
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,357
Date uploaded in London –7 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகனைத்தும் விளக்கும் ஜோதி
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை செங்கண் நெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிரக் காணும் நாளே!
– குலசேகர ஆழ்வார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் கோதண்டராமர் குடி கொண்டுள்ள வடுவூர் ஆகும். தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம்.
தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இது பஞ்ச ராமர் ஸ்தலங்களில் ஒன்றும் ஆகும். இது வைணவர்களின் 108 அபிமான ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைகிறது!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முடிகொண்டான் கோதண்டராமர் கோவில், அதம்பார் கோதண்டராமர் கோவில், பருத்தியூர் ராமர் கோவில் தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோவில் வடுவூர் கோதண்டராமர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களும் அமைந்துள்ள இடங்கள் பஞ்ச ராமர் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரே நாளில் இந்த ஐந்து திருத்தலங்களையும் வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. அயோத்திக்குச் செல்ல முடியவில்லையே என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்தத் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனதிருப்தி அடைகின்றனர்.
இங்கு வழிபட்டால் பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
இங்கு மூலவர் கோதண்டராமர்
தாயார் சீதா தேவி
ஶ்ரீ ராமர் சீதாதேவியுடனும் லட்சுமணன் ஹனுமாருடனும் இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள உற்சவ மூர்த்தியின் அழகு அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அற்புத அழகைக் கொண்டது.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.
வனவாசம் முடிந்து இராமர் அயோத்திக்குக் கிளம்பினார். அவரைத் தங்களுடேனேயே தங்குமாறு முனிவர்கள் வேண்டினர். தான் தங்கி இருந்த இடத்தில் தனது சிலை ஒன்றை அமைத்து அங்கு வைத்தார் ராமர். ,முனிவர்கள் அதைத் தங்களுக்கே கொடுக்குமாறு வேண்ட அப்படியே அருளினார் ராமர். ராமரை அங்கிருந்தே வழிபடலாயினர் முனிவர்களும் இதர மக்களும்.
காலப்போக்கில் இந்த சிலை இருந்த இடம் தெரியாமல் போனது.
பிற்காலத்தில் தலைஞாயிறு என்ற இடத்தில் தான் கண்டெடுத்த ராமர் சிலையை இங்கு ஸ்தாபித்தார் மராத்தியமன்னரான சரபோஜி.
இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
ஒரு சமயம் சரபோஜி மன்னர் தனது யாத்திரை ஒன்றில் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு பூமியிலிருந்து ஜெய் ஶ்ரீ ராம் என்ற ஒலி வந்தது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னர் அந்த இடத்தைத் தோண்டுமாறு உத்தரவிட்டார்.
அங்கே ராமர், சீதை, பரதர், லட்சுமணர், சத்ருக்னன், ஹனுமார் ஆகிய சிலைகள் இருந்தன. அங்குள்ள மக்கள் அந்தச் சிலைகளை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆகவே பரத சத்ருக்னர் சிலைகளை அங்கேயே கிராம மக்கள் வழிபட நிர்மாணித்தார் மன்னர்.
கிராமத்தார் பரதனை ராமராகவும் சத்ருக்னனை லட்சுமணராகவும் நிர்மாணித்து புதிதாக சீதா தேவியின் சிலையைச் செய்து ஸ்தாபித்தனர்.
ராமர்சிலையை ஊர்வலமாகக் கொண்டு சென்ற போது வடுவூரை நெருங்கிய சமயத்தில் அனைவரும் சற்று ஓய்வு எடுத்தனர். அப்போது சரபோஜி மன்னர் கனவில் ராமர் தோன்றி தன்னை அங்கேயே அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்.
அங்கேயே சரயு குளம் ஒன்றைப் புதிதாகக் கட்டி விக்ரஹங்களையும் பிரதிஷ்டை செய்தார் மன்னர்.
இதுவே வடுவூர் கோதண்டராமர் கோவிலின் வரலாறு.
ருக்மிணி சத்யபாமை ஆகிய தேவியருடன் ஶ்ரீ கிருஷ்ணர் தனி சந்நிதியில் இருந்து இங்கு அருள் பாலிக்கிறார். கோதண்டராமர் பிரதிஷ்டை செய்வதற்கு முன்பே இவரே கர்பக்ருஹத்தில் குடிகொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.
இந்த ஆலய பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஸேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்டோரின் சன்னிதிகள் உள்ளன,
ஶ்ரீ ராமநவமியையொட்டி இங்கு பத்து நாட்கள் ப்ரம்மோத்ஸவம் நடைபெறும். பக்தர்கள் திரளாகக் கூடி வழிபடுவது வழக்கம். கருட சேவை மற்றும் தேர் உற்சவம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள தேர் மன்னார்குடியில் உள்ள தேரை அடுத்து மிகவும் பெரிய தேராகும். வடுவூர் கிராமத்தில் உள்ள வடபதி மற்றும் தென்பதி என்று அழைக்கப்படும் கிராமத்தோர் இந்த தேர் உற்சவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தேரின் ஒவ்வொரு வடத்தையும் தென்பதி மற்றும் வடபதி மக்கள் இழுப்பது மிகவும் பிரசித்தமான ஒன்று. வைகுண்ட ஏகாதசித் திருநாளும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ கோதண்டராமரும் சீதா தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**