கல்லான காடு! (Petrified Forest) அரிஜோனா அதிசயம்!! (Post.14,742)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,742

Date uploaded in London – 9 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

கல்லான காடு! (Petrified Forest) அரிஜோனா அதிசயம்!! 

ச. நாகராஜன்                   

 அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது அரிஜோனா. 

இதன் வடகிழக்குப் பகுதியில் உள்ளது பெரிய பாலைவனம் ஒன்று 

இங்குள்ள மலைப் பகுதிகள் பாறைக்கற்களால் ஆனவை. இதில் ஏராளமான பெரிய மரங்கள் விழுந்து கிடப்பதைப் பார்க்கலாம். 

ஆனால் யாரேனும் ஒருவர் மரத்தில் தன் பெயரைப் பொறிக்க விரும்பி அதில் எழுதத் தொடங்கினால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ஏனெனில் மரம் மரமாய் இருக்காது. கல்லாக ஆகி விட்டிருப்பதைப் பார்த்து அசந்து போவார்கள்!

 அது மட்டுமல்ல, அந்த கற்களிலிருந்து ஒளி வீசும் ஆரஞ்சு, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு வர்ணங்களைக் கண்டு பிரமித்துப் போவார்கள்!

 லெப்டினண்ட் லோரென்ஸோ என்ற ராணுவ அதிகாரி தான் முதன் முதலாக இதை 1851ம் ஆண்டு கண்டார்; அதிசயப்பட்டார். படிமமாக ஆகி விட்ட இந்த காட்டை வெளி உலகிற்கு அவரே அறிவித்தார்.

 க்ரீக் ஐலேண்டில் சிக்ரி என்ற இடத்திலும் கூட கல்லான காடு உள்ளது.

 இரும்பாகி ஆகி விட்ட இந்த மரங்களின் கதை இருபது கோடி வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான கதை.  அந்தக் காலத்தில் இந்தப் பாலைவனம் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. இங்கு டைனோஸர்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. தொண்ணூறு சதவிகித மரங்கள் இங்கு நூறு அடிக்கும் மேலாக வளர்ந்தவையாகும். அதன் குறுக்களவோ ஆறரை அடி.  சில மரங்களோ இதை விட இரு  மடங்கு உயரம் – அதாவது 200 அடி – கொண்டவை.

 இந்த மரங்களுக்கு அறிவியல் ரீதியாக ARAUCARIOXYLON ARIZONICUM  என்று பெயரிடப்பட்டது.

 இந்த மரங்களின் கதையே தனிக் கதை! காலப் போக்கில் இவை பட்டுப் போக இதன் அடி மரங்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே தடுக்கப்பட்ட இவைகள் சகதியாலும் மண்ணாலும் அருகில் வெடித்த எரிமலையிலிருந்து வந்த சாம்பலினாலும் மூடப்பட்டன.

ஆக்ஸிஜன் இல்லாததால் உருமாறி இவை கல்லாக ஆகி விட்டன!

 மரங்கள் கல்லாக ஆகி விடவே இங்குள்ள தாதுக்களும் சிறிய சிறிய கற்களாக ஆகி ஜொலிக்க ஆரம்பித்தன.

ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன்னர் பூமி இந்தப் பகுதியில் வெடிக்கவே, மெதுவாக மலைகள் எழும்ப ஆரம்பித்தன.

 டைனோஸர் இங்கிருந்ததற்கான அடையாளங்களாக அவற்றின் படிமங்கள் இங்கு காணக் கிடைக்கின்றன! இங்குள்ள அயிடோஸர் (Aetosaur) என்ற மிருகத்தின் பற்களைப் பார்த்தால் இவை சைவ உணவையே சாப்பிட்டு வந்திருப்பது தெரிய வருகிறது. அசைவ உணவு இவற்றிற்கு ஆகாது!

 இந்த பாலைவனப் பகுதியில் ஒரு வருடத்திற்கு ஒன்பது அங்குல மழையே பெய்கிறது. இவையும் பலத்த இடி மின்னலுடன் வருபவையேயாகும்.

 கல்லான மரத்தின் அடிப்பகுதியைப் பார்ப்பதே பிரமிக்க வைக்கும் காட்சியைத் தருகிறது.

 இந்த கல் காடு 150 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.

 விசித்திரமான வரலாற்றைக் கொண்டுள்ள இந்த கல் காடு உலகின் ஒரு மிகப் பெரிய அதிசயமே தான்!

**

Leave a comment

Leave a comment