Post No. 13.987
Date uploaded in London – —9 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
4-12-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
வாழ்க்கை வழிகாட்டிகள்!
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 2
ச.நாகராஜன்
.பெரும் சாதனை – இஸ்ரோ உருவாக்கம்
திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள தும்பாவில் ராக்கட் லாஞ்சிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அரபிக் கடலில் தும்பா (ஈக்வேடர் எனப்படும்) நிலநடுக்கோடு அருகே அமைந்த இடம்.
சோடியம் வேப்பர் நிரப்பிய இந்தியாவின் முதல் ராக்கெட் 1963 நவம்பர் 21ம் தேதி ஏவப்பட்டது.
இஸ்ரோவை நிறுவி இந்தியா விண்வெளித் துறையில் கால் பதித்தது.
இதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நுட்பமாகத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டியதாக இருந்தது. புதிய கட்டிடங்கள், சாலைகள், தகவல் தொடர்பு சாதனங்கள்,ஏவுதளம், சோதனை ஓட்ட அமைப்பு இதைச் செய்ய வல்ல நிபுணர் குழு என பிரம்மாண்டமான செயல் திட்டம் நுட்பமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியைத் தந்தது.
உடனடியாக பிரம்மாண்டமான ஒரு விரிவாக்கத்தை விக்ரம் செய்ய ஆரம்பித்தார்.
1965ல் ஐ.நா இந்திய விண்வெளி ஏவுதளத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
இடையில் ஹோமி பாபா திடீரென்று விமான விபத்தில் மரணம் அடையவே விக்ரம் அடாமிக் எனர்ஜி கமிஷனின் தலைவராக ஆனார்.
அவரது தீவிர முயற்சியினால் 1975ல் (அவரது மறைவுக்குப் பின்னர்)
ஆர்யபட்டா ரஷிய உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றி மேல் வெற்றி
அன்று ஆரம்பித்த விண்வெளிப் பயணத்தில் உயர உயரச் சென்று கொண்டே இருக்கிறோம்.
இந்தியாவில் நாமாகவே வடிவமைக்கும் நமது சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. அடுத்த நாடுகளிலிருந்தும் வரும் சாடலைட்டுகளையும் அவர்கள் வேண்டுகோளின் பேரில் விண்ணில் ஏவ இஸ்ரோ வழி செய்கிறது.
சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்பதை உலகிற்கு முதலில் நிரூபித்த நாடாக இந்தியா ஆனது. செவ்வாயை நோக்கிக் கண்ணைப் பதிக்கிறது.
சந்திரனுக்கு ஒரு விண்வெளி வீரரைத் தேர்வு செய்து பயிற்சி தந்து வருகிறது.
இவை அனைத்திற்கும் காரணம் விக்ரம் சாராபாய் அவர்களே!
விருதுகள்
1966ல் அவர் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். பத்ம விபூஷண் விருது அவர் மறைவிற்குப் பிறகு 1972-ல் வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை அவர் பெற்றார்.
இரு வகை மனிதர்கள்
விக்ரம் சாராபாய் பற்றிய ஏராளமான சுவையான நிகழ்ச்சிகளை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் அவரது புதியதொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டும்.
அவரது மகள் மல்லிகா சாராபாய் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திப் பெயர் பெற்றவர். அவர் ஒரு நடிகையும் கூட! தன் தந்தையைப் பற்றி விழா ஒன்றில் அவர் கூறிய சம்பவம் இது.
மல்லிகா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் அவர் யாருடைய கேர்ள்-ப்ரண்ட் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். விவாதம் பெரிய சண்டையாக ஆகி ஒரு மாணவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தி விட்டார்.
விஷயம் பெரிதாகி விடவே விக்ரம் சாராபாய் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். பள்ளியின் பிரின்ஸிபால் விக்ரமின் சகோதரியான லீலாபென் தான்!
பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்த வேகத்தில் திரும்பி வந்தார் விக்ரம், சிரித்துக் கொண்டே.
அவர் தனது மகளிடம் கூறினார்; “மல்லிகா, இந்த மீட்டிங் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ ஒரு குற்றமும் செய்யாத போது நீ தான் காரணம் என்று உன் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றது. ஒன்று தெரிந்து கொள்! இந்த உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். முதல் வகையினர் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்க மாட்டார்கள். வசதியாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.
இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் வழியில் அமைத்துக் கொள்பவர்கள். அவர்கள் தங்களுக்கு எது உண்மை என்று படுகிறதோ அந்த வழியில் செல்வார்கள்.
நான் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். இந்த வழி தான் என் வாழக்கை எப்படிப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.
இந்த வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மல்லிகா.
.
தந்தையிடமிருந்து அரிய வழிகாட்டுதலைப் பெற்ற மல்லிகா பின்னால் பிரபலமானதில் ஆச்சரியமே இல்லை!
மறைவு
30 டிசம்பர் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது தூக்கத்திலே அவரது ஆவி பிரிந்தது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் அவரது அகால மரணம் இந்தியாவிற்கு பெரும் இழப்பாக ஆனது.
கற்களைத் தாங்கத் தயார்
விக்ரம் சராபாய் எதிர்கொண்ட எதிர்ப்புக் கணைகள் எவ்வளவோ; அதை அவர் பொருட்படுத்தியதே இல்லை. அவர் கூறிய கூற்றுக்களில் சில;
சிலர் விண்வெளி திட்டங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கோ நமது குறிக்கோளில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சத்தத்திற்கு நடுவில் நல்லை இசையைக் கேட்பவன் மிகப் பெரும் சாதனைகளைச் செய்ய முடியும்.
எனது நண்பர் விக்ரம் சராபாய் என்னிடம் சொன்னார்: கூட்டத்திற்கு மேலே நீ நிற்கும் போது உன் மீது எறியப்படும் கற்களைத் தாங்கிக் கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாவை சாதனை படைக்க வைத்த விக்ரம் சாராபாயை விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கூறுவதில் அதிசயம் ஒன்றும் இல்லையே!
***