சகல நலன்களையும் அருளும் சூரிய வழிபாடு! (Post No.14,104)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,104

Date uploaded in Sydney, Australia – –17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜனவரி 14 – தைப்பொங்கல் – சிறப்புக் கட்டுரை கல்கி ஆன் லைன் இதழில் 13-1-25 அன்று பிரசுரிக்கப்பட்டது.

சகல நலன்களையும் அருளும் சூரிய வழிபாடு!

ச. நாகராஜன்

தமிழர்தம் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உற்சாகத்தைத் தரும் ஒரு விழாநாளாகும்.

மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதை மகர சங்கராந்தி என்று குறிப்பிட்டு அது நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.,

காசியபரின் புதல்வனான சூரிய பகவான் எல்லாவிதமான நோய்களையும் தீர்ப்பவன். வெற்றியை அருள்பவன்.

இதை விளக்க ஏராளமான சம்பவங்கள் இதிஹாஸ புராணங்களில் உள்ளன.

ஆதித்ய ஹ்ருதயம் :  ராவணனை வதம் செய்யப் போர்புரியும் காலத்தில் ராமர் சற்று களைப்படையவே, அகஸ்திய மாமுனிவர் அவர் முன் தோன்றி சூரியனை வழிபடுவதற்காக ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தார், ஆதித்ய ஹ்ருதயத்தை ஓதி சூரியனைத் தொழுது ராவணனை வதம் செய்தார் ராமர்.

ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் காலையில் சொன்னால் உண்டாகும் நலன்கள் பல.

இது புண்ணியம் வாய்ந்தது. எல்லா எதிரிகளையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. அழிவற்றது. மங்களத்துக்கெல்லாம் மங்களமானது. பாவங்களைப் போக்கவல்லது. கவலையையும் துன்பத்தையும் நீக்குவது. ஆயுளை வளர்ப்பது.

சூர்ய அஷ்டோத்திரம் : மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அவர்களின் குருவான தௌம்யர் சூரியனின் 108 நாமங்களை தர்மருக்கு உபதேசம் செய்தார். மனம் குளிர்ந்த சூரிய பகவான்  அக்ஷய பாத்திரத்தை தர்மபுத்திரருக்கு அளித்தார். இதைச் சொல்பவர்கள் நல்ல மனைவி/கணவன், புத்திரர்கள், செல்வம், ரத்தினக் குவியல் ஆகியவற்றை அடைவர்.

சூர்யாஷ்டகம் : சிவபிரானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் சூரியனின் மகிமையை உரைக்கும் அற்புதமான தோத்திரமாகும்.

மயூர சதகம்: ஹர்ஷவர்த்தனரின் அவைப்புலவராக இருந்த கவிஞர் மயூர பட்டர் பேரழகியாக விளங்கிய தன் மகளின் அழகை வியந்து கவிதை பாடினார். மகளின் அழகை தந்தை வர்ணிக்கலாமா என்று மனம் நொந்த தபஸ்வினியான அவரது மகள் அவருக்கு குஷ்டநோய் பிடிக்குமாறு சாபம் கொடுத்தாள். குஷ்ட நோயால் அவர் அவதிப்படுவதைப் பார்த்த பின்னர் மகள் வருத்தமடைந்து அவரை சூரியனைக் குறித்து நூறு பாடல்களைக் கொண்ட சதகம் ஒன்றை இயற்றக் கூறினாள். மயூரர் சதகத்தை இயற்றி சூரியனைத் துதிக்கவே அவர் குஷ்டம் நீங்கியது. ஹர்ஷவர்த்தனர் உள்ளிட்ட அனைவரும் பிரமித்தனர். பல்வேறு  மந்திரங்களை உள்ளடக்கிய இந்த சதகம் குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் போக்கும்.

சூரிய நமஸ்காரம்; மிக அற்புதமான உடல் பயிற்சி இது. சூரியனுக்குரிய மந்திரங்களைச் சொல்லி இதைச் செய்யும் போது உள்ளமும் பண்படுகிறது. 14 ஆசனங்களை உள்ளடக்கியுள்ள சூரிய நமஸ்காரத்தைச் செய்வோர் நீடித்த ஆயுளுடனும் நல்ல தேக ஆரோக்கியத்துடனும் திகழ்வர். இதற்கு எடுத்துக்காட்டாக நூறு வயது சென்னையில் வாழ்ந்தவர் யோகி கிருஷ்ணமாசார்யா. இவரது சரித்திரம் அற்புதமானது. சூரியனைத் தொழாமல் இவர் எதையும் செய்ததில்லை.

சூரியன் வழிபட்ட 12 தலங்கள் மிகவும் சிறப்புள்ளவை. 1) கேதாரம் 2) திருக்கோலக்கா 3) திருவெண்காடு 4) சாயாவனம் 5) கருங்குயில்நாதபுரம் 6) திருத்துருத்தி 7) ஶ்ரீ வாஞ்சியம் 8) திருநாகேஸ்வரம் 9) குடந்தைக் கீழ்க்கோட்டம் 10) தேதியூர் 11) திருமீயச்சூர் 12) திருவாவடுதுறை ஆகிய தலங்கள் பெருமை வாய்ந்தவை.

இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள தலங்களாக திருமீயச்சூர், திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், ஆகியவை திகழ்கின்றன.

இன்னும் இன்னம்பர், திருவையாறு, திருத்தாளமுடையார் கோவில் திருக்கழுக்குன்றம், பருதிநியமம், திருவாடானை ஆகிய தலங்களும் சூரியன் பூஜித்த தலங்களாகும். இங்கு வழிபாடு நடத்துவோருக்கு அனைத்து நலன்களும் சித்திக்கும்.

சூரியனுக்கே பிரத்யேகமாக நாடு முழுவதுமுள்ள ஆலயங்களில் ஒரிஸாவில் உள்ள கோனார்க்,.குஜராத்தில் மொதெரா, காஷ்மீரில் மார்தாண்ட கோவில், ஆந்திராவில் அரசவல்லி கோவில்.. தமிழ்நாட்டில் சூரியனார் கோவில் உள்ளிட்ட ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களாகும்.

சூரிய தேவனை தினமும் வழிபடுவோம். ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவோமாக.

***

Leave a comment

Leave a comment