ஆதிசங்கரரை காப்பி அடித்த கபிலரும் தொல்காப்பியரும்! (Post No.14,561)

Written by London Swaminathan

Post No. 14,561

Date uploaded in London –  28 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முகம் பார்க்கும் கண்ணாடி என்ற பொருள் மஹாபாரத காலத்திலிருந்த வழக்கிலிருந்தது பகவத் கீதை உவமையால் தெரிகிறது . ஆண்டாள், ஆதிசங்கரர், தொல்காப்பியர் முதலியோரும் இதைப் பயன்படுத்தியுள்ளனர் .

விவேக சூடாமணி மற்றும் தட்சிணாமூர்த்தி துதிகளில் ஆதிசங்கரர் கண்ணாடி உவமையைக் கூறுகிறார்.

தொல்காப்பியர் சூத்திரம் என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைப்  பொருளதிகாரத்தில் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறார்; அதில்தான் ஆடி /கண்ணாடி உவமை வருகிறது . ஆகையால் அவர் இதை சம்ஸ்க்ருதத்திலிருந்து பெற்றது தெரிகிறது .

கபிலர் என்ற அந்தணப்  புலவர் திருவள்ளுவ  மாலையில் இந்த உவமையைப் பயன் படுத்துகிறார் . அவரும் சம்ஸ்க்ருத கவிஞர் காளிதாசனைப் பின்பற்றியது குறிஞ்சிப் பாட்டிலிருந்தும், யாழ் பிரமதத்தன் என்ற வடக்கத்திய மன்னனுக்கு தமிழ் கற்பி  த்ததிலிருந்தும் அவருடைய சம்ஸ்க்ருதப் புலமை    தெரிகிறது. .

மேலும் கபிலரின் திருவள்ளுவ மாலை, தொல்காப்பிய த்திலுள்ள பொருளதிகாரம் என்பன பிற்சேர்க்கை என்பது பலரின் கருத்து; என் கருத்தும் அதுவே ; ஏனெனில் பாணினி பயன்படுத்திய சூத்திரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதோடு கண்ணாடி உவமைக்கு அடுத்த சூத்திரத்திலேயே பகவத் கீதையில் வரும் இன்னுமொரு உவமையையும் பயன்படுத்துவதால் தொல்காப்பியர் பகவத் கீதையை நன்றாகப் படித்தவர் என்பதும் தெரிகிறது இந்த உவமை சூத்ர மணி கணா என்னும் பகவத் கீதை உவமை; அதாவது நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல என்பது பொருள்.

இப்போது இவர்களது காலத்துக்கு வருவோம். ஆதி சங்கரர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்     (1894-1994 )நீண்ட வாதத்தினை முன்வைத்துள்ளார்; ஆகையால் இவர்கள் ஆதி சங்கரரிடமிருந்தே இந்த உவமைய அறிந்திருக்க வேண்டும் .

 ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்:

யத்ரைச ஜகதா பாஸோ தர்ப்பணாந்தபுரம் யதா

தத் ப்ரஹ்ம்மமிதி ஞாத்வா க்ருத க்ருத்யோபவிஷ்யசி

பொருள்:-

ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம்; இதை உணர்ந்துவிட்டால் பூரணத்துவம் பெறுவாய். பிரபஞ்சமே உன்னிடத்தில் பிரதிபலிக்கிறது.(ஆதி சங்கரர்)

அதே கருத்து மேலும் ஓரிடத்தில் வருகிறது!

ஆதிசங்கரரின் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் முதல் பாடல்

விச்வம் தர்ப்பண த்ருச்யமான

நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்

பச்யன் ஆத்மனி மாயயா பஹிரிவோத்-

பூதம் யதா நித்ரயா |

ய: சாக்ஷீ குருதே ப்ரபோத ஸமயே

ஸ்வாத்மானமேவாத்வயம்

தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம

லண்டன் மீ.ராஜகோபாலன் இதை அழகிய தமிழ்க்   கவிதையாக வடித்துள்ளார் :

கண்ணறியும் ஆடியினுள்

கவி நகரம் பிம்பமெனக்- கண்டபோது

முன்விரியும் புவியெனவும்

மூலமுறையாமெனவும் முனிதல் போல

தன பிளானும் பல வடிவும்

தடவுளாக்கும் வேறு எனது – தந்த சூதும்

உள்,மனமும் மாயவலை

உலகுதியிலாலென்றே – உணரமாறும்

பின்தெளியும்  விடியுமது

பிரம்மமதே  ஆத்மனெனப் – பிரிவு இல்லாப்

பேரருளை ஓர்பொருளாய்

நேர்முகமாய்ப் பார்ப்பனென………

தமிழிலிருந்து ஆதிசங்கரர் எடுத்தாண்டார் என்பதைவிட , ஆதிசங்கரரிடமிருந்து கபிலரும் தொல்காப்பியரும் எடுத்தாண்டனர் என்பதே நம்பக்கூடியது.

My Old Article

கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)

Date: 3 December 2016; Post No.3412

கண்ணாடி என்பது நம் நாட்டிலும் உலகில் ஏனைய பழைய நாகரீகங்களிலும் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் உள்ளது.  இது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை முதல் ஆண்டாள் பாடிய திருப்பாவை வரை (தட்டொளி) கண்ணாடியைக் காண்கிறோம். தமிழில் மிகப் பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியம் முதல் கேரளத்தில் பெருந்தலைவர் நாராயண குரு கண்ணாடிக் கோவில் வைத்தது வரை இது நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பதையும் காணலாம்..

