
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,174
Date uploaded in Sydney, Australia – –5 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசரிக்கப்படுகிறது.
அபிராமி பட்டர் – 2
இன்றும் திருக்கடையூரில் அபிராமி பட்டர் வாழ்ந்த வீட்டைக் காணலாம். அங்குள்ள மேல் வளாகத்தில் உள்ளது அபிராமி பட்டரின் வீடு. ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று அங்குள்ள ஆலயத்தில் அபிராமி பட்டரின் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அபிராமி அம்மை நவரத்தின அங்கி அணிந்திருக்க அம்பிகை முன் அபிராமி அந்தாதி பாடப்படும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தங்கக் காசு சமர்ப்பிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெறும்.
79வது பாடலின் முடிவில் கொடிமரத்திற்கு அடியில் பௌர்ணமி நிலவு தோன்றுவது போன்ற நிகழ்வு நடைபெறும். கோவிலின் அனைத்து விளக்கும் அணைக்கப்பட்டு இருளில் பௌர்ணமி நிலவு ஒளியுடன் காணப்படுவது போன்ற திருவிழா அம்பிகையின் திருவிளையாடலைக் காட்டும் விழாவாக அமையும்.
அபிராமி அந்தாதி ஏராளமான சிறப்புகளைக் கொண்டதாகும்.
உதிக்கின்ற என்று ஆரம்பித்த அந்தாதி உதிக்கின்ற என்ற அதே சொல்லோடு முடிந்தது.
அந்தாதியின் நூறாவது பாடல் இது. உதிக்கின்றவே என்று முடிவதைப் பார்க்கலாம்.
குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

ஒவ்வோரு பாடலின் இறுதி அடியில் வரும் சொல்லே அடுத்த பாடலின் முதல் அடியில் வரும் முதல் சொல்லாக அமைந்தது. இது தமிழ் யாப்பு இலக்கணப்படி அந்தாதி என வழங்கப்படுகிறது.
ஶ்ரீ வித்யா உபாசகர் என்பதால் அம்பிகையின் பெருமையையும் ஏராளமான அம்பிகையின் மகிமையைக் குறிக்கும் பெயர்களையும் ஆதில் ஆழப் புதைந்து கிடக்கும் இரகசியங்களையும் அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
“மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே” என்று அவர் கூறுவதிலிருந்து அவரது எளிமையான பக்தி வெளிப்படுகிறது.
இந்த நூலை ஆயிரக்கணக்கானோர் இன்றும் பாராயணம் செய்து வருவது கண்கூடு.
அபிராமி அன்னையைத் தொழுது துதிப்பதால் என்னென்ன நலன்கள் ஏற்படும் என்பதை அவரே ஒரு பாடலில் கூறுகிறார்:
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (பாடல் எண் 69)
இது மட்டுமின்றி நூலின் பயனாக இதை ஓதுபவர்க்கு ஒரு தீங்கும் வராது என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…

அபிராமி அந்தாதியுடன் அபிராமி பட்டர், அபிராமியம்மை பதிகம், கள்ள விநாயகப் பதிகம், அமுதகடேசர் பதிகம், கால சங்காரமுர்த்தி பதிகம் உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் சொற்சுவையுடனும் பொருள் சுவையுடனும் அமைந்திருக்கும்.
அபிராமியம்மை பதிகத்தில் உள்ள ஒரு பாடல் அபிராமி அம்மையைத் தொழுவார்க்குக் கிடைக்கும் நலன்களைப் பட்டியலிடுகிறது.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
அபிராமி அந்தாதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் நாமங்கள் பலவற்றைக் காணலாம்.
அகிமாலினி, அம்பிகை, சாம்பவி, சாமளை, பராசக்தி, மாதங்கி, வாராகி, உள்ளிட்ட பல நாமங்களை இந்த அந்தாதியில் காண முடிகிறது.
அபிராமி அந்தாதிக்கு நல்ல உரை தந்து உதவியவர் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.
இதற்கு எளிய தமிழில் கவிஞர் கண்ணதாசன் ஒரு விளக்கவுரையை அளித்துள்ளார்.
இவற்றைப் படிப்பது அபிராமி அன்னையின் மகிமையை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.
காலம் காலமாக தன்னைத் தொழுகின்ற அனைவருக்கும் அனைத்து நலன்களையும் தரும் அபிராமி அன்னை ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர, வேண்டிக் கொண்டு என் உரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!