WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,169
Date uploaded in Sydney, Australia — 3 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே—
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
அபிராமி பட்டர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது அட்டவீரட்டதலங்களில் ஒன்றாக அமையும் திருக்கடையூர் திருத்தலமாகும்.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை – தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் இது 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலிலிருந்து வடக்கில் 15 கிலோமீட்டர் தொலைவிலும் இது உள்ளது/
இறைவர் : அமிர்த கடேஸ்வரர், அமிர்த லிங்கேஸ்வரர்
இறைவி : அபிராமி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை, தீர்த்தம்,
தல விருக்ஷம் : பிஞ்சிலம் என்னும் ஜாதிமல்லிகைக் கொடி
திருமால் உள்ளிட்ட தேவர்கள் தூய இடத்தில் உண்ண வேண்டும் என்று அமுத கடத்தை இங்கு கொண்டு வந்து வைத்தனர். அதனால் இது கடபுரி அல்லது கடவூர் என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்பதை அவர் தனது தந்தையார் மிருகண்டு முனிவர் மூலம் அறிய தலந்தோறும் சென்று சிவபிரானைத் தொழுது வந்தார். பதினாறு வயதாகும் போது 108வது தலமாக திருக்கடவூரில் அவர் சிவனைத் தொழும் சமயம் காலம் முடிந்ததால் எருமை வாகனத்தில் ஏறி வந்த எமன் மார்க்கண்டேயரை அவர் பூசிக்கும் சிவபிரானுடன் பாசக் கயிறை வீசி சேர்த்து இழுத்தார். உடனே சிவபிரான் கால சங்கார மூர்த்தியாக வெளிப்பட்டு எமனை உதைத்து தள்ளினார். மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவியாய் என்றும் பதினாறாய் இருப்பாயாக என்று அருள் பாலித்தார்.
இங்கு ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மா சிவனை வழிபட அவர் ஒரு வில்வ விதையினைக் கொடுத்து, ‘இது விதைத்தவுடன் ஒரு முகூர்த்த காலத்தில் எங்கு விளைகின்றதோ அங்கு எம்மை வழிபடுவாயாக’ என்று கூறி அருளினார். இத்தலத்தில் விதை முளைக்க இங்கேயே இருந்து பிரம்மா வழிபட சிவன் அவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார். ஆகவே இத்தலத்திற்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது.
அடுத்து மார்க்கண்டேயர் அமிர்தகடேசருக்கு பிஞ்சிலம் எனப்படும் ஜாதிமல்லிகையுடன் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்ததால் இது பிஞ்சிலவனம் என்னும் பெயரைப் பெற்றது.
இது அஷ்ட வீரட்டான க்ஷேத்ரத்தில் ஒன்று.
திருக்கண்டியூர் – பிரமன் சிரம் கொய்த தலமாகும்.
திருக்கோவிலூர் – அந்தகாசுரனை சம்ஹரித்த தலமாகும்.
திரு அதிகை – திருபுரத்தை எரித்த தலமாகும்.
திருப்பறியலூர் – தக்ஷனின் சிரத்தைக் கொய்த தலமாகும்.
திருவிற்குடி – ஜலந்தராசுரனை சம்ஹரித்த தலமாகும்.
வழுவூர் -யானையை உரித்த தலமாகும்.
திருக்குறுக்கை – காமனை எரித்த தலமாகும்.
திருகடவூர் – யமனை உதைத்த தலமாகும்.
அமிர்தலிங்கத்தினை பூசித்த பிரமன் உள்ளிட்டோர் அமிர்தத்தைக் காணாமல் திகைத்தனர். உடனே சிவபிரான் விநாயகப் பெருமானைத் துதியுங்கள் என்று அருள் பாலிக்க ஒளிந்து இருந்த கணபதி அவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். அவர்களும் அமுதப் பெருக்கினை உண்டனர். இங்குள்ள கணபதி சோர கணபதி அல்லது கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
புலத்திய மஹரிஷி இங்கு மார்க்கண்டேயரைக் காண வந்தார். அப்போது அமிர்தலிங்கேஸ்வரரை பூஜித்து ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இவரை பூஜித்தவர்கள் புண்ணியமடைவர் என்பதால் இவருக்கு புண்ணியவர்த்தனர் என்ற பெயர் ஏற்பட்டது.
அகத்திய முனிவர் இங்கு பூஜித்து பாவத்தைப் போக்க அருளியதால் இறைவனுக்கு பாப விமோசனர் என்ற பெயர் ஏற்பட்டது.
இங்கு எமனுக்கு உற்சவத் திருமேனி – சந்நிதி உள்ளது.
இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரப் பாடலகளைப் பாடி அருளியுள்ளனர். அப்பரும் திருஞானசம்பந்தரும் ஒரு சேர இங்கு எழுந்தருளியது இன்னொரு சிறப்பாகும். இன்னும் பல அருளாளர்களும் பாடல்களைப் படைத்துள்ளனர்.
இத்தலமே மிருகண்டு மஹரிஷி அவதரித்த தலமாகும்.
இங்கு தான் குங்குலிய கலய நாயனார், மற்றும் காரி நாயனார் ஆகியோரும் அவதரித்தனர். அவர்களுக்கு இங்கு திருவுருவச் சிலைகள் உள்ளன.
இந்தத் தலத்தின் அம்பிகையின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் அபிராமி பட்டர் ஆவார். தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் ஒரு தை அமாவாசை தினத்தன்று இத்தலத்திற்கு வந்தார். அங்கு அம்பிகையின் நினைவில் இருந்த அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் பௌர்ணமி என்று பதில் கூறினார். இதனால் வெகுண்ட அரசன் திரும்பிச் செல்ல பின்னர் நடந்ததை அறிந்த அபிராமி பட்டர் மனம் வருந்தி அம்மனின் முன் ஒரு ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கித் தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டம் அமைத்து நூறு கயிறுகளால் உறி ஒன்றையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து அபிராமி அந்தாதியை இயற்றிப் பாடலானார். ஒவ்வொரு பாடலை முடித்தவுடன் ஒரு கயிறை அறுக்கலானார். எழுபத்தொன்பதாவது பாடலை அவர் பாட அன்னை அவருக்குக் காட்சி அளித்தாள். கோடி நிலா சேர்ந்தது போல் ஒளி வெள்ளம் பெருக, “நீ சொன்னதை மெய்ப்பித்து விட்டேன்” என்று கூறி அம்பிகை அருள் பாலித்தாள். அபிராமி பட்டரின் நூறு பாடல்களும் அற்புதமான பாடல்களாகும்.
இந்தத் திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அமிர்த கடேஸ்வரரும் அபிராமி அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**