அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், உபநிஷத் கூற்று (Post No.14,419)

Written by London Swaminathan

Post No. 14,419

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Picture from New Scientist 

அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், பிருஹத் ஆரண்யக உபநிஷத்  கூற்று

சரக ஸம்ஹிதையும் பெருங்காட்டு ( பிருஹத் ஆரண்யக)  உபநிஷத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ஆன்றோர் கணிப்பு; அப்போதே உடலையும் பிரபஞ்சத்தையும் ஒப்பிடும் அளவுக்கு இந்துக்களின் விஞ்ஞான நோக்கு இருந்தது. இதைப்  பிற்காலத்தில் கிரேக்கர்கள் நம்மிடமிருந்து கற்று மைக்ரோ காஸம் ,மேக்ரோ காஸம் Microcosm , Macrocosm   என்று பகர்ந்தார்கள்; கிரேக்கர்கள் எதையும் இயற்றுவதற்கு முன்னரே சம்ஸ்க்ருத நூல்கள் எழுதப்பட்டுவிட்டன.  

பிரபஞ்சத்தில் உள்ள சக்தியும், பொருளும் நமது உடலிலும் காணப்படுகிறது என்ற கூற்று தமிழிலும் சம்ஸ்க்ருதத்தி லும் நீண்ட நெடுங்காலமாக உள்ள கூற்று ஆகும் यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ “Your Body is a Miniature Universe” யத் பிண்டே தத் ப்ரஹ்மாண்டே என்பது சம்ஸ்க்ருத வாக்கியம் ஆகும். இதைத் தமிழில் பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் உளது என்று சொன்னார்கள்.

இதை சரக சம்ஹிதை பின்வருமாறு செப்புகிறது:

ஏவமயம் லோகசமிதஹ புருஷஹ 4-4-13 மனிதன் என்பவன் உலகத்தின் ஒட்டுமொத்த வடிவம் –என்பது இதன் பொருள்.

ஒருவனிடத்திலுள்ள குணங்கள் பிரபஞ்ச சக்திகளின் பிரதிபலிப்பே 4-5-5 என்று 3000  ஆண்டுப்  பழமையான சரக சம்ஹிதை புகல்கிறது.

கீழ்கண்ட அட்டவணையில் சரகர் கூறியதைக் காணலாம் –

தட்சப் பிரஜாபதி வடிவத்தில் பிரம்மன்  = ஆத்மாவைப் பிரதிபலிக்கும் மனித மனம்

இந்திரன் = அஹம்காரம்

ஆதித்யன் =  திரட்சி ; நாம் சேர்த்துவைத்தது

ருத்ரன் =  கோபம்

சோமன் = இன்பம்

வசூஸ் = மகிழ்ச்சி

அஸ்வினி தேவர்கள்= புறத் தோற்றம்; வசீகரம்

மருத் = உற்சாகம்

விச்வே தேவர்கள் – புலன்களும் புலன் உணர்வுகளும்

தமஸ் = அறியாமை

ஜோதி = அறிவு

உற்பத்தி / படைப்பு = கருவுறுதல்

கிருத யுகம் = குழந்தைப் பருவம்

த்வாபர யுகம் = நடுத்தர வயது

கலியுகம் = வயதான காலம்

பிரளயம் = மரணம்

****

உபநிஷத காலத்திலேயே கல்லூரி ‘சயன்ஸ்  லேப்’-பில் COLLEGE SCIENCE LABORATORY சோதனைகளைச் செய்வது போலத்தான் முனிவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

மாணவனை உப்பைக் கொண்டுவரச் சொல்லி அதை ஒரு கோப்பைத் தண்ணீரில் போடச் சொல்லி அது கரைந்து மறந்ததை வைத்தும்  , ஒரு  பெரிய ஆலமத்தின் விதையினைக் கொண்டுவரச் செய்து  அதிலிருந்து பிரம்மாண்டமான ஆலமரம் உருவானது எப்படி என்று கேட்டும் சிந்தனையைத் தூண்டினார்கள் .

பெருங் காட்டு / பிருஹத் ஆரண்யக உபநிஷத்துதான் பதினெட்டு உபநிஷதங்களில் பழமையானது . அதில் பிரபஞ்சம் என்பதற்குப் பதிலாக மரத்தினைக் காட்டி அதிலுள்ள உறுப்புகளை மனிதனுடன் ஒப்பிடுகிறார் ரிஷி முனிவர் . இந்த உபநிஷத்தில் வரும் யாக்ஞவல்கியர், மைத்ரேயி காத்யாயனி ஆகியோரின் கதைகளை நாம் அறிவோம்.

காட்டிலுள்ள மரத்தைப் போன்றவனே மனிதன் ;

மனிதனின் தலை முடிகளே இலைகள்;

அவனது தோலே மரத்தின்  பட்டை;

சர்மத்திலிருந்து ரத்தம் கசிவது போல மரப்பட்டையிலிருந்து கோந்து கசிகிறது .

தோலைத் துளைத்தால் பீச்சி அடிப்பது போல குபு குபு என்று வருகிறது .

உடலுக்குள் உள்ள சதை போல மரத்துக்குள்ளும் மரச் சோறு உண்டு .

அதன் நாரோ சதை போல வலுவுடையது ;

வைரம் பாய்ந்த மரத்தினைப் போல மனிதனுக்குள் எலும்பு இருக்கிறது .

எலும்பு மஞ்சையும் மரத்தினிலுள்ள மிருதுவான பகுதியைப் போன்றதே .

மரத்தை வெட்டினாலும் அது வளர்கிறது

வேரிலிருந்து விளைய முடிகிறது .

மனித உடல் கீழே சாய்ந்தபின்

எந்த வேரிலிருந்து அவன் மீண்டும் தோன்றுகிறான் ?

மனித விந்துவிலிருந்து என்று சொல்லாதீர்கள் ;

அது உயிருள்ளபோது மட்டுமே நிகழ முடியம் .

வேருடன் மரத்தினை வீழ்த்திவிட்டால் பின்னர் முளைப்பது எங்கே

மனிதன் வீழ்ந்தால் மீண்டும் தோன்றுவது எப்படி?

யக்ஞவல்க்ய  ரிஷியின் இந்த  உரை பிரம்மனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதாகும். மறுபிறப்பு பற்றிய சிந்தனை என்றே நான் கருதுகிறேன்.

எது எப்படியாகிலும் நாம் காணவேண்டியது அக்காலத்தில் நிலவிய சிந்தனையைத்  தூண்டும் ஒப்பீடுகள் தான் !

–SUBHAM—

TAGS- அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு , சரகர், பிருஹத் ஆரண்யக உபநிஷத் .

Leave a comment

Leave a comment