WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,027
Date uploaded in Sydney, Australia – —29 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
kalkionline-ல் 23-12-24 அன்று பிரசுரமாகியுள்ள கட்டுரை
மஹாபாரத மர்மம்
மங்கையரே, உங்கள் அழகுக்கு மெருகூட்டிக் கொள்ளுங்கள்!
ச.நாகராஜன்
16 வித அலங்காரங்கள்
புராதனமான ஹிந்து சாஸ்திரங்கள் ஒவ்வொரு மங்கையும் பேரழகியாகத் திகழ வேண்டும் என்றும் அதற்கு அவர்கள் தங்கள் இயல்பான அழகுக்கு மெருகூட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றன.
இது அவர்களின் ஆடம்பரத்திற்காக அல்ல என்றும் கணவர், தந்தை தாய், சுற்றத்தார், உறவினர் ஆகியோருக்காக மட்டுமல்ல என்றும் இது ஒரு சமுதாயக் கடமை என்றும் கூறுகின்றன.
அழகிய தேவதைகள் போல ஒவ்வொரு நாரீமணியும் உலகில் வலம் வந்தால் தேசம் செழிக்கும்.
ஆக இதற்காக 16 விதமான அலங்காரங்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுவதியும் இவற்றை அறிந்து தனது அழகை மெருகூட்டிக் கொள்ள வேண்டும்.
16 வித அலங்காரங்களைப் பற்றி வல்லப தேவர் தனது சுபாஷிதாவளி என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.
அவையாவன:
1) ஸ்நானம்
2) அழகிய ஆடை
3) திலகம்
4) கண்ணுக்கு மை
5) காதணி
6) மூக்குத்தி
7) கூந்தல் அலங்காரம்
8) ரவிக்கை (மார்க்கச்சு)
9) சிலம்பணி (நூபுரம்)
10) நறுமணம் (உடல் முழுவதும் வீசும் சுகந்த மணம்)
11) வளையல்
12) பாத அழகு (கொலுசு உள்ளிட்டவை)
13) மேகலை
14) தாம்பூலம்
15) மோதிரம்
16) அலங்காரம் செய்யும் திறமை
இதே போல இந்த 16 வகைகளை ரஸ கௌமுதி என்ற நூலும் மிக விவரமாகக் குறிப்பிடுகிறது.
இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படும் (கதா) நாயகிகளின் அழகை இந்தப் பதினாறையும் சொல்லி விவரிப்பது இலக்கிய மரபாக இருந்தது.
எது அழகு?
எது க்ஷணத்திற்கு க்ஷணம் நூதனமான புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அதுவே அழகு. அந்த உருவமே அழகிய உருவமாகும். ரமணீயம் என்பதை இப்படி விவரிக்கிறது சிசுபாலவதம்.
க்ஷணே க்ஷணே யத் நவதாம் உபைதி தத் ஏவ ரூபம் ரமணீயம்
– சிசுபாலவதம் 4-17
புதுப் புது விதமாக அழகுற
ஜொலிக்கும் ஒரு மங்கைக்கு எத்தனை உருவம் இருக்கும்? சொல்ல முடியாத அளவு எல்லையற்றதாக இருக்கும்.
அழகுற கிளியோபாட்ராவை தன் கதாபாத்திரமான எனோபார்பஸ் மூலம் வர்ணிக்கும் ஷேக்ஸ்பியர் கூறியதை இங்கு நினைவு கூறலாம்.
Age cannot wither her, nor custom stale
Her infinite variety:
(Antony and Cleopatra)
அற்புதமான சொற்றொடர் இன்ஃபைனட் வெரைடி!
காலம் ஒருநாளும் அவள் அழகை அழிக்க முடியாது; அவளது அழகு முடிவற்ற வடிவங்களை எடுக்கக் கூடியது என்பதே இதன் திரண்ட பொருள்..
திரௌபதியின் பேரழகு
பாரதத்தில் கவிஞர்களால் இயற்றப்பட்ட காவியங்களில் வரும் கதாநாயகிகளை வர்ணிக்கும் கவிஞர்கள் நிச்சயமாக 16 வித அலங்காரங்களையும் மனதில் கொண்டே அவர்களை வர்ணிப்பர்.
எடுத்துக்காட்டாக திரௌபதி பற்றிய மஹாபாரத வர்ணனையையும் காலவரிடம் தரப்பட்ட யயாதியின் கன்னிப் பெண் மாதவியைப் பற்றிய வர்ணனையையும் இங்கு காணலாம். அழகிய உத்தமமான ஒரு மங்கை எப்படி இருப்பாள் என்பதற்கான இலக்கணமாக இதைக் கொண்டு ஒவ்வொரு மங்கையும் தன்னை செம்மையுற அழகு படுத்திக் கொள்ளலாம் இல்லையா?
விராட தேசத்தில் மாறு வேடத்தில் ஸைரந்தரியாக மாறி அங்கு விராடனுடைய மனைவியான ராணி ஸுதேக்ஷ்ணைக்கு முன் வந்த திரௌபதியைப் பார்த்த அவள் அசந்து போகிறாள்.
