Post No. 15,424
Date uploaded in London – 14 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
யாருக்கு எது விஷம்?
ச.நாகராஜன்
அட, இந்த புலன் இன்ப நினைப்பில் தான் மனம் இருக்கிறது!
பிக்ஷாஷனம் ததபி நீரஸமேகவாரம்
ஷய்யா ச பூ: பரிஜனோ நிஜதேஹமாத்ரம் |
வஸ்த்ரம் சுஜீர்ணசதகண்டமயி ச கந்தா
ஹா ஹா ததாபி விஷயான்ன ஜஹாதி சேத: ||
ஒரு நாளைக்கு ஒரு தடவை பிச்சை கேட்டு உணவு பெறப்படுகிறது.
தரை தான் படுக்கை.
இந்த உடலைத் தவிர வேறு ஒரு வேலைக்காரரும் இல்லை.
உடுத்தியிருக்கும் உடுப்போ கந்தல் தான்.
மூட்டையோ கிழிந்த ஒன்று.
அடடா, ஹா, ஹா!
என்றாலும்கூட மனம் இன்னும் புலன் இன்பங்களிலேயே (விஷயவாசனையிலேயே) லயித்திருக்கிறதே!
யாருக்கு எது விஷம்?
அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஷனம் விஷம் |
மூர்கஸ்ய ச விஷம் கோஷ்டீ வ்ருத்தஸ்ய தருணி விஷம் ||
சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் சாஸ்திரம் விஷம் தான்!
உட்கொண்ட உணவு ஜீரணமாகவில்லை என்றால் அது விஷம் தான்!
மூர்க்கனுக்கோ கூடியிருக்கும் சபை விஷம்!
வயதான கிழவனுக்கோ இளவயது மங்கை விஷம்!
கவிதை படிக்காதவன் சாஸ்திரம் படித்து என்ன பிரயோஜனம்?
அசிக்ஷிதானாம் காவ்யேஷு சாஸ்த்ராப்யாஸோ நிரர்தக: |
கிமஸ்த்யனுபநீதஸ்ய வாஜபேயாதிபிமர்கை: ||
கவிதை படிக்காத ஒருவன் சாஸ்திரம் படித்து என்ன பிரயோஜம்?
சாஸ்திர ஞானத்திற்கான உபதேசம் பெறாதவனுக்கு வாஜபேயம் போன்ற யக்ஞங்களால் பயன் தான் என்ன?
சொர்க்கமே வேண்டாமே!
யதி ராமா யதி ச ராமா யதி தனயோ வினயதீகுணோபேத: |
யதி தனயே தனயோத்பத்தி: சுரவரநகரே கிமாதிக்யம் ||
ஒருவனுக்கு மனைவி வளத்தைத் தரும் தேவதையாக இருந்து விட்டால், மகன் வினயமுடன் சொன்ன பேச்சைக் கேட்கும் குணவானாக இருந்து விட்டால், ஒரு பேரனும் பிறந்து விட்டால் அவன் எதற்காக சொர்க்கத்தை விரும்புவான்?
இந்த ஐந்தும் இருந்தால் வாழ்க்கையில் துன்பமே கிடையாது!
வஷ்யா சுதா வித்தகரீ ச வித்யா நிரோகதா சஜ்ஜனசங்கதிஷ்ச |
இஷ்டா ச பார்யா வஷவர்த்தினீ ச துக்கஸ்ய மூலோத்தரணானி பஞ்ச!!
இந்த ஐந்தும் இருந்தால் வாழ்க்கையில் துன்பமே கிடையாது!
கீழ்ப்படியும் மகன்கள்
பணக்காரனாக வழி சொல்லும் அறிவு
வியாதியே இல்லாத உடல்
சஜ்ஜனங்களின் (மேலோர்களின்) தொடர்பு
அன்பான கீழ்ப்படிதலுள்ள மனைவி
இந்த ஐந்தும் அமைந்தவனின் வாழ்க்கை எப்போதுமே இன்பமாகத்தானே இருக்கும்!
**