ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 17-11-2024 (Post No.13,897)

Written by London Swaminathan

Post No. 13,897

Date uploaded in London – 17 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM TAMIL AND ENGLISH NEWSPAPERS AND EDITED BY LONDON SWAMINATHAN

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17- ஆம் தேதி 2024-ம் ஆண்டு

********

முதல் செய்தி

தீபாவளி கொண்டாட்டத்தில் அசைவம்மது : பிரிட்டிஷ்  பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது

பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஹிந்துக்களுக்கு அசைவ உணவுப் பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானம் வழங்கியதற்காக மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லண்டனில் நெ.10 டவுனிங் தெருவில் உள்ளது. இங்கு கடந்த அக். 29-ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற விருந்து நடைபெற்றது.

விருந்தில் அசைவ பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னரே தெரியவந்தது.

இது தொடர்பாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து அதிருப்தி தெரிவித்தார்கள்., ‘மது, மாமிசத்தால் பிரதமர் அலுவலக புனிதம் பாதித்து விட்டது. மிகுந்த வருத்தமளிக்கிறது. வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும் என்றார்கள்.

நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, அசைவம் வழங்கியமைக்காக மன்னிப்பு கோரியது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என பிரதமர் அலுவலம் உறுதியளித்துள்ளது.

லெஸ்டர் எம் பி ஷிவானி ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்; செய்தியை அறிந்த எல்லா இந்து அமைப்புகளும் லேபர் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டித்தன.

ஞான மயம் அமைப்புக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்தது

இது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன்  டிரபால்கர் சதுக்கத்தில் நடத்தப்பட்ட பொது மக்களுக்கான தீபாவளி    நிகழ்ச்சியில், சீக்கியர்கள் பாலிவுட் ஆபாச நடனங்களையும் அசைவ பிரியாணியையும் அளித்ததை நேரில் பார்த்த நமது லண்டன் நிருபர் நினைவு கூறுகிறார்;  இந்த ஆண்டு இந்து அமைப்புகள் திறம்பட நடத்தின என்பதையும் குறிப்பிட வேண்டும்

*****

அடுத்ததாக

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் ஜனநாயகக் கட்சி பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தவர் துளசி கப்பார்ட். இவருக்கு வயது 43. 2022ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 21 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார்.

இவரை, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு வாழ்த்துகள்.

21 வருடங்களாக நீங்கள் ஒரு சிப்பாயாக அமெரிக்காவிற்கு சேவை செய்தீர்கள். உங்களுடனான எனது சில உரையாடல்களில், உங்கள் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டேன். நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க பார்லிக்கு தேர்வான முதல் ஹிந்து பெண் என்ற பெருமை கொண்டவர் துளசி கப்பார்டு; இவர் கடந்த முறை அமெரிக்க பார்லியில் எம்.பி.,யாக பதவியேற்றபோது பகவத் கீதை மீது உறுதி மொழி கூறி பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

1,400 பழங்கால கலைப்பொருட்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றது.

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்சி வீனர் மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் மீதான தொடர்ந்து நடந்த பல விசாரணைகளின் விளைவாக, இந்த கலைப்பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதம், அமெரிக்காவும், இந்தியாவும் சட்டவிரோத வர்த்தகங்களைத் தடுப்பதன் மூலம் கலாசார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

****

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர் எஸ் எஸ் தலைவர் எச்சரிக்கை

ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர்  அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியின் சங்கப் பெண் தலைவி டாக்டர் ஊர்மிளாவின் நினைவாக ஜபல்பூரில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.   அப்போது மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் உருவாகி வருவதை நாம் அனைவரும் உணர்வதாக தெரிவித்தார்.

அறிவியல் முன்னேறியுள்ளது, ஆனால் அதன் பலன்கள்  ஏழைகளை சென்றடையவில்லை. ஆனால் உலகை அழிக்கும் ஆயுதங்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டதாக கூறினார்.

சில நோய்களுக்கான மருந்துகள் கிராமப்புறங்களில் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் (தேஷி கட்டா) கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

மனித குலத்திற்கு சேவை செய்வதே சனாதன தர்மம் என்று தெரிவித்த அவர்,  உலகிற்கு வழி காட்டும் ஆற்றல் இந்துத்துவாவுக்கு உள்ளதாகவும் கூறினார். 

இந்து என்ற வார்த்தை இந்திய வேதங்களில் காணப்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இருந்ததாகக் கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர், குருநானக் தேவ் அவர்களால் பொதுச் சொற்பொழிவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

இன்னும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இருபதே ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல்  இடத்தை அடைய முடியும் என்றும் கூறினார்

அரியானா மாநிலம் குருகிராமில் “விஷன் ஃபார் விக்சித் பாரத்-விவிபா 2024” மாநாடு  நடைபெறுகிறது. பாரதிய சிக்ஷன் மண்டல் முப்பெரும் விழாவில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அப்போது, 16 ஆம் நூற்றாண்டு வரை பல துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தோம், ஆனால் அதன் பிறகு நிறுத்தி விட்டதாக கூறினார்.

