
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,951
Date uploaded in London – —7 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 5-7-25 அன்று வெளியான கட்டுரை!
ஒருவர் மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா?
ச. நாகராஜன்

காலம் காலமாக விஞ்ஞானிகளும் சாமானியரும் கேட்கும் ஒரு கேள்வி : ஒருவர் தனது மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா?
பதில் : முடியாது! முடியவே முடியாது!
மரணம் சம்பவிக்கும் வரை மூளை இயங்கிக் கொண்டே இருக்கும்; அதன் திறனைக் கூட்டிக் கொள்ளும் சக்தி அதற்கு உண்டு.
மாறாக மூளையை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று யாரேனும் சொன்னால் அது தவறானது; உள்நோக்கம் கொண்டது என்று உணர்ந்து அவரிடமிருந்து அகன்று விடலாம்!
சமீப காலம் வரை மூளையில் புதிய செல்கள் உருவாக முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் புதிய செல்களை மூளை உருவாக்குகிறது என்பது இப்போதைய கண்டுபிடிப்பாகும்.
மூளை என்பது ஒரு முடிவே இல்லாத நூலகம் போல! அதில் வரிசையாக உள்ள பீரோக்களில் எண்ணற்ற நினவுகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு முடிவு அல்லது நிரம்பி விட்டது என்ற ஒரு நிலை உண்டா? இல்லை என்பதே பதில்.
ஒருவர் தன் மூளை ஆற்றலை நூறு சதவிகிதம் பயன்படுத்த முடியுமா? தாராளமாக! இதற்கு மூளை பயிற்சிகளை ஒருவர் மேற்கொண்டால் 90 சதவிகிதம் என்ற நிலையை அடையலாம்.
மூளையின் பல பகுதிக:ள் எப்போதுமே ,மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இதை நியூரோ இமேஜிங் தொழில்நுட்பம் (NEUROIMAGING TECHNOLOTY) நிரூபிக்கிறது.
பொஸிட் ரான் எமிஷன் டோமோகிராபி மற்றும் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (POSITRON EMISSION TOMOGRAPHY – PET AND MAGNETIC RESONANCE IMAGING – MRI) ஆகியவை உயிருள்ள ஒருவரின் மூளை செயல்பாடுகளைத் திறம்படக் கண்காணிக்கிறது.
எடுத்துக்காட்டாக டேனியல் டாமெட் பற்றிக் கூறலாம். 1979 ஜனவரி 31ம் தேதி பிறந்த டாமெட் 2004ம் ஆண்டு ‘பை’ யின் இலக்கங்களை வரிசையாகக் கூற ஆரம்பித்தார். தன் நினைவிலிருந்து வரிசையாக 22514 இலக்கங்களை ஐந்து மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் கூறிக் கொண்டே இருந்தார். அதுவரை இருந்த உலக ரிகார்டை முறியடித்தார். இலக்கங்கள் மூளையில் வந்து கொண்டே இருக்கின்றன என்றார் அவர். Extraordinary People என்ற ஒரு டாகுமெண்டரி படம் அவரைப் பற்றி நன்கு விவரிக்கிறது.
இது போல நூற்றுக் கணக்கானோரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நினைவாற்றலைக் கூட்ட ஏராளமான வழிகள் உள்ளன.
சில வழிகள் இதோ:
அனைத்துப் புலன்களையும் பயன்படுத்தும் செயல்களை மேற்கொள்ளலாம். ஒரு உணவு விடுதிக்குச் சென்று புதிய உணவு வகையைக் கேட்டு அதை எடுத்துச் சாப்பிடால் அதை முகர்தல், தொடுதல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல் ஆகிய அனைத்துப் புலன்களுக்கும் வேலை உண்டு.
புதிய ஒரு கலையைக் கற்கலாம். ஓவியம், இசை இப்படி ஆய கலைகள் அறுபத்திநான்கு உண்டு.
ஒரு கலையை இன்னொருவருக்குக் கற்பிக்கலாம்.
இசையைக் கேட்கலாம்; பாடலாம்.
நடனம் கற்கலாம்; ஆடலாம்!
ஒவ்வொரு நாளும் சில புதிய வார்த்தைகளைக் கற்கலாம்.
மூளைக்கு வேலை தரும் புதிர்கள், குறுக்கெழுத்துப் போட்டி உள்ளிட்டவற்றில் சிறிது நேரம் ஈடுபடலாம்.
தியானம், மூளை ஆற்றலைக் கூட்டும் ஒரு நல்ல பயிற்சி.
இப்படி ஏராளமான வழிகள் உள்ளன; நமக்கு உகந்த, பிடித்த ஒரு வழியை மேற்கொண்டால் மூளை திறம்படச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்; அதை முழுவதுமாக நிரப்ப முடியவே முடியாது!
***