

Post No. 14,171
Date uploaded in Sydney, Australia – –4 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசரிக்கப்படுகிறது.
அபிராமி பட்டர் – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் திருமதி லக்ஷ்மி அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
அற்புதமான எல்லாம் வல்ல பராசக்தியின் மகிமையை தன் வாழ்நாளிலே உணர்ந்ததோடு அதை உலகிற்கும் பாக்கள் வாயிலாகத் தந்த அபிராமி பட்டரைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் அபிராமி பட்டர்.
இவரது இயற் பெயர் சுப்ரமண்ய ஐயர்.
சோழநாட்டில் உள்ள திருக்கடையூரில் அந்தணர் குலத்திலே பிறந்தவர் இவ\ர்.
ஶ்ரீ வித்யா உபாசகராக இருந்த இவர் திருக்கடையூரில் அருள் பாலித்து வந்த அபிராமி தேவியைத் தவறாது வழிபட்டு வந்தார்.
இவரது வாழ்விலே ஒரு அரிய சம்பவம் நடைபெற்றது.

அந்தக் காலத்தில் தஞ்சையை மகராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி நன்கு ஆண்டு வந்தார். சிறந்த தெய்வ பக்தி கொண்ட அவர் ஒரு முறை திருக்கடையூருக்கு வருகை புரிந்தார். தை மாதத்தில் அவர் வந்தது ஒரு அமாவாசை தினத்தன்று. மன்னரின் வருகையால் பரபரப்புடன் இருந்த திருக்கோவிலில் அன்னையின் பக்தியில் மூழ்கி பரவசமாக இருந்த அபிராமி பட்டர் மன்னரைக் கவனிக்கவில்லை. இதைப் பார்த்த சரபோஜி மன்னர், இவர் யார் என்று கேட்க, இவர் தெய்வ பக்தியில் மூழ்கிய ஒரு பித்தர் என்று அங்கிருந்தோர் பதில் உரைத்தனர்.
தரிசனம் முடிந்த வேளையில் அபிராமி பட்டரை நோக்கிய மன்னர்.”இன்று என்ன திதி என்று கேட்டார். அம்பிகையை ஒளி வெள்ளமாகவே வழிபட்டு வந்த பட்டர் எதிரில் இருந்த ஜோதிமயமான அன்னையின் திவ்ய சொரூபத்தில் மூழ்கியவாறே, “இன்று பௌர்ணமி” என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட மன்னர் அங்கிருந்து செல்லும் போது, ‘இன்று பௌர்ணமி நிலவை நான் காணவில்லையெனில் இவர் தண்டிக்கப்படுவார்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
மன்னர் சென்றவுடன் சுய நினைவு திரும்பியவுடன் நடந்த அனைத்தையும் அறிந்தார் அபிராமி பட்டர்.
சொல்லவொண்ணா வேதனையில் ஆழ்ந்த அவர் தன்னை ஊரும் உலகமும் பித்தர் என்று எண்ணி அப்படியே சொல்கின்றனரே என்று எண்ணினார். இப்படித் தவறாகக் கருதப்படும் தன்னை அம்பிகையே காத்தருள வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர் அம்பிகைக்கு முன்னால் ஒரு பெரிய குழியை வெட்டச் சொன்னார். அதில் விறகுகளை அடுக்கி தீயை மூட்டினார். தீ கனல் விட்டு கொழுந்தெரிந்தது. குழிக்கு மேல் ஒரு விட்டத்தைக் கட்டி நூறு கயிறுகளால் கட்டப்பட்ட உறி ஒன்றையும் அவர் நிறுவினார்.
அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் இருந்த அந்த உறியில் அமர்ந்த அவர் செந்தமிழ் துதிப் பாடல்களைப் பாடலானார். அம்பிகையின் தரிசனம் தரும் வரை பாடுவது இல்லையேல் உயிரை விடுவது என்ற முடிவில் அவர் உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடலைத் தொடங்கினார்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்–என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே.
ஒவ்வொரு பாடல் முடிவிலும் அம்பிகை தரிசனம் தரவில்லை எனில் நூறு கயிறுகளில் ஒன்றை அவர் அறுத்தார்.
நூறு பாடல்களிலும் அம்பிகை தரிசனம் தரவில்லை எனில் எரிதழல் புகுவதென்ற அவர் நிலைப்பாட்டைக் கண்ட அனைவரும் திகைத்தனர்.
இப்படி ஒவ்வொரு பாடலாக அவர் பாட அம்பிகையின் தரிசனம் கிடைக்காத நிலையில் அவரும் ஒவ்வொரு கயிறாக அறுத்து வந்தார்.
எழுபத்தொன்பாவது பாடல் மலர ஆரம்பித்தது.
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே
என்ற பாடலை அவர் பாடிய உடன் அபிராமி அம்மை பட்டருக்குக் காட்சி அளித்தாள். வானமெங்கும் ஒளி வெள்ளம் பரவ அந்த அமாவாசை தினமானது அம்பிகையின் அருளால் பௌர்ணமியைப் போலத் திகழ்ந்தது.
நடந்தது அனைத்தையும் அறிந்த மன்னர் ஆச்சரியப்பட்டு அபிராமி பட்டரின் மன்னிப்புக் கோரினார். அத்துடன் மட்டுமின்றி தனது மானியமாக நிலம் உள்ளிட்டவற்றை அவருக்கு அளித்தார். அது இன்று வரை அவரது சந்ததியினரிடம் இருந்து வருகிறது.
‘அந்தாதியைத் தொடர்ந்து பாடுக’ என்று அருளி அன்னை மறையவே நூறு பாடல்களையும் பாடி முடித்தார் பட்டர்.
அது அபிராமி அந்தாதி என்ற பெயரைக் கொண்டு உலகில் பரவ ஆரம்பித்தது.
**