மதுரை மீனாட்சி கோவிலில் நவரத்தினக் குவியல்! (Post.15,143)-1


Written by London Swaminathan

Post No. 15,143

Date uploaded in London –  2 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Part 1

மதுரை கோவிலில் உள்ள தங்க நகைகளும், நவரத்தின கற்களும் 

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருக்கின்றன .அவைகளை மன்னர்களும் பிரபுக்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, தானமாக அல்லது காணிக்கையாக வழங்கியுள்ளனர் .அவைகளில் ஆங்கிலேயர்  கொடுத்த நகைகளும் அடங்கும்

பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும் பல  குறுநில மன்னர்களும் ,விஜயநகர  மன்னர்களும் அளவற்ற ஆபரணங்களை அன்னை மீனாட்சிக்கும் , அப்பன் சுந்தரேஸ்வரருக்கும் அணிவித்து மகிழ்ந்தார்கள் ;அவைகள் இன்று கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன

பாண்டியநாடு முத்துக்களுக்கு பெயர் போனது பூழியர் கோன்  தென்னாடு முத்துடைத்து – என்று புலவர்கள் பாண்டிய நாட்டை புகழ்ந்து உள்ளார்கள். இந்த முத்துக்களாலான அணிகலன்களை  மீனாட்சி அம்மைக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். என்ன ஆபரணங்கள் கோவில் உள்ளன என்ற பட்டியலை எழுதியும் வைத்துள்ளார்கள் மு. தங்கவேல் தேசிகர் , கோவில் கும்பாபிஷேக மலரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்

இப்போது இவைகளை விழாக் காலத்தில் காட்சிக்கு வைக்கின்றனர்.  முத்துச் சொருக்கு , முத்து உச்சிக்கொண்டை, முத்தங்கி ஆகியன அம்மனுக்கு உள்ளன. அப்பனுக்கும் தனித்தனி முத்து அங்கிகள் ,முத்து மாலைகள், முத்து கடிவாளம் இருக்கின்றன. நவராத்திரி காலத்தில்,அன்னை மீனாட்சிக்கு முத்துச்    சொருக்கு ,முத்து உச்சிக்கொண்டை ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். இதில் முத்துச் சொருக்கின்  எடை 162 தோலா ; இதில்  4921 முத்துக்களும் ௧௨௦ பலச்ச வைரங்களும்  844 சிவப்பு கற்களும்  29  மரகதங்களும் பதிக்கப் பெற்றுள்ளன

ஒரு தோலா – 11. 66 க்ராம்

1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams

இதேபோல ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தின்போது முத்து மேற்கட்டி, திருமண மண்டபத்தின் மேற்கட்டியாக வைக்கப்படுகிறது இது வெல்வெட்டினாலும், பட்டினாலும், சரிகையினாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் . இதன் நான்கு மூலைகளிலும் இருதலை  யாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரியகாந்தி பூ உருவங்களும் முத்துக்களால் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன .இதில் உள்ள முத்துக்கள் 71 ,755   சிறிய முத்துக்கள் ஆகும்  அடுத்ததாக பட்டாபிஷேக கிரீடத்தைப் பார்ப்போம்  இதில் பலா கொட்டை அளவுக்கு உள்ள பெரிய முத்துகள் இருக்கின்றன ; சோமாஸ்கந்தர்  வடிவில் இருக்கும் முருகனுக்கு  சிறிய முத்தங்கியும் இருக்கிறது . மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் கிளியும்  முத்துக்களால் ஆனது ;ஆவணி மூலத்திருவிழாவில்  நான்காம் நாள் புறப்பாட்டின்போது  மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அடி முதல் முடி வரை முன்னும் பின்னும்  முத்தங்கி மற்றும் முத்துமாலைகளை சாத்தி அலங்கரிக்கிறார்கள்

சித்திரைத் திருவிழாவின்  எட்டாவது நாளிலும் ஆவணி மூலத்திருவிழாவின் ஏழாவது நாளிலும்

முறையே  அம்மனுக்கும் சுவாமிக்கும் நடக்கும்

பட்டாபிஷேகத்தில் சாத்துவதற்காக  பட்டாபிஷேக கிரீடம் இருக்கிறது . இது ஹம்பி அரசரான அப்பாஜிராயர் கொடுத்தது; இதன் எடை  134 தோலா ;920 மாணிக்கங்களும் , 78 பலச்ச  வைரமும் ,11 மரகதமும் ஏழு நீலமும் ,எட்டு  கோமேதகமும் இந்த கிரீடத்தில்  பதித்து வைத்து இருக்கின்றனர் . ரத்தினங்களை பலப்படுத்த இடையிடையே தங்கத்தை சேர்த்துள்ளனர் . இதை குந்தன  கட்டிட வேலைப் பாடு என்று சொல்வார்கள். தமிழகத்திலும் ராஜஸ்தானிலும்  இது நடைமுறையில் உள்ளது.

பட்டாபிஷேகவும்கீரிடம் சாத்திய பின்னர்  திருமலை நாயக்கர் கொடுத்த ரத்தின செங்கோலை   சுவாமி கையில் கொடுக்கிறார்கள் ; அச்  செங்கோலின் எடை  67தோலா .இதில் 761 சிவப்புக் கற் களும் , 74 வைடுரியங் களும் ௨௧ பலச்ச வைரங்களும்  2 69 மரகத ங்களும் , 44 முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன .திருக்கல்யாணத்தன்று எழுந்தருளும்  பெருமானுக்கு வாசு மாலை  கிரீடம் சாத்துவார்கள் . இதில் முன்பக்கமும் பின்பக்கமும்  மூன்று வரிசைகளில் மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன இதன் எடை 136  தோலா . இதில் 247 கெம்பு, 439 முத்து 39 மரகதம் 300 பவளம் 27 பலச்ச வைரம்  ஆறு நீலம் இரண்டு கோமோதகம்  241 பவளம் பதித்துக் கட்டியிருக்கிறார்கள் . இது பாண்டியர் காலத்து நகை.. 

To be continued…………………………

Tags- Part 1, மதுரை மீனாட்சி கோவில், நவரத்தினக் குவியல் ,தங்க நகைகள், நவரத்தின கற்கள்

Leave a comment

Leave a comment