அவள் அழகை வர்ணிக்கிறாள்:
“நீ யார்? நீண்டும் குறுகியும் இல்லாத மறைந்திருக்கும் கணுக்கால்களையும், சமமான இரண்டு தொடைகளையும், சப்தம், புத்தி, நாபி ஆகிய மூன்றிலும் ஆழ்ந்தவளும் மூக்கு, இரண்டு கண்கள், காது, நகங்கள், மார்பகங்கள், பிடரி ஆகிய ஆறு அங்கங்களில் உன்னதமாய் இருப்பவளும், சிவந்திருக்கும் உள்ளங்கை, உள்ளங்கால், கடைக்கண், உதடு, நாக்கு, நகம் ஆகிய ஐந்தில் பளபளப்புள்ளவைகளும் ஹம்ஸம் போல சுத்த ஸ்வரத்துடன் பேசுபவளும் அழகிய கூந்தலையும், குரலையும் உடையவளும், இளமைப் பருவத்தின் மத்தியில் இருப்பவளும், பருத்திருக்கின்ற மார்பகங்களைக் கொண்டவளும், குடிலமான இமை மயிர்களும் கண்களையும் கொண்டவளும் கோவைப்பழம் போன்ற உதட்டை உடையவளும் மெலிந்த இடை, சங்கு போன்ற கழுத்து, மறைந்திருக்கும் நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டவளுமான நீ யார்?
இப்படி அவள் கேட்கும் போது திரௌபதியின் சௌந்தரியத்தை நம்மால் அறிய முடிகிறது.
மாதவியின் அழகு
அடுத்து விஸ்வாமித்திரயர் அற்புதமான குதிரைகளைக் காலவரிடம் குரு தக்ஷிணையாக் கேட்க அவர், யயாதி மன்னனிடம் வந்து அவற்றைக் கேட்கிறார். யயாதி தன்னால் அதைக் கொடுக்க முடியாது என்று வருத்தத்துடன் கூறி தனது புதல்வி மாதவியைத் தருகிறான். மாதவியை அழைத்துக் கொண்டு சென்ற காலவர் அயோத்தி அரசனான ஹர்யஸ்வன் என்ற அரசனை அடைந்து குதிரைகளைக் கேட்கிறார். மாதவியைப் புத்திர வம்சம் பெற அவனுக்கு மணமுடித்துத் தருவதாகக் கூறுகிறார்.
பேரழகி மாதவியைப் பார்த்த அரசன் பிரமித்துப் போகிறான்.
அவளை வர்ணிக்கிறான்:
“இவள் ஆறு அங்கங்களில் உன்னதமாக இருக்கிறாள். பின் தட்டு, நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயரமாய் உள்ளன.
சூட்சுமமாக இருக்க வேண்டிய ஐந்து அங்கங்களில் சூட்சுமமாக இருக்கிறாள்.விரல்களுடைய கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் சூட்சுமமாய் உள்ளன.
கம்பீரமாக இருக்க வேண்டிய மூன்று அங்கங்களில் கம்பீரமாக இருக்கிறாள்.குரல், மனம், நாபி ஆகிய மூன்றிலும் ஆழ்ந்தவளாய் உள்ளாள்.
சிவந்திருக்க வேண்டிய ஐந்து அங்கங்களில் சிவந்தவளாய் இருக்கிறாள். உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இரண்டு கடைக்கண்கள் , நகங்கள் ஆகியவற்றில் சிறந்து உள்ளாள்.”
இவளை ஏற்றுக் கொள்ள என்ன தர வேண்டும் என்று கேட்டு அவளைப் பெறுகிறான்.
இப்படி ஒவ்வொரு காவியமும் அழகிய பெண்களின் அங்கங்களை வர்ணிக்கிறது! அவர்களின் குண லட்சணங்களையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்த அங்க லட்சணங்களை இப்போது அறிவியலும் ஆமோதிக்கிறது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல பயாலஜிஸ்ட் ராபின் பேகர், “உடலின் சரியான அளவு விகிதம் லேசாக ஒதுக்கி விட முடியாதபடி அதிக அர்த்தமுள்ளது” என்கிறார்!
மனித நடத்தைகள் பற்றி சில வருடங்களுக்கு முன்பு வியன்னாவில் நடந்த மாநாட்டில் பேசிய போது அவர் சாமுத்ரிகா லட்சணம் சரியாக அமையப் பெற்றால் ஏற்படும் நலன்களை விவரித்தார்.
அவை நமது இதிஹாஸ அழகிகளின் அங்க வர்ணனையை ஆமோதிக்கின்றன.
ஆக பெண்ணாய் பிறந்த ஒவ்வொரு மங்கையும் சௌந்தர்ய சாஸ்திரத்தை நன்கு கற்று அது கூறும் வழிமுறைகளைக் கையாண்டு பேரழகிகளாகத் திகழ வேண்டும். சிறு சிறு வேறுபாடுகள் அங்கத்தில் இருந்தாலும் அவற்றை மெருகூட்டி அழகாக்கி உன்னத வாழ்க்கையை வாழலாம்!
வாழ்த்துவோம் நம் நாரீமணிகளை!
***
குறிப்பு : திரௌபதி அழகு – விராட பர்வம் 14ம் அத்தியாயம்
மாதவி அழகு : உத்யாக பர்வம் 116ம் அத்தியாயம்