இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்! (Post.14,381)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,381

Date uploaded in London – –13 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளிவந்த கட்டுரை! 

நட்சத்திர மர்மங்கள்! 

இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்! 

ச. நாகராஜன் 

MILKY WAY GALAXY 

உலகில் வானவியலின் உச்சத்தைக் கண்டது இந்திய நாகரிகமே. 

வானத்தை 360 டிகிரிகளாகப் பிரித்ததும், 12 ராசிகளை அதில் அமைத்ததும், 28  நட்சத்திரங்களை அமைத்ததும் இந்திய நாகரிகமே.

அபிஜித் என்ற நட்சத்திரம் காலப்போக்கில் அதன் சுழற்சியினால் இந்த வட்டத்தை விட்டு அகன்றதும் அசுவதி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் மட்டும் எந்தக் கணிப்பிற்கும் உதவும் விதத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

இதுவே உலகெங்கும் அனைத்து நாகரிகங்களாலும் இன்றளவும் பின்பற்றப்படுவது பிரமிப்பூட்டும் ஒரு விஷயமாகும்.

யஜூர்வேதத்தில் குறிப்பிடப்படும் யாக்ஞவல்க்ய மஹரிஷி சூரிய மண்டலத்தில் 95 வருட சுழற்சியைக் கண்டு அதை அமைத்ததோடு, அது சமச்சீரற்றதாக இருப்பதையும் கண்டார்.

பின்னால் வந்த லகாதர் இன்னும் கிரகங்களின் இயக்கத்தை விரிவாக எழுதினார்.

கல்பம் யுகம் ஆகியவை பற்றி இந்திய வானவியல் மிகத் துல்லியமாகத் தெரிவித்ததோடு அதற்கான வருடங்களையும் நிர்ணயித்துத் தந்தது.

பூமி தோன்றிய காலத்தை இந்திய வானவியல் நிபுணர்கள் நிர்ணயித்ததை கார்ல் சகன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வியப்புடன் நோக்கினர்.

உலகின் அனைத்து நாகரிகங்கள் கூறும் தோற்றத்தை விட இந்திய நாகரிகம் துல்லியமாகக் கூறிய பிரபஞ்ச தோற்றத்தைக் கண்டு வியந்த அவர் நேராக சிதம்பரத்திற்கு வந்து பிரபஞ்ச நடனம் ஆடும் நடராஜரைத் தரிசித்தார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பேயே சித்தாந்த நூல்கள் தோன்றின. 18 சித்தாந்த நூல்கள் அனைத்து வானவியல் ரகசியங்களையும் வெளியிட்டன.

சூரிய சித்தாந்தம் கிரக இயக்கங்களைக் கூறியதோடு அவற்றை ஒன்றோடு ஒன்று பிணைக்கும் விவரத்தையும் தெரிவித்தது.

பின்னர் வந்த ஆர்யபட்டர் பூமி தன்னைத் தானே சுழல்கிறது என்ற விவரத்தைத் தந்தார்.

கணேசர், கேசவர் ஆகியோரின் நூல்கள் இன்றளவும் நமக்கு வழிகாட்டி வருகின்றன.

பிரம்மகுப்தா, பாஸ்கரா ஆகியோரின் நூல்கள் அராபிய நாட்டின் வழியாக ஐரோப்பாவிற்குச் சென்றன.

வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகியவற்றிலும் பின்னர் வந்த காளிதாஸன் நூல்களிலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் உள்ளன.

ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் உள்ள நட்சத்திரங்களை பாமரரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கதை ரூபத்தில் அனைத்தும் தரப்பட்டன.

பாலகங்காதர திலகர், காளிநாத் முகர்ஜி உள்ளிட்ட அறிஞர்கள் மிகத் தெளிவாக வானத்தில் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் சித்தரிக்கும் நட்சத்திரங்களைச் சுட்டிக் காட்டினர்.

இந்த பிரம்மாண்டமான கலைக்களஞ்சியம் எப்படிப்பட்டது என்பதை விளக்க கீழே இரு உதாரணங்களைப் பார்க்கலாம்.

பிரபஞ்சத்தின் தலை நகரம்

மில்கி வே எனப்படும் பால்வீதி மண்டலத்தில் உள்ள அக்கிலா எனப்படும் திருவோண நட்சத்திரம் மஹாவிஷ்ணுவை அதி தேவதையாகக் கொண்டது. மகர ராசியில் உள்ளது இந்த நட்சத்திரத் தொகுதி. அக்கிலா தொகுதியில் மேலே உள்ள மூன்று நட்சத்திரங்கள் கருடனின் தலைப்பகுதியை உருவாக்குகின்றன.

பால்வீதி மண்டலத்தில் உள்ள பத்து நட்சத்திரங்களான ஊர்ஸா மேஜர், பூட்டஸ், செர்பன்ஸ், ஓபியுகஸ், தேன் கூடு M 13, கரோனா பொராவிஸ், லிரா, சிக்னஸ், அக்கிலா, டெல்பினஸ் ஆகியவற்றை இணைத்தால் குடை விரித்த பாம்பான ஆதிசேஷனைப் பார்க்கலாம். இதுவே பிரபஞ்சத்தின் தலை நகரமாகும்.

அர்ஜுனனும் பீஷ்மரும்

அர்ஜுனனுக்கு பல்குனன் என்ற பெயர் உண்டு. பங்குனி மாதம் பல்குனி நட்சத்திரத்தில் உதித்ததால் அவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. (பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்பவை பூரம்  மற்றும் உத்தர நட்சத்திரங்களாகும்.)

மகாபாரத யுத்தம் நடந்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக சட்சத்திரத்தில் வான ரேகை சென்றது. இந்த நட்சத்திர தொகுதிக்கு சிகண்டி மண்டலம் (மயில்) என்று பெயர்.

பூரம், உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே வரும் இது தோன்றியவுடன் பீஷ்மர் தனது கொள்கையின் படி சிகண்டியை எதிர்க்காது போரை நிறுத்தி விடுகிறார். அர்ஜுனனின் அம்பால் அவர் வீழ்ந்து படுகிறார். அர்ஜுனன் விட்ட அம்பு நேரே பல்குன நட்சத்திரத்திற்கு நேர் எதிரே 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தை – பீஷ்மரைக் குறி பார்த்து அடித்தன. பீஷ்மர் அடியுண்டு வீழ்ந்தார். இன்றும் கூட அர்ஜுனனின் பல்குன நட்சத்திரம் வானில் உதித்தால் பீஷ்மரின் அவிட்ட நட்சத்திரம் கீழே மறைவதைக் காணலாம்!

இப்படி நூற்றுக் கணக்கில் ஏராளமான வானவியல் குறிப்புகள் இதிஹாஸ, புராணங்களில் உள்ளன. அவற்றை ஆர்வமுள்ளோர் தொகுத்துப் பார்த்து இன்புறலாம்!

***

Leave a comment

Leave a comment