திருவிழாக் காலங்களில் கன்யாப் பெண்களை வீட்டுக்கு அழைத்து கண்ணாடி, குங்குமச் சிமிழ், சீப்பு கொடுக்கும் வழக்கமும் உளது. தீபாவளி, விஷுக் கனி காணுதலின் போது கண்ணாடியில் முகம் பார்க்கும்/ விழிக்கும் வழக்கமும் உளது.

கண்ணாடி உடைவது அபசகுனம் முதலிய பல சகுன சாத்திர தகவலும் உள.

மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்தில் ஒருவர் பெயர் ‘புகைக் கண்ணாடி’. ஜப்பானில் ஆட்சியாளர் மாறும்போது கண்ணடி கொடுப்பர். கண்ணாடி தேவதை அமர்தரேசுவும் இருக்கிறது. எட்ருஸ்கன் நாகரீகக் கண்ணடிகளின் பின்னால் அற்புதமான வரைபடங்கள் உள்ளன.

முதலில் வான்புகழ் வள்ளுவன் தேனினும் இனிய தமிழில் செப்பியதைக் காண்போம்

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

பொருள்:-

தன்னை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகமே காட்டிவிடும்.

திருவள்ளுவமாலையில்

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனயளவு காட்டும்படித்தால் – மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி

-திருவள்ளுவ மாலை, கபிலர்

பொருள்:-

மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைக் குஞ்சுகள், உலக்கைப் பாட்டால் கண் உறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டை உடைய மன்னவனே! திரு வள்ளுவனின் குறட்பா அளவில் சிறிது; ஆனால் அது காட்டும் பொருள் மிகப்பெரிது. எப்படியென்றால், புல் நுனியில் படிந்துள்ள பனித்துளி, ஒரு தினையரிசிக்கும் சிறியது; ஆயினும் பக்கத்திலுள்ள பனைமரத்தை அதன் உள்ளே (கண்ணாடி போல) பார்க்கலாம் அல்லவா? -திருவள்ளுவ மாலை, கபிலர்

xxx

ஒல்காப் புகழ் தொல்காப்பியன் பகர்வதையும் பார்ப்போம்.

சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே

தொல்காப்பியம், பொருளதிகாரம் (சூத்திரம் 1425)

பொருள்:-

சூத்திரம் என்பது, கண்ணாடிக்குள்  அதன் பிரதிபலிப்பில் ஒரு பெரிய மலையே தோன்றுவது போல, ஆராய்தல் இல்லாமலேயே, கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும்.  யாப்பினுள் ஏதாவது ஒன்று வடிவமைத்து அமைப்பதாகும்.

 xxx

 5000 ஆண்டுப் பழமையான பகவத் கீதை கூறுவதைக் கேளுங்கள் 

பகவத் கீதையில் (3-38)

தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்சோ மலேன ச

யதோல்பேனாவ்ருதோ கர்ப்பஸ் ததா தேனேதமாவ்ருதம்

பொருள்:–

எப்படித் தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால், இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. (3-38)

காளிதாசனில்

ராஜரிஷி வம்சஸ்ய ரவி ப்ரசூதேருபஸ்தித: பஸ்யத கீத்ருசோயம்

மத்த சதாசார சுசே: கலங்க: பயோதவாதாத் இவ தர்பணஸ்ய

பொருள்:-

மக்களின் ஆர்வங்களையும் உணர்ச்சியையும் மன்னன் பிரதிபலிக்கிறான். ஆதலின் அரசன் அழுக்கற்ற கண்ணாடியாகத் திகழ வேண்டும் (ரகுவம்சம் 14-37

ரவிப்ரஸூதே= சூர்யனிடமிருந்து உண்டானதும்

சதாசார சுசே:= நன்னடத்தையால பரிசுத்தமாக இருப்பதுமான

ராஹர்ஷிவம்சஸ்ய= ராஜ ரிஷியான இக்ஷ்வாகுவின் வம்சத்திற்கு

மத்த:= என்னிடமிருந்து

தர்பணஸ்ய = கண்ணாடிக்கு

பயோதவாதாத் இவ = மேகத்திலிருந்து வந்த காற்றினாலே (மாசு ஏற்படுவது) போல

கீத்ருச: = எப்படிப்பட்ட

அயம் கலங்க: = இம் மாசு

உபஸ்தித: = ஏற்பட்டது

பஸ்யத= பாருங்கள் 

எப்போதும் தூயதாய் விளங்கும் என் குலத்துக்கு என்னால் அவப்பெயர் வந்துவிட்டதே (மேகம், காற்றினால் வரும் அசுத்தம் எப்படி எளிதில் கண்ணாடியிலிருந்து நீங்குமோ அது போல இதுவும் எளிதில் போய்விடும் என்பது உட்பொருள்; அதாவது நிரந்தர களங்கம் இல்லை)

காளிதாசன் சாகுந்தலம் நாடகத்திலும் ரகு வம்சத்தில் பிற இடங்களிலும் கண்ணாடி உவமையைக் கூறுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தோறும் கண்ணாடி இருந்ததும், அதில் நம் குலப் பெண்கள் முகம் பார்த்து அலங்கரித்ததும் நம் மனக் கண் முன் வரும்.

–subham—

Tags–ஆதிசங்கரர்  ,காப்பி , கபிலர்,  தொல்காப்பியர் ,கண்ணாடி , ஆடி, உவமை , விவேக சூடாமணி, தட்சிணா மூர்த்தி  துதி 

Leave a comment

Leave a comment