Pictures by London Swaminathan
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,012
Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024.
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-12-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
என்ன புண்ணியம் செய்தனை
நெஞ்சமே, இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை
முழு மணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தென்கரைத் தலங்களில் 25வது தலமாக அமையும் திருவலஞ்சுழி தலமாகும்
இத்திருத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமிமலைக்குத் தெற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணம் தஞ்சாவூர் பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இறைவர் : கபர்தீசர், கற்பக நாகேஸ்வரர், வலஞ்சுழி நாதர்
இறைவி : பெரியநாயகி
ஸ்தல விநாயகர் : ஸ்வேத விநாயகர்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு மற்றும் ஜட தீர்த்தம்
தல விருட்சம் : அம்மன் சந்நிதியில் உள்ள வில்வமரம்
திருஞானசம்பந்தரால் மூன்று பதிகங்களாலும் திருநாவுக்கரசரால் இரண்டு பதிகங்களாலும் பாடி பரவப்பட்ட இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அதில் கடும் விஷம் தோன்றியது. இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபிரானைச் சரண் புக அவர் இந்தக் காரியத்தை விக்னேஸ்வரர் பூஜையின்றித் தொடங்கியதால் இப்படி ஏற்பட்டது என்று கூறி விக்னேஸ்வரரைத் துதிக்கச் சொன்னார். உடனே தேவர்கள் கடல் நுரையினால் ஒரு விநாயகரை உருவாக்கி அதற்கு பூஜை செய்தனர். பின்னர் பாற்கடலைக் கடைந்து பயனை அடைந்தனர். தேவேந்திரன் அந்த விநாயகரை தான் தினமும் பூஜை செய்வதற்காக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று வருகையில் இந்தத் தலத்தில் பூஜை செய்து விநாயகரை எடுக்க முயலும் போது அவனால் முடியவில்லை.
தேவேந்திரனை விநாயக சதுர்த்தி தோறும் இங்கு வந்து பூஜை செய்யுமாறு விநாயகர் அருள் பாலித்தார்.
கடல் நுரையினால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் வெள்ளை வெளேரென்று காட்சி தருகிறார். ஆகவே இவர் ஸ்வேத விநாயகர் என்ற பெயரைப் பெற்றார். இவருக்கு அபிஷேகம் கிடையாது; ஆனால் பச்சைக் கற்பூரம் சார்த்தி வழிபாடு நடக்கிறது.
இந்த ஆலயத்தை தேவேந்திரன் ஆணையிட விஸ்வகர்மா அமைத்ததாக ஐதீகம் கூறுகிறது.
இந்தத் தலத்திற்கு சக்தி வனம், தக்ஷிணாவர்த்தம், திரிணாவர்த்தம் என்ற பெயர்களும் உண்டு.
இன்னொரு வரலாறு இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பை விளக்குகிறது.
முன்னொரு காலத்தில் ஆதிசேஷன் பூமியைப் பிளந்து வெளியே வரும் போது ஒரு பெரும் பள்ளம் பூமியில் ஏற்பட்டது. காவிரி நதி இந்த பில துவாரத்தில் இறங்கியது. இதைக் கண்ட சோழமன்னன் மனம் கலங்கினான். அப்போது வானில் ஒரு அசரீரி எழுந்தது. ஒரு மன்னனோ அல்லது முனிவரோ இந்த பள்ளத்தில் இறங்கி பலியிட்டுக் கொண்டால் பள்ளமானது மூடி பழைய நிலை ஏற்படும் என்று அந்த அசரீரி கூறவே அங்கு தவம் புரிந்து வந்த ஹேரண்ட முனிவர் என்பவர் தான் பலியாவதாக அரசனிடம் தெரிவித்தார். அப்படியே அவர் பள்ளத்தில் இறங்க பள்ளம் மூடியது. காவிரி மேலெழும்பி ஓட ஆரம்பித்தது. காவிரி இந்தத் தலத்தை வலமாகச் சுற்றி ஓடியதால் இது திருவலஞ்சுழி என்ற பெயரைப் பெற்றது.
இக்கோவிலில் நாம் ஹேரண்ட முனிவரின் சிலையைக் காணலாம்.
இந்தப் பள்ளத்திலிருந்து எழுந்த ஆதிசேஷன் மஹா சிவராத்திரி அன்று நான்கு யாமத்திலும் நான்கு தலங்களுக்குச் சென்று வழிபட்டான். அந்தத் தலங்களில் இந்த திருவலஞ்சுழியும் ஒரு தலமாகும்.
இங்கு ஆவணி மாதம் 9ம் நாளன்று இந்திர பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இங்குள்ள ஆலயத்தில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தின் பின்புறம் திருக்குளம் அமைந்துள்ளது. அடுத்த கோபுர வாயிலில் கொடி மரமும் நந்தி மண்டபமும் உள்ளன. அதன்பின் ஸ்வேத விநாயகர் சந்நிதி உள்ளது. இங்குள்ள மண்டபம் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
வாயிலின் அருகே சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரே கல்லால் அமைந்த ஒரு கருங்கல் பலகணி உள்ளது. சுமார் 9 அடி உயரமும் 7 அடி அகலமும் உள்ள இந்த ஜன்னலில் 16 துளைகள் உள்ளன.
வடக்கில் அலங்கார மண்டபமும், அதை அடுத்து உள்ள சுற்றில் நிறைபணி மண்டபமும் உள்ளது.
தெற்கே மடப்பள்ளியும் வடக்கே உற்சவ மண்டபமும் உட்பிரகாரத்தில் தெற்கே லிங்கங்கள், நவசக்தி மூர்த்தங்களும் மேற்கில் வலஞ்சுழி விநாயகரையும் காணலாம். இங்கு நவ கிரகங்கள் இல்லை. ஆனால் சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
மூன்றாவது வெளி பிரகாரத்தில் தென்புறத்தில் அம்பிகையின் சந்நிதி உள்ளது. சதுர்புஜங்களுடன் அம்பிகை கம்பீரமாக வீற்றிருப்பதைக் கண்டு தரிசிக்கலாம்.
ஆலயத்தில் ஏராளமான நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்துள்ள சிற்பங்களைக் கண்டு களிக்கலாம்.
நக்கீரர் இயற்றிய திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்ற நூலாலும் பெரிய புராணம் மற்றும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களாலும் இந்தத் தலத்தின் பெருமையை அறியலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வலஞ்சுழி நாதரும் அம்பிகை பெரியநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
***