திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 1 (Post No.13,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.817

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

திருக்குறள் மர்மம் 

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 1 

ச. நாகராஜன்

திருக்குறளில் மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன.

இந்து மதக் கருத்துகளின் அடிப்படையில் தமிழ் வேதமாக திருக்குறள் மலர்ந்திருக்கிறது என்பதிலும் சந்தேகம் இல்லை.

இந்து மதம் வலியுறுத்தும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய பல அருமையான கருத்துக்களைத் திருக்குறளில் காணலாம்.

சொர்க்கம் என்ற வார்த்தையை திருவள்ளுவர் திருக்குறளில் பயன்படுத்தவில்லை என்றாலும் தேவர் உலகம், புத்தேளிர் உலகு, புத்தேள் உலகு, புத்தேள் நாடு என்பன போன்ற வார்த்தைகளால் சொர்க்கத்தைக் காட்டுகிறார்.

முதலில் சொர்க்கத்தைப் பற்றி வள்ளுவர் கூறும் குறள் பாக்களைக் காணலாம்.

தேவர் உலகம் என்னும் பொருளில் வரும் குறள் இது:

பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு                 (குறள் 58)

இல்லத்தரசிகள் தம் தம் கணவன்மாரைப் போற்றித் தம் கடமையை ஆற்றினாரெனில் வானவர் வாழும் உலகத்தின் பெரும் சிறப்பைப் பெறுவர். (இவ்வுலக இன்பமும் விண்ணுலகு (சொர்க்கத்தின்) இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.)

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற  (குறள் 213)

கைமாறு எதிர்பார்க்காது பிறருக்குச் செய்யப்படும் உதவி ஒப்புரவு எனப்படும்.

பிறருக்கு உதவி செய்யும் ஒப்புரவைப் போல – சேவையைப் போல நன்மை தருகின்ற பிற அறச்செயலை தேவர் உலகத்திலும் இந்த நிலவுலகத்திலும் காண்பது அரிது.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு    (குறள் 234)

ஒருவன் இந்த பூமியில் வறியவர்களுக்குக் கொடுத்து தனது நீண்ட புகழைப் பரப்பி நின்றால் தேவர் உலகம் அவனை வரவேற்குமே அல்லாது தேவர்களைப் போற்றாது.

வறியவர்களுக்குக் கொடுக்கும் குணம் உள்ளவர்களை தேவர் உலகம்

வரவேற்கும். தேவர்களைக் கூட அந்த உலகம் போற்றாது என்கிறார் வள்ளுவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு                 (குறள் 290)

களவு செய்யும் திருடர்களுக்கு உடம்பில் உயிர் வாழும் நிலை தவறி விடும். ஆனால் திருடாமல் வாழ்பவர்க்கு புத்தேள் உலகம் என்னும் சொர்க்கம் தவறாமல் கிடைக்கும்.

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை       (குறள் 966)

தன்னுடைய மானத்தை விட்டு இகழ்கின்றவர்கள் பின் சென்று பணிந்து நிற்கும் ஒருவனின் நிலையால் இவ்வுலகில் புகழ் கிடைக்காது. மறுமையில் தேவருலகத்திலும் கொண்டு சேர்க்காது. அப்படி இருக்க இகழ்பவர் பின்னால் செல்வதால் என்ன பயன்?

தேவர் உலகத்திலும் கிடைக்காத இன்பம் ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலரின் ஊடலில் காணப்படும் இன்பம் என்கிறார் வள்ளுவர்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து                (குறள் 1323)

நிலத்தொடு நீர் பொருந்தி இருப்பது போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் கொண்ட ஊடலில் காணப்படும் இன்பம் போல தேவர் உலகத்திலும் கூட உண்டா என்ன?

அடுத்து மேல் உலகம் உண்டா இல்லையா என்ற சர்ச்சைக்கும் அவர் பதில் கூறுகிறார். மேல் உலகம் என்று ஒன்று உண்டு. அது இல்லை என்று நீ கருதினாலும் கூட வறுமையில் வாடுபவர்க்கு கொடு என்கிறார் அவர்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று              (குறள் 222)

மேல் உலகம் என சொர்க்கத்தைக் குறிப்பிடும் குறள் இது.

பிறரிடமிருந்து பொருளைப் பெறலாம் எனக் கூறுபவர் இருப்பினும் அப்படிப் பெறுவது தீமையானது. மேலுலகம் இல்லை என்று கூறினாலும் வறியவர்க்குக் கொடுத்தலே சிறந்தது.

அடுத்து பல்வேறு உலகங்கள் உண்டு என்பதையும் வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். இந்திரனைப் பற்றிக் கூறுகிறார். திரு என்னும் லக்ஷ்மியைப் பற்றிக் கூறுகிறார். திருமால் உறையும் உலகம் ஒன்று உண்டு என்றும் கூறுகிறார்.

திருமால் தாமரையில் உறைந்து வாழூம் உலகை தாமரைக் கண்ணான் உலகு என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். திருமால் தாமரைக்கண்ணன் என்னும் பெயரை உடையவன்.

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு                   (குறள் 1103)

தாமரையில் வாழும் மாயவன் உறையும் வைகுண்ட உலகம் தரும் இன்பமானது தம்மால் காதலிக்கப்பட்டவரின் மெல்லிய தோளின் மேல் சேர்ந்துறையும் இன்பத்தை விட இனிதாக இருக்குமா?

சொர்க்க இன்பத்தை சொர்க்கத்திலும் காணலாம்அதே இன்பத்தை பூவுலகிலும் அனுபவிக்கலாம் என்கிறார் வள்ளுவர்.

ஆக இப்படி பாரதீயப் பண்பிலே தோய்ந்த வள்ளுவரை பல குறள்களிலும் காணலாம்.

அடுத்து நரகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

**      தொடரும்

Leave a comment

Leave a comment