உலக அளவில் இந்தியாவை நம்பர் 1 ஆக்க வேண்டும் என்றும், மற்றவர்களை நகலெடுப்பதை விட நமக்கான தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல் மனம் மற்றும் அறிவு ஆகிய இரண்டின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான உறவைப் பற்றி  குறிப்பிட்ட அவர், “இரண்டும் மனிதகுலத்தின் நலனையே நோக்கமாகக் கொண்டவை” என்றும் சொன்னார்

கல்வியை வணிகமயமாக்கக் கூடாது என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாறும்போது உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

நாம் சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் முதல் இடத்தைப் பிடிக்க முடியும், என்று அவர் கூறினார், இந்தியா உலகின் நம்பர் 1 ஆக இருப்பதைக் காண நேரத்தையும் ஆரோக்கியத்தையும் கடவுள்  தர வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக மோகன் பகவத் தெரிவித்தார்.

****

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஐயப்பன் சந்நிதியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று   முதல் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

****

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடந்தது. காவிரியின் இரண்டு பக்க கரைகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இந்த ஆண்டு சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இதனிடையே ,

தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி ஆந்திர மக்கள் இதே நாளன்று கார்த்திகை தீபம் ஏற்றி கார்த்திகையையும் கொண்டாடினர் ஆந்திரம் முழுது முள்ள பல கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர்

தமிழ் பஞ்சாங்கத்தின்படி டிசம்பரில் வரும் பெளர்ணமி அன்றே தமிழ் நாட்டில்  கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

****

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு

திருப்பதி மலையில் பௌர்ணமி தினத்தையொட்டி ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருப்பதி மலையில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பௌர்ணமி தினத்தையொட்டி கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தான பிராண தான அறக்கட்டளைக்கு பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் 50 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற பக்தர் 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட நாகராஜா என்பவர் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 15 மின்சார இருசக்கர வாகனங்களை நன்கொடையாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

****

திருப்பதியில் சிருங்கேரி சுவாமிகளுக்கு பெரும் வரவேற்பு

தமிழ் நாட்டில் இரண்டு வார விஜய யாத்திரையை முடித்துவிட்டு சிருங்கேரி சங்கராசார்யார் ஸ்ரீ விதுசேகர பாரதி அவர்கள் ஆந்திரப்பிரதேச விஜய யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் திருப்பதிக்குச் சென்றார். அங்கு பக்தர்கள் அவருக்கு பெரிய வரவேற்பு அளித்தனர் .

நவம்பர் 16 ஆம் தேதி காளஹஸ்தி 17ஆம் தேதி நெல்லூர் 18 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி  வரை விஜயவாடா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருப்பதாக மடத்து வட்டாரங்கள் தெரிவித்தன.  22 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குண்டூரில் பக்கதர்களுக்கு ஆசி வழங்கி விட்டு 27 ஆம் தேதி ராஜ மஹேந்திரவரம் செல்வதாகவும் விஜய யாத்திரை திட்ட அறிவிப்பு கூறுகிறது.

*****

லண்டனில் முக்கிய நிகழ்ச்சி

கடைசியாக, லண்டன் மக்களுக்கு ஒருநல்ல செய்தி!

சம்பிரதாய பஜனை உலகத்தில்  கொடி

கட்டிப் பறக்கும் டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் அவர்களின் குழுவினர் இந்த ஆண்டும் லண்டனுக்கு வருகை தருகிறார்கள். நவம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் 24 ஞாயிற்றுக்கிழமை வரை வெம்பிளி பார்க் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகிலுள்ள சத்தாவீஸ்

பதித்தார் ஹாலில் காலை முதல் மாலை வரை பக்தி இசை விருந்து அளிக்க இருக்கிறார்கள்.

அனுமதி இலவசம். ஆயினும் நன் கொடைகளை வரவேற்கிறார்கள் .முன்கூட்டி ரெஜிஸ்டர் செய்வது நல்லது இருக்கை வசதிகளை அளிக்கவும் , பிரசாதம் வழங்கவும் இது உதவும்.

இதில் ஆர்வம் உடையோர் ராதா மாதவ் மஹோத்சவ் யு கே  என்ற வெப்சைட்டில் மேல் விவரங்களை அறியலாம்.

ஆண்டுதோறும் லண்டன் மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொள்ளுவதால், கடந்த சில ஆண்டுகளாக இது பெரும் பக்தி விருந்தாக அமைகிறது.

*************

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் 24-ம்  தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்

—-subham—-

TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல்17 11 2024

Leave a comment

Leave a comment