நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை! – 2 (Post.14,619)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,619

Date uploaded in London – –11 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-6-25 மாலைமலர் இதழில் வெளி வந்த இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை! – 2

ச. நாகராஜன்

கன்யாகுமரி

பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.

சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.

ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.

மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.

சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.

இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.

தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள். குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.

தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.

கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள்.

இங்கிருந்து சூரியோதயத்தைக் கண்டு மகிழ்வது சிறப்பாகும்.

கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;

இங்கு தான் உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது.

இப்படி தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் குற்றாலம்தென்காசிதிருச்செந்தூர்திருநெல்வேலிசுசீந்திரம்கன்யாகுமரி ஆகிய புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்ல நல்லதொரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சியோடு தெய்வ அருளையும் பெறலாம்.

தொடர் முடிகிறது

ஶ்ரீ நகர், ஜெய்பூர், கோவா, கோவளம், மைசூர், விசாகப்பட்டினம், வழியாக ஒரிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், ஹிமாசல் ப்ரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கும் சென்று கைலைமலை நாதனை தரிசித்து, தேவி கன்யாகுமரியையும் தரிசித்ததோடு இந்தப் பயணத் தொடர் முடிவடைகிறது. ஊக்கமூட்டிய வாசகர்கள், மாலைமலர் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

***

Leave a comment

Leave a comment