ஆலயம் அறிவோம்! – வைத்யநாத் தாம்! (Post No.13,988)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13,988

Date uploaded in London – –9 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட உரை 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! – வைத்யநாத் தாம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஶ்ரீசைலே மல்லிகார்ஜுனம் |

உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரமமலேஸ்வரம் ||

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம் |

சேது பந்தே து ராமேஷம் நாகேஷம் தாருகாவனே ||

வாரணாஸ்யாம் து விஸ்வேஷம் த்ரயம்பகம் கௌதமி தடே |

ஹிமாலயே து கேதாரம் க்ருஷ்மேஷம் ச சிவாலயே ||

ஏதானி ஜோதிர்லிங்கானி சாயம் ப்ராத படேந் நர: |

சப்தஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரேண வினஷ்யதி ||

                           த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்பதாவது தலமாக அமையும் வைத்யநாத் தாம் தலமாகும். தாம் என்றால் க்ஷேத்ரம் என்று பொருள் இந்தத் தலத்திற்கு பைத்யநாத், பஜிநாத், வைஜிநாத் தாம் என்ற பெயர்களும் உண்டு. இது தேவகார் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. கர் என்றால் இல்லம் என்று பொருள். ஆக தேவகார் என்றால தேவர்களின் வீடு என்று பொருள்.

த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம் கூறுகின்ற படி இந்த ஜோதிர்லிங்க தலங்களின் பெயரை உச்சரித்தாலாயே ஏழு ஜன்மங்கள் செய்த பாவம் முற்றிலும் நீங்கும் என்பது உறுதி!

இத்திருத்தலம் ஜார்கண்ட் மாநிலத்தில் தேவகார் நகரில் ஜெசிடி ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ரயில் நிலையம் வைத்யநாத் தாம் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஹௌரா- பாட்னா- டெல்லி ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஞ்சி, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், பகலூர் பாட்னா ஆகிய நகரங்களில் இருந்து பஸ் வசதிகளும் உண்டு..

இறைவன்  திருநாமம் : ஶ்ரீ வைத்யநாதர்_

இறைவி திருநாமம் : பார்வதி

தீர்த்தம் : பார்வதி தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

இந்தத் தலம் 51 சக்தி பீடங்களில் முக்கியமான பீடமாகவும் அமைகிறது. தேவியின் இதயம் விழுந்த இடமாக இத்தலம் அமைகிறது.

விஷ்ணுவின் சுதர்ஸன சக்கரம் இந்தத் தலத்தைக் கட்டியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

சிவன் திருவாதிரை நட்சத்திர நாளனறு ஒரே இரவில் ஜோதிர்லிங்கமாக மாறியதாக புராண வரலாறு கூறுகிறது.

இராவணன் இந்தத் தலத்தில் வந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். தரிசனம் தனக்குக் கிடைக்காத காரணத்தால் தன் தலையை ஒவ்வொன்றாக அரிந்து இட்டான். ஒன்பது தலைகள் இடப்பட்ட நிலையில், பத்தாவது தலையை அரிந்திட கத்தி கழுத்தில் பதிந்த போது, சிவபிரான் தரிசனம் தந்து அருளினார். சிவபிரானிடம் லிங்கத் திருமேனி ஒன்றை வழிபாட்டிற்காக வேண்டி அதைப் பெற்றான் அவன்.

இதனால் ஏற்படும் விபரீத விளைவை உணர்ந்த திருமால் அவன் முன் தோன்றி,”லிங்கத்தைப் பெற்றாயே. சிவனிடமிருந்து வாளைப் பெறவில்லையே. அதை அல்லவோ பெற வேண்டும்” என்று கூற இராவணன் லிங்கத்தைக் கிழே வைத்து மீண்டும் தவம் புரிந்து வாளைப் பெற்றான். 

பின்னர் முன் வைத்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அது அந்த இடத்தை விட்டுப் பெயராமல் அங்கேயே நிலையாக வேரூன்றி விட்டது. அதை எடுக்க எடுக்க அது கீழே அமிழ்ந்தது. சிவபிரான், “இனி யாம் இங்கேயே எழுந்தருளி இருப்போம்” என்று கூற இராவணன் அங்கிருந்து அகன்றான்.

அந்த நிலையில் சிவபிரான் தரையோடு தரையாக திருமுடி மட்டும் சிறிது தெரியக்கூடிய அளவில் காட்சி தருகிறார்.

இராவணனது வெட்டுப்பட்ட காயம் நீங்கவும் அவனது பத்து தலைகளும் பழைய நிலையில் மீண்டும் பொருந்தவும் சிவபிரான் அருளியதால் அவர் ஶ்ரீ வைத்யநாதர் என்ற பெயரைப் பெற்றார்.

வைத்யநாதரின் பிரதான கோவிலைத் தவிர இங்கு 21 இதர கோவில்களும் உள்ளன. பார்வதி, கணேசர், ப்ரம்மா, காலபைரவர், ஹனுமான், சரஸ்வதி, சூர்யா, ராம, லக்ஷ்மணர்,ஜானகி, கங்கா காளி, அன்னபூரணி, லக்ஷ்மி நாராயணர் ஆகியோருக்கான தனி சந்நிதிகள் உண்டு.

ஸ்வாமி கோவில் மற்றும் அம்மன் கோவில் விமானங்கள் பெரிதாகவும் சுமார் 150 அடி உயரம் உள்ளதாகவும் அமைந்துள்ளன. சுவாமியின் விமான ஸ்தூபியிலிருந்து அம்மனின் ஸ்தூபிக்கு சிவப்பு, பச்சை,மஞ்சள் நிறங்களில் அகலமான நாடாக்கள் கட்டப்பட்டுள்ளன.

இவை மிக அழகாக இருக்கும். இது பிரார்த்தனைக்காரர்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பிராத்தனைகளுள் ஒன்றாக அமைகிறது.

எல்லா நோய்கள் தீர்வதற்கும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு நோய் நீங்கப் பெறுகிறார்கள். சில நாட்கள் இங்கேயே தங்கி தங்கள் விரதங்களை பல பக்தர்கள் முடிக்கின்றனர்.

பக்தர்கள் இங்குள்ள மகிமை வாய்ந்த பார்வதி குண்ட் எனப்படும் பார்வதி தீர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஈர ஆடையோடு கும்பிடுதண்டம், அங்கபிரதக்ஷிணம் முதலியனவற்றைச் செய்கின்றனர். அபிஷேக சாமான்களையும், நைவேத்திய பொருள்களையும் காவடி கட்டி எடுத்துச் செல்வது மரபாக இருக்கிறது.

ஆண்டுக்கு குறைந்தபட்சமாக இங்கு எண்பது லட்சம் யாத்ரீகர்கள் வருகின்றனர். ஆவணி மாதத்தில் நடைபெறும் ச்ராவண மேளாவின் போது பல லட்சம் பக்தர்கள் இங்கு திரள்கின்றனர். பக்தர்கள் தேவகாரிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுல்தான் கஞ்சிலிருந்து கங்கை நதி நீரைக் கொண்டு வந்து இங்குள்ள  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

பக்தர்கள் தங்க ஊருக்குள் பல மடங்களும், சத்திரங்களும் உள்ளன. காலை 5 மணி  முதல் இரவு 9 மணி வரை தினமும் தரிசனம் செய்யலாம்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைத்யநாதரும் அம்பிகை பார்வதி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

Leave a comment

Leave a comment