Post No. 15,303
Date uploaded in London – 24 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ் மொழியை முருகப்பெருமானுடனும் அகத்திய முனிவருடனும் தொடர்புபடுத்தும் இடங்கள் திருப்புகழில் ஏராளம் உள்ளன !
இவ்வாறு மொழியைக் கடவுளிடம் இணைக்கும் அற்புதத்தை இந்து மதத்தில் மட்டுமே காண முடியும்.
இந்தத் தொடர்பு ரிக்வேத காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது . பெருக்கெடுத்து ஓடும் சரஸ்வதி நதிக்கும் வாக் தேவிக்கும் ஒரே பெயர் ; இது தவிர வாக் தேவிக்கே துதிகளும் உள்ளன ஆக வேதகாலம் முதல் பாரதி காலம் வரை சரஸ்வதி- மொழி- வாணி- அகத்தியன்-தமிழ் இணைப்பினைக் காண்கிறோம்.
தமிழ்த்தாய்
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.— பாரதியார் பாடல்
****
சம்ஸ்க்ருதத்தில் அ– முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் இருப்பதால் அ to க்ஷ= அக்ஷரம் என்று பெயர். (ALPHA+BETA= ALPHABET)
இவைகளை தேவியின் சொரூபம் என்றும் தேவியானவள் எழுத்துக்களையே மாலையாக அணிந்து இருப்பதாகவும் திருமூலர் முதல் பாரதி வரை தமிழில் பாடினர். சம்ஸ்க்ருதத்தில் ஆதிசங்கரர் முதல் லலிதா சஹஸ்ரநாம ஹயக்ரீவர் வரை பலரும் பாடியுள்ளார் கள்.
****
1
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை …… எப்பொருளுமாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு …… மற்றதொருகாலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ …… ரித்தபெருமானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது …… ணர்த்தியருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத …… தத்ததகுதீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு …… டுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக …… ளத்திலொருகோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச …… ளித்தபெருமாளே.
BY SRI GOPALASUNDARAM IN KAUMARAM.COM
……… சொல் விளக்கம் ………
அகரமுத லெனவுரைசெய் … அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற
ஐம்பந்தொர் அக்ஷரமும் … (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று
எழுத்துக்களும்,
அகிலகலைகளும் … உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும்,
வெகுவிதங்கொண்ட தத்துவமும் … பலதரப்பட்ட (96)
தத்துவங்களும்*,
அபரிமித சுருதியும் … அளவிட முடியாத வேதங்களும்,
அடங்குந்தனிப்பொருளை … தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள
ஒப்பற்ற பரம்பொருளை,
……………………………………………………. என்ற வரிகளால் அறியலாம்.
***
2
இதோ இன்னும் ஒரு திருப்புகழ் ; இதுவும் அருணகிரிநாதர் பாடியது
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் …… வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு …… வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது …… சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது …… பெறுவேனோ
……………………………………
……… சொல் விளக்கம் ………
ஐந்து பூதமும் … மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,
ஆறு சமயமு … சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும்,
மந்த்ர வேத புராண கலைகளும் … மந்திரங்களும், வேதங்களும்,
புராணங்களும்*, கலைகளும்,
ஐம்பதோர்விதமான லிபிகளும் … ஐம்பத்தொரு விதமான
எழுத்துக்களும்,
வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் … அனேக உருவங்களுடன்
கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும்,
உயர் புண்டரீகனு மேக நிறவனும் … உயர்ந்த பிரமனும், கார்மேக
நிறத்துத் திருமாலும்,
அந்தி போலுருவானு … அந்தி வானம் போன்ற செம்மேனியை
உடைய ருத்திரனும்,
நிலவொடு வெயில்காலும் … நிலவோடு வெயிலை வீசுகின்ற
சந்த்ர சூரியர் தாமும் … சந்திரனும், சூரியனும்,
அசபையும் … அம்ச மந்திரமும்**
விந்து நாதமும் … சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும்,
ஏக வடிவம் … இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும்.
…………………………………………..
** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம்,அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.
*****
3
அக்ஷர தேவி
மூன்றாவது திருப்புகழ் பாடலைக் காண்போம் –
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை …… மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம …… தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி …… தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள் …… புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு …… மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண …… கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு …… மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம …
அவ்வாறாக பதினான்கு உலகங்களும்* தவறில்லாமல் படைத்து,
தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும்,
வியோம கோளகை மிசை வாழும் … அண்ட கோளத்திலும்
வாழ்கின்றவரும்,
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி … சரஸ்வதி
தேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி,
(பிறப்புக்கள்) மாறி மாறி,
அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு …
எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து,……………………………………………………..
***
4
இதோ நான்காவது திருப்புகழ் !
மாத்ருகா புஷ்ப மாலை
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி …… யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி …… யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி …… லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி …… தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் …… மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து …… வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
ஆசைகூர் பத்தனேன் … உன் மீது ஆசை மிகுந்த பக்தியை
உடைய நான்
மனோ பத்மமானபூ வைத்து … மனம் எனப்படும் தாமரை மலரை
வைத்து,
நடுவேயன்பானநூலிட்டு … இடையில் அன்பு என்னும் நாரைக்
கொண்டு,
நாவிலே சித்ரமாகவே கட்டி … நாக்கு என்னும் இடத்திலே அழகான
ஒரு மாலையைத் தொடுத்து,
ஒருஞான வாசம்வீசி … அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்
என்னும் நறுமணத்தைத் தடவி,
ப்ரகாசியா நிற்ப … அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும்,
மாசிலோர் புத்தி யளிபாட … அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு
என்ற வண்டு மொய்த்துப் பாடவும்,
மாத்ருகா புஷ்ப மாலை … மாத்ருகா மந்திர* மாலையான இந்தப்
பூமாலையை
கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ … அழகிய பவளம்
போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
………………………………………..
* வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை.
சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்தமந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.
–subham—
TAGS- முருகன், மாத்ருகா புஷ்ப மாலை, அக்ஷர தேவி, ‘அகர முதல், 51 அக்ஷரம்’, அருணகிரி நாதர், சுவையான செய்திகள்