
படம்- சீன மன்னர் கதை :உள்ளே காண்க
Written by London Swaminathan
Post No. 14,483
Date uploaded in London – 7 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்- Part 2 (Post No.14,483)
Part-2
பெண்போகம் ஒரு துரும்பு !கல்யாண ஊர்வலத்தில் மனம் மாறிய மாப்பிள்ளை!
நேமி என்பவர் சமுத்ரவிஜயன் என்ற மன்னரின் மகன். அவர் ஷௌரிபூர் என்ற சிறிய பிரதேசத்துக்கு மன்னர். நேமிக்கும் ராஜ்மதி என்ற இளவரசிக்கும் திருமணம் நிச்சயமாகியது. அவள் பவநகர் மன்னன் உக்ரசேனனின் மகள். ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும். ஊரே அலங்காரம் செய்யப்பட்டது. மேளதாள, தாரை, தம்பட்டையுடன் பெரிய மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடாகியது!
யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் , ஆடல், பாடல் கலைஞர்களுடன் மாபிள்ளை நேமி ஊர்வலத்தில் வந்தார். அவர் வந்த ரதம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசி ராஜ்மதி எனப்படும் ரஜூலை தோழிகள் கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். அவள் அரண்மனை சாளரத்திலிருந்து, வழி மேல் விழி வைத்து, ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாண மப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், அரண்மனையிலுள்ள கல்யாண மண்டபத்தை நெருங்கிவந்துவிட்டது.
அப்பொழுது ஒரே ஆடுமாடுகளின் கோழி, கௌதாரிப் பறவைகளின் ஓலம் கேட்டது. மாப்பிள்ளைக்கு சிறிய சந்தேகம். தனது தோழர்களிடம் இது என்ன இரைச்சல்? என்று கேட்டார். உடனே அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கேட்க, அவர்கள் பெருமையுடன், எல்லாம் உங்கள் கல்யாண விருதுக்குத்தான்! இன்று கனஜோரான விருந்து கிடைக்கப்போகிறது– என்றனர்.
அதைக்கேட்ட மாப்பிள்ளை வண்டியிலிருந்து குதிக்கப் போனார். அவர்கள் எல்லோரும் என்ன ? என்ன ஆயிற்று? என்று வினவ, மாப்பிள்ளை எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கார்த்திகையும் வேண்டாம்; ரதத்தை கிர்னார் மலையை நோக்கிச் செலுத்துங்கள் என்று கட்டளையிட்டார். ரதம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தவுடன் மேளதாளங்கள் நின்றன. ஒரே பரபரப்பு. பெண் வீட்டாருக்கும் செய்தி பரவியது. ஊரே அமைதியில் ஆழ்ந்தது.
பாதி ஊர்வலத்தில் மனம் மாறிய நேமி, சமணமதத் துறவியாகப்போவதாக அறிவித்துவிட்டு கிர்னார் மலையில் சமணத் துறவிகளிடம் தஞ்சம் அடைந்தார்.
குஜராத்திலுள்ள கிர்நார் மலை பலவகைகளிலும் புனிதம் பெற்ற இடம். கண்ண பிரான் முதல் சமணத்துறவிகள் வரை எல்லோரும் பழகிய இடம். இப்பொழுது அசோகன், ருத்ரதாமன், குப்தமன்னரின் கல்வெட்டுகள் அந்த மலையை அலங்கரிக்கின்றன.
இளவரசி ரஜூலுக்கு முதலில் மன வருத்தம்; பெரிய ஏமாற்றம். 51 நாட்கள் வரை, ஒரு வேளை மணமகன், மனம் மாறிவிடக்கூடும் என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. சிறிது சிறிதாக அவர் மனதிலும் மாற்றம் உண்டானது. என்னை அடைவதைவிட ஒரு இன்பமான நிலையை என் கணவராவதற்கு இருந்த நேமி, அடையமுடியுமானால் அதே இன்பத்தை நானும் நுகர்வேன் என்று அவரும் கிர்நார் மலைக்குச் சென்று துறவி ஆனார்.
ரஜூல் என்ற ராஜ்மதி உடனே துறவியானதாகச் சில நூல்களும் சில காலத்துக்குப் பின்னர் துறவியானதாகச் சில நூல்களும் செப்பும். மேலும் இடைக்கால கவிஞர்கள் இதையே ஒரு காதல் காவியமாக மாற்றி விரகதாப பாடல்களும் எட்டுக்கட்டிவிட்டனர். நேமி- ராஜூல் மணமுறிவு, ஒரு புது வகை இலக்கியத்தையே படைத்துவிட்டது.
அதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் அந்த நேமி என்பவர்தான் சமணர்கள் போற்றும் 22ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதர். அவருக்குப் பின்னர்தான் வர்த்தமான மஹாவீரர் அவதரித்தார். அவர் புத்தருக்குக் கொஞ்சம் சீனியர்.
நேமிநாதரின் மற்றொரு பெயர் அரிஷ்ட நேமி. இவர் கிருஷ்ணருக்கு உறவினர் என்றும் அதே யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர், ரிக் வேதம் முதலிய நூல்களில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் பகர்வர். அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவரானாலும் போற்றுதலுக்குரிய புண்ணிய புருஷர் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது இவர் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. கொல்லாமை விரதம் பூண்டோருக்கு பிற தர்மம் தேவை இல்லை என்றும் வள்ளுவர் கருதுவார்.
இந்துமத யோகிகளும் சந்யாசம் ஏற்கையில் மனம் , மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று விரதம் ஏற்பர். வள்ளுவனும் இக்கருத்தைத் துறவறவியலில் கூறுவதைக் காண்க.
*****
துறவிக்கு வேந்தன் (ராஜா) துரும்பு; அவர் கோபப்பட்டால் பெரும் அரசுகள் கவிழும் என்று வள்ளுவரும் திருக்குறளில் எச்சரிக்கிறார்.

படம்–சொர்க்கத்திலிருந்து நகுஷன் விழுந்த கதை (see first part of this article)
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.
வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.
பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.
உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.
இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-
சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.
சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:
“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?
அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.
மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.
அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?
மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?
அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை.
இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.
மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார்.
மன்னன் நடுநடுங்கிப் போனார்.
மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”.
மன்னனை அடக்கிய அறிஞனின் கதை இது!
—SUBHAM—-
TAGS—துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு, எவர் துரும்பு,
குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை 7, part 2