய விவாதம் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத நிலையில் அந்த விவாதம் நடக்கும் போது ராம்நாராயண் சௌத்ரி அங்கு சென்று சேர்ந்தார். அவர் இருக்கும் போது இன்னும் 15 நிமிடங்கள் விவாதம் தொடர்ந்தது.

விஷய்ம் வேறொன்றுமில்லை. காந்திலாலுக்கு இன்னொரு வேஷ்டி வேண்டுமாம். அதற்காக அவர் காந்திஜியிடம் அதைக் கேட்க காந்திஜி அது அனாவசியம் உள்ளதே போதும் என்று சொல்லி விட்டார். இதற்காகத் தான் இருவருக்குமிடையே பெரிய விவாதம்!

காந்திஜி தர மாட்டேன் என்று சொல்லவே காந்திலால் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

உடனே ராம்நாராயண் காந்திஜியிடம், “பாபுஜி, உங்கள் நேரம் விலை மதிப்பற்றது. இந்த சாதாரண விஷயத்திற்கா இவ்வளவு பெரிய விவாதம்” என்று சொல்ல ஆரம்பித்தார்; இடை மறித்தார் காந்திஜி.

“நீங்கள் சொல்ல வருவது என்ன என்று எனக்குப் புரிகிறது.விஷயம் சிறிதா பெரிதா என்பது முக்கியம் அல்ல. அதில் அடங்கி இருக்கும் கொள்கை என்ன என்று பார்க்க வேண்டும். நிச்சயம் அவசியம் என்றால் ஆயிரம் ரூபாய் கூட செலவழிக்கலாம்.  மனிதனின் நிச்சயமான தேவைக்கு முன்னால் பணம் ஒரு பொருட்டே அல்ல. பால்கோபாவின் சிகிச்சைக்கு பணத்தைத் தண்ணீராக நான் செலவழித்தது உங்களுக்குத் தெரியும்.  அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவே இல்லை.  ஆனால் இன்னொரு வேஷ்டி வேண்டும் என்று காந்தி கேட்கும் போது, அதை எப்படி என்னால் அளிக்க முடியும்?”  என்றார் காந்திஜி.

பொதுமக்கள் பணத்தைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதற்கு இது போல் ஏராளமான சம்பவங்கள் உண்டு.

3

பாரம்பரியப்படி பெரியோருக்கு மரியாதை!

இந்திய பாரம்பரியத்திற்கு இணங்க பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் காந்திஜிக்கு விருப்பம் அதிகம்.

ரவீந்திரநாத் தாகூரின் அண்ணனான போரா தாதாவைக் கண்டால் அவர் எழுந்து நின்று வரவேற்பார். அவர் விடை பெறும் போதும் நின்று வழி அனுப்பி வைப்பார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியா இதை நேரில் பார்த்தவர்.

தனக்குப் பிடித்தவர்களின் செல்லப் பெயரைச் சொல்லியே அவர்களை அழைப்பது பாபுஜியின் வழக்கம் – அவர்கள் வயதில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதிலும் கூட!

காகா, மாமா, குருதேவ் என்று இப்படி காந்திஜி செல்லப் பெயர்களைச் சூட்டுவது வழக்கம்!

**

அற்புதமான வாழ்க்கையில் கணம் தோறும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை வாழ்ந்து காட்டியவர் மகாத்மா.

செயலில் ஒவ்வொரு கணமும் அதை அவர் செய்து காட்டிய போது ஆசிரமத்தில் அவர் கூட இருந்த அனைவரும் அதை நன்கு கற்றுக் கொண்டனர்.

மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் RAM NARAYAN CHAUDHARY அவர்கள் எழுதிய BAPU AS I SAW HIM என்ற ஆங்கிலப் புத்தகத்தின் சில தமிழாக்கப் பகுதிகளாகும்.

நன்றி NAVAJIVAN TRUST , 1959

Leave a comment

Leave a comment