
Post No. 15,007
Date uploaded in London – —21 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!
ச.நாகராஜன்
கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர். நூற்றாண்டுகளுகு முன்பே ஆதிசைவர்களின் பெருமையை உரைக்கும் நூலாக இருக்கும் ஆதிசைவப் பிரபாவம் என்ற நூலானது காலவெள்ளத்தில் அழிந்துவிடாமல் உயிர் பெற வேண்டுமென்ற நல் நோக்கத்தில் இந்த நூலை அவர் 2017 டிசம்பரில் பதிப்பிட்டுள்ளார்.
1880ஆம் ஆண்டு இந்த நூல் முதன் முதலாகப் பதிக்கப்பட்டது.
இந்த நூலை எழுதியவர் ஸ்ரீ சோமசுந்தர நாயகர் ஆவார். இவரது காலம் 1846 முதல் 1901 முடிய ஆகும். இவர் சுமார் 126 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தனது உத்யோகத்தை விட்டு விட்டு இவர் சைவப் பணி ஆற்ற களத்தில் இறங்கினார். இவரது சிறப்பான சைவ சமயப் பணிகளைக் கண்டு வியந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், இவருக்கு “வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற பட்டத்தைச் சூட்டினார்.
பாஸ்கர சேதுபதி மன்னர் விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு தாயகம் திரும்பும்போது அவரைப் பெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர். அவர், விவேகானந்தரை தமது அரசவையில் சோமசுந்தர நாயகரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது நாயகர் விவேகானந்தரிடம் வேதாந்தம் போன்று ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவசித்தாந்த தத்துவத்தை எடுத்துக் கூறினார். விவேகானந்தர் அது கேட்டு வியப்புற்றார் என்பது தெரிய வருகிறது.
பரசமயங்களின் தத்துவங்களை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து அவற்றைத் தவிடு பொடியாக்கும் சூரர் என்பதால் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் “பரசமயக் கோளரி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
நூல் முழுவதும் ஆதி சைவர்களின் சிறப்பைக் காணலாம். அத்துடன் மட்டுமல்லாமல் “சைவ வேடம் பூண்டு திரியும் வஞ்சகப் பேய்களை” இவர் சாடுவதையும் காணலாம்.
ஆசாரியர் என்பவர் யார்? நாலு வேதம் ஆறு அங்கங்களை அறிந்தவரகவும், ஞான பாதங்களை நன்கு போதிப்பவராகவும், கிரியா பாதத்தில் சமர்த்தராகவும், யோக பாதத்தில் அப்பியாசம் உள்ளவராகவும், சரியா பாதப் பிரகாரம் நடத்தை உள்ளவராயும், சிவபூஜை, சிவாகினி இவைகளைத் தப்பாமல் நடத்துகின்றவராயும் உள்ளவரே ஆசாரியர் ஆவார்.
இந்த லட்சணங்களை உடையவர்கள் ஆதி சைவரே.
சைவர் ஏழு பிரிவினராவர்.
1. அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹா சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்ய சைவர்.
இதில் அநாதி சைவர் சிவபெருமான் ஒருவரே
சகலபிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவனே ஆசாரியன் ஆவான்.
ஆசாரிய நிதிகளாகிய சிவ வேதியரே சரவ அநுக்ரஹத்வாதி பரம தர்மங்களை உடையவராய் விளங்குவர்.
இப்படி இந்த நூல் ஆதி சைவரின் பெருமையை தகுந்த பிரமாணங்களுடன் சித்தரிக்கிறது. பர சமயங்களை நிராகரிக்கிறது.
சோமசுந்தர நாயகர் இயற்றியுள்ள 47 நூல்களின் பட்டியலை நூலின் இறுதியில் காணலாம்.
48 பக்கங்கள் உள்ள இந்த நூல் அழகிய தாளில் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ சோமசுந்தர நாயகர் வரலாற்றைச் சுருக்கமாக தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தந்துள்ளார்.
சைவத்தில் பற்றுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. ஆதிசைவர்கள் நிச்சயம் இதைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல் ஏன் சைவம் அல்லாத பர சமயங்கள் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு அடிப்படையான வாதங்களையும் இந்த நூல் தருகிறது.
பதிப்பாசிரியர் தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் நமது பாராட்டுக்குரியவர்.
40 ரூபாய் விலையுள்ள 48 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அன்பர்கள், ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம், குளத்து மேட்டுத் தெரு, கள்ளகுறிச்சி, 606 202 (போன் 97518 47933) என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
–SUBHAM–