Post No. 15,474
Date uploaded in Sydney, Australia – 8 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் துங்கபத்ரா நதிக்கரை மீதுள்ள மந்த்ராலயத்துக்குச் சென்று ராகவேந்திர சுவாமிகளின் சமாதியைத் தரிசித்த்தேன் . அப்போது, அங்கு தையல் இலையில் உணவு சாப்பிட்டதும் நினைவில் இருக்கிறது. நுழைவாயிலில் பெரிய எழுத்துக்களில் பொறித்த மந்திரத்தையும் மனப்பாடம் செய்து இன்றுவரை சொல்லி வருகிறேன் .
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
— என்பது நான் தினமும் சொல்லும் மந்திரம் .
அப்போதுமுதல் ராகவேந்திரர் பிறந்த ஊரான புவனகிரிக்குச் சென்று கோவிலில் அவரது உருவத்தைத் தரிசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் . ஒவ்வொரு முறை சென்னையிலிருந்து எங்கள் குலதெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும்போதும், சிதம்பரம் வரும்போது புவனகிரிக்குச் செல்லும் வழி என்ற ‘போர்டி’னைக் காண்பேன். ஆயினும் இறங்க நேரம் இல்லாததால் அதைக் கடந்து போய் விடுவேன் . சிதம்பரத்திலிருந்து புவனகிரி, சுமார் பத்து கிலோமீட்டர்தான். சிதம்பரத்துக்கு நடராஜரைத் தரிசிக்க வந்தபோதும்கூட வாய்ப்பினை நழுவவிட்டேன் . இந்த முறை புவனகிரி யாத்திரையை மனத்தில் வைத்துக்கொண்டு வாடகைக் காரில் புவனகிரிக்கு சுமார் ஐந்தரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்தேன் . நல்ல தரிசனம் கிடைத்தது .
ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் மிகவும் சிறிய கோவில். ஒரு அழகான மண்டபம் என்றும் கூடச் சொல்லிவிடலாம். நான் சென்ற மாலை நேரத்தில் கூட்டம் இல்லை. அங்குள்ள அர்ச்சகரிடம் தீர்த்தமும் மந்திர அட்சதையும் வாங்கிக்கொண்டு அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டேன். கோவிலுக்கு வெளியே சென்று புகைப்படங்களை எடுத்தேன். மறுநாள் சிதம்பரத்திலிருந்து கோவிந்தராஜப்பெருமாள் அங்கே எழுந்தருளப் போகிறார் என்ற செய்தியைச் சொல்லி என்னையும் வருமாறு கேட்டுக்கொண்டார் பட்டர்.
சிறிய கோவிலாக இருந்தாலும் வண்ணமிகு கோவில். அவரது சந்நிதியைச் சுற்றி வருவதற்குப் பிரகாரமும் உள்ளது உண்டியலில் காணிக்கையை செலுத்திவிட்டு கும்பகோணம் நோக்கி விரைந்தேன்
***
ஸ்ரீ ராகவேந்திரரின் (1595–1671) அற்புதம் நிறைந்த வாழ்க்கை
தமிழ்நாட்டின் ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து கர்நாடகம் ஆந்திரம் வழியாகப் பயணம் செய்து இறுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆந்திரத்தில் அவர் சமாதி அடைந்தது ஏன் என்று எண்ணி எண்ணி நாம் வியப்போம். மஹான்கள் பிறக்கும் இடமும் சமாதி அடையும் இடமும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத விஷயம் . பல மஹான்களின், சாது சந்யாசிகளின் வாழ்க்கையில் இதைக் காணலாம் .
பொதுவாக மத்வ சப்ரதாயத்தினர் மட்டும் வணங்கிவந்த ஸ்ரீ ராகவேந்திரர், நடிகர் ரஜினி காந்த் மற்றும் திரைப்படம் மூலம் எல்லோருடைய வழிபாட்டுக்கும் உரியவர் ஆனார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அவதரித்தார் . மத்வரின் த்வைத சமய போதனைகளைப் பின்பற்றும் சுதீந்திர தீர்த்தர் என்பவரைக் குருவாக ஏற்றார். இவர் ஜீவ சமாதி அடைந்தபோதும் இன்றும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பதால் இவருக்குப் பின்னால் எப்போதும் காமதேனு உருவம் இருக்கும் . இவரைப் பிரஹலாதரின் அவதாரமாகவே பக்தர்கள் வழிபடுகின்றனர் .
பூர்வஜன்மத்தில் இவரது பெயர் வியாஸராயர்; இந்த ஜென்மத்தில் பெற்றோர்கள் சூட்டிய பெயர் வேங்கடநாதன் . மதுரை, கும்பகோணம் முதலிய இடங்களில் சாஸ்திரங்களைக் கற்ற பின்னர், அதை ஏனையோருக்கும் போதித்தார். சரஸ்வதி என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் லெட்சுமிநாராயணன் . ராகவேந்திரரின் தாய் தந்தையின் பெயர் கோபிகாம்பாள், திம்மண்ணா பட்டர் .
மூன்று அற்புதங்கள்
கும்பகோணத்தில் இவரது மஹிமை தெரியாதோர் இவரை சந்தனம் அரைக்கும் பணியில் ஈடுபடுத்தினர். அந்த சந்தனத்தை உடலில் பூசிக்கொண்டிருந்தோருக்கு குளுமைக்குப் பதிலாக மிளகாயைப் பூசிக்கொண்டது போல எரிச்சல் ஏற்பட்டது . இதற்கு காரணம் அவர் அக்னி சூக்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சந்தனம் அரைத்ததே . பின்னர் அவரை மரியாதையுடன் நடத்தி மன்னிப்புக் கேட்கவே, அவர் வருண மந்திரத்தை ஜபித்து எரிச்ச லை அகற்றினார் இப்படி நிறைய அற்புதங்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை .
ஒரு முறை இவர் கானகம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது , அவருடைய சீடர்களில் ஒருவனை பாம்பு கடிக்கவே அந்த இடத்திலேயே அவன் மாண்டான். உடனே ராகவேந்திரர் கருட மந்திரத்தை ஜபித்து விஷத்தை அகற்றவே சீடன் உயிர் பிழைத்தான்.
இன்னொரு முறை இவருக்கு விருந்து கொடுக்கவிருந்தவரின் மகன் இறக்கவே அவனை ராம மந்திரம் ஜபித்து உயிர்ப்பித்தார் . இப்படி பல அற்புதங்களைச் செய்தார் . வாதங்கள் செய்து மாற்று சமயத்தினரையும் துவைதத்தைப் பின்பற்றவைத்தார் .
வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.
இறந்த பின்னரும் இவர் அற்புதங்களைச் செய்தார்; மடத்திற்குத் தானமாக வழங்கப்பட நிலத்தை பிரிட்டீஷார் புதிய சட்டத்தை க் காட்டிக் கையகப்படுத்தினர்; பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெல்லாரி மாவட்ட கலெக்டர் தாமஸ் மன்றோ நேரில் விசாரணை செய்ய வந்தார்; மரியாதைடன் ராகவேந்திரர் சமா தியில் நுழையும்போது அவருக்கு முன்னர் ஒரு உருவம் தோன்றி ஆங்கிலத்தில் உரையாடி வெற்றி கண்டது. அந்த உருவம் யார் என்பது எவருக்கும் தெரியாது; இதை அவரே மெட்ராஸ் கெஜெட்டில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் .
ராகவேந்திரர் நிறைய நூல்களையும் கன்னட மொழியில் எழுதியுள்ளார் . அவை பிரம்மசூத்ரம், பகவத் கீதை, உபநிஷதங்கள் பற்றியவை. த்வைத சமய அணுகுமுறையில் சாஸ்திரங்களை விளக்கும் நூல்கள் அவை .
எப்போதும் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் அருள் சுரக்கும் அவரது புனிதத்தலங்களான புவனகிரி கோவிலுக்கும் மந்த்ராலயம் ஜீவ சமாதி உள்ள பிருந்தாவனத்துக்கும் எல்லோரும் சென்று தரிசிக்க வேண்டும்; இயலாதவர்கள் மேலே கண்ட பூஜ்யாய ……… மந்திரத்தை தினமும் சொல்லிவரலாம்; அவரது அருள் கிட்டும் என்பதில் ஐயமில்லை
சிதம்பரத்துப் போவோர் அரைமணி நேரத்தில் புவனகிரியை அடையலாம் .மந்திராலயம் ஆந்திரத்தின் கடைக்கோடியில் நல்ல போக்குவரத்து இணைப்புகளுடன் உள்ளது . ரெய்ச்சூர் அல்லது கர்நூலிலிருந்து செல்வது எளிது.
Mantralayam (or Mantralaya) is a well-known pilgrimage town located on the banks of the Tungabhadra River in the Kurnool district of Andhra Pradesh, India, near the Karnataka border. It is famous for the Jeeva Samadhi (holy tomb) of the 17th-century saint Sri Raghavendra Swami.
Location: Situated on the border of Andhra Pradesh and Karnataka, roughly 74 km from Kurnool and 43 km from Raichur.
–subham—
Tags- புவனகிரி, ராகவேந்திரர், மந்த்ராலயம், சமாதி,
பூஜ