
Santanam Srinivasan doing Ganapati Homa

Post No. 15,258
Date uploaded in London – – 10 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
10-12-2025 அஞ்சலி
அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி!
ச. நாகராஜன்
திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார்.
10-12-2023 அன்று மறைந்தார்.
அவரது நினைவு நாளையொட்டி அவரைப் பற்றி இங்கு நினைவுகூரலாம்.
எளிமை, இனிமை, ஆன்மீக சேவை
திரு சீனிவாசன் அவர்களுடன் பழகியோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூறுவது அவரது எளிமை, இனிமை, ஆன்மீக சேவை என்பதைத் தான்.
படாடோபமான, ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.
விளம்பரத்தை விரும்பாவதர்.
அவரைச் சந்தித்த நூற்றுக்கணக்கானோரும் ஒருவர் இன்னொருவரிடம் கூறிய வாய்மொழி வார்த்தையாலேயே அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.
டெக்ஸ்டைல் பொறியாளராக மதுரை கோட்ஸில் பல வருட காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் அவர்.
அதே சமயம் தினமும் கணபதி ஹோமத்தை காலையில் செய்து குருநாதர் ஆய்க்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்களின் அருளையும், மஹாகணபதி அருளையும் பரிபூரணமாகப் பெற்றவர் அவர்.
இந்த தெய்வீக ஆற்றலால் ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரிந்தது; வருங்காலமும் புரிந்தது.
ஆகவே தினமும் மதுரையிலும் சரி, பின்னால் அவர் சென்னையி குடியேறி வாழ்ந்தபோதும் சரி பலரும் அவர் வீட்டில் கூட்டமாகக் கூடி தங்கள் பிரச்சினைகளைக் கூறி தீர்வைக் கண்டு மகிழ்ந்தனர்.
வருவோருக்கு அவரது இல்லத்தினரின் உபசரிப்பும் காப்பியும் கிடைக்குமே தவிர அவர்களிடம் ஒரு பைசா கூட அவர் வாங்கியதில்லை.
ஆகவே இன்னும் அதிகமதிகக் கூட்டம் கூடலாயிற்று.
பன்முகப் பரிமாணம் கொண்ட அவர் திரு என்.சி. ஶ்ரீதரனுடன் இணைந்து பல்லாண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகள், தனியார் சங்கங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பின் பேரில் சென்று உணர்வூக்கம் என்னும் மோடிவேஷன் உரைகளை ஆற்றினார்.
இதில் பயிற்சி பெற்றோரின் எண்ணிக்கை சுலபமாக ஒரு லட்சத்தைத் தாண்டும் எனலாம்.
ஜோதிடம், வாஸ்து ஆகிய துறைகளில் நிபுணர் என்பதால் அவரைத் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்ல வருவோர் ஏராளம்.
அரசியல்வாதிகள், தலைவர்கள், திரைபப்ட நடிகர்கள், நடிகையர், கலைஞர்கள், பல்துறை நிபுணர்கள், சாமானியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை நாடிப் பயன் பெற்றனர்.
துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அவரைப் பார்க்க ஏராளமானோர் குழுமியது குறிப்பிடத் தகுந்தது.
அவரது ஹாஸ்ய உணர்ச்சி அனைவரும் போற்றும் ஒன்று.
ஜோக் அடிப்பதில் வல்லவர். தினமும் சுமார் ஐம்பது ஆண்டுகளில் அவர் சேகரித்த ஜோக் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து எடுத்த கட்டிங்ஸ் பல பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டன. இதை கட்டிங் அண்ட் ஒட்டிங் (CUTTING AND PASTING) என்று கேலியாகச் சொல்வது வழக்கம்.
லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் பல முறை அவர் பங்கேற்றுள்ளார். அவரது புத்தகங்கள் http://www.Pustaka.co.in பதிப்பகம் மூலம் பிரசுரமாகியுள்ளன.

Srinivasan with his wife Rajalakshmi with Daffodils.
அனைவரது நட்சத்திரங்களையும் கேட்டு அவர்கள் நலனுக்காக விநாயக சதுர்த்தி அன்று அவர் பெரும் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.
அவரைப் பற்றி நிறையக் கூறிக் கொண்டே போகலாம்.
இன்று அவரது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்கி அஞ்சலி செய்வோமாக!
**