உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2 (Post No.13,894)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.894

Date uploaded in London – –17 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2

ச.நாகராஜன் 

பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொண்ட முதல் கூட்டம்

பெண்களின் உரிமையில் பெரிதும் அக்கறை கொண்டவர் அவர் என்பதை அவரது ஒரு சந்திப்பு நன்கு விளக்கியது. 1933-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

தான் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப்போவதாக அறிவித்தார் எலினார். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அதை ஆவலுடன் வரவேற்றபோது, ‘ஒரே ஒரு நிபந்தனை, அந்த நிருபர்கள் கூட்டத்தில் பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்’ என்றார் அவர்.

அனைவரும் வியந்தனர். பெண்கள் அவரைப் போற்றினர். அவசரம் அவசரமாக அனைத்துப் பத்திரிகைகளும் ஏராளமான பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின; பயிற்றுவித்தன

ஜனாதிபதி பதவியேற்ற இரண்டே நாட்களில் மார்ச் மாதம் 6-ம் தேதி அவரது பெண் நிருபர்கள் கூட்டம் நடந்தது. இதுபோல 348 பெண் நிருபர்கள் கூட்டத்தை அவர் நடத்தினார்.

1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக ப்ராங்க்ளின் பதவி வகித்தார். இந்தக் காலத்தில் பல நாடுகளுக்கும் எலினார் பயணம் மேற்கொண்டார். உரைகளை நிகழ்த்தினார். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதை உலகம் அறிந்து போற்றியது.

அத்துடன் அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தன் கணவரை எலினார் வற்புறுத்த அவரும் அதை ஏற்றார். பெண்களுக்கு முன்பு கண்டிராத உரிமைகளும் பதவிகளும் கிடைத்தன!

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பயங்கரமான நாஜி ஜெர்மனியுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டது. எலினார் தன் பங்கைச் செய்ய அமெரிக்கா இதற்கு ஈடு கொடுத்தது.  

ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மேரியன் ஆண்டர்ஸன் என்ற பாடகியை அமெரிக்க புரட்சி மகளிர் சங்கம் கான்ஸ்டிடியூஷன் ஹாலில் பாடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கியது. இந்த இனவெறியைக் கண்டித்த எலினார் அவரை ஆதரித்து தனது உறுப்பினர் பதவியை அந்தச் சங்கத்திலிருந்து ராஜிநாமா செய்தார். தனியாக ஒரு கூட்டத்தை லிங்கன் மெமோரியல் இடத்தில் ஏற்பாடு செய்தார். 75000 பேர்கள் அங்கு குழுமினர்.

எதையும் நேரடியாக களத்தில் சென்று பார்ப்பது அவரது இயல்பாக ஆனது. ஏழ்மையில் வாடுவோரின் நிலைமை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க ஒவ்வொரு மாகாணமாக அவர் பயணம் செய்தார். ஒரு இடத்தில் தனது டிரைவரை காரை நிறுத்தச் சொன்ன அவர் குடிசைப் பகுதிகளுக்குள் நுழைந்தார்.  அவர் யார் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு தொழிலாளர், ஓ, நீங்கள் எலினார் ரூஸ்வெல்ட் தானே! இங்கு வராதீர்கள். எனது குடிசையில் எனது மனைவியும் மகளும்  சொறி கரப்பானால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார். ஆனால் எலினாரோ நேராக அவரது குடிசைக்குள் சென்றார். ஆறுதல் அளித்தார்.

இப்படி பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன.

கணவரின் மறைவு

1945-ம் ஆண்டு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் மறைந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் அவரை உலகின் முதல் பெண்மணி என்று பாராட்டினார். தனது கணவர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி மறைவதற்கு சில மணி நேரம் முன்பாக அவர் தனது கடைசி பெண் நிருபர்கள் கூட்டத்தை நடத்தினார்.

தன் பணியை அவர் தொடர்ந்து செய்தார். அடுத்த ஆண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அவர் முதல் இடத்தைப் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ட்ரூமன் அவரை 1945 முதல் 1952 முடிய ஐ.நா. வின் அமெரிக்க தூதராக நியமித்தார்.

1962-ல் அவர் மறையும் வரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அங்கம் வகித்தார்.

நூல்கள்

வாழ்நாள் முழுவதும் அவர் 28 நூல்களை எழுதியுள்ளார். அவரது சுவையான சுயசரிதம் பல பகுதிகள் கொண்ட நூல்களாக அமைந்துள்ளது. பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் 3000-க்கும் மேற்பட்டவை.

மறைவு

ஒருவித எலும்பு மஜ்ஜை காச நோயினால் பாதிக்கப்பட்ட எலினார் தனது 78-ம் வயதில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மரணமடைந்தார். ஹட்ஸன் நதிக்கரையோரம் உள்ள ப்ராங்க்ளின் நூலகத்தின் அருகில் ஹைடன்பார்க்கில் அவரது குடும்பத்தினருக்கான கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார். அந்த நூலகமே அவரை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலினாரின் பொன்மொழிகள்

குறிப்பிடத்தகுந்த அவரது பொன்மொழிகளில் சில:

பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன. சராசரி மனங்கள் சம்பவங்களை விவாதிக்கின்றன. சிறிய மனங்களோ மனிதர்களை விவாதிக்கின்றன.

எந்த ஒருவரும் உங்கள் அனுமதியின்றி உங்களை தாழ்ந்தவராக கருதச் செய்ய முடியாது.

ஒரு நல்ல தலைவர் மக்களைத் தன் மீது நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார். ஒரு பெரிய தலைவரோ மக்களை தங்கள் மீதே நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார்.

**

Leave a comment

Leave a comment