
கும்ரான் குகைகள்

Post No. 14,183
Date uploaded in Sydney, Australia – –8 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
30-1-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்
செரிண்டிபிடி கண்டுபிடிப்பு : பைபிள் விவரங்களைத் தந்த சாவுக்கடல் குகைச் சுருள்கள்!
ச. நாகராஜன்
செரிண்டிபிடி (Serendipity) எனப்படும் தற்செயல் கண்டுபிடிப்பால் நான்கு சிறுவர்கள் லஸ்காக்ஸ் கேவ்- ஐக் கண்டுபிடித்ததைப் போல ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பைபிளின் அபூர்வமான விவரங்களைத் தரும் சுருள்களை ஒரு குகையில் கண்டுபிடித்தது உலகையே பிரமிக்க வைத்தது.
டெட் சீ ஸ்க்ரால்ஸ் (DEAD SEA SCROLLS) என்று புகழ் பெற்றிருக்கும் அந்தச் சம்பவம் இது தான்!
1947ம் ஆண்டு ஒரு நாள் ஆடுகளை மேய்க்கும் ஒரு பாலைவனச் சிறுவன் சாவுக்கடலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மலைச் சிகரங்களில் தன் ஆட்டைத் தொலைத்து விட்டான். அதைத் தேடிக்கொண்டே சென்ற அவன் ஓரிடத்தில் ஒரு சிறிய துவாரத்தைக் கண்டான். அதில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்ட அவன் டங் என்ற சப்தத்தைக் கண்டு பயந்து போனான். ஆனால் அவன் தன் நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு அந்த துவாரத்தின் உள்ளே தவழ்ந்து சென்றான்.
அங்கு குகையில் பல பெரிய மண் பானைகளைப் பார்த்து அதிசயித்தான். அதில் மெதுவாகக் கையை விட்டுப் பார்த்த போது பட்டுத்துணியில் சுற்றப்பட்டிருந்த பல காகிதத்தோல்களைக் கண்டான். அவற்றில் சிலவற்றை எடுத்து வந்து 13 மைல் தூரத்திலிருந்த ஜெருசலத்தில் சிரியன் பிஷப் ஒருவருக்கு விற்றான்.
அந்த பிஷப் அதை அமெரிக்கன் ஓரியண்டல் ஆய்வுப் பள்ளியில் கொடுத்து ஆராயச் சொன்னார். அதில் இருந்தவை அனைத்தும் ஹிப்ரூ மொழியிலிருந்த எழுத்துக்கள்!
இதனால் மிகவும் அதிசயித்துப் போன இரு டாக்டர்களான ஜான் சி,
ட்ரெவர் மற்றும் வில்லியம் ப்ரவுன் லீ (Doctors John C. Trever and William Brownlee) ஆகியோர் இவற்றை போட்டோ எடுத்தனர். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஹிப்ரூ மொழி வல்லுநரான டாக்டர் வில்லியம் ஆல்பிரைட்டுக்கு (Doctor William F.Albright) அனுப்பினர். அவர் அவற்றை ஆராய்ந்து கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை அவை என்று அறிவித்தார். இது ஒரு நம்பவே முடியாத அபூர்வ கண்டுபிடிப்பு என்று அவர் அறிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு உருவானது.
ஆயிரம் வருடங்கள் பழமையான பைபிள் பிரதிகளை அந்தப்பகுதியிலிருந்த எல்லோரும் தேடி அலைய ஆரம்பித்தனர்.
இது அவர்களுக்கு அதிக பணத்தைத் தரும் ஒரு புதிய வழியாக ஆகவே அவர்கள் பாறைகளையும் குகைப்பகுதிகளையும் பரந்த பாலைவனத்தில் தேட ஆரம்பித்தனர்.
முதலாவது குகை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கும் குறைவாக இன்னொரு குகை கண்டுபிடிக்கப்பட்டது.
இது கும்ரான் குகை (Qumran cave) என்று அழைக்கப்பட்டது.
இப்படியாக தேடுதல் வேட்டையில் 400 சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன! எஸ்தரைத் தவிர பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியும் எடுக்கப்பட்டது.
இஸ்ரேலிய யூத பண்பாட்டுப் பழம் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தப் பகுதிக்கு உலகெங்கிலுமிருந்து பயணிகள் வருவது வழக்கமாக ஆகி விட்டது இப்போது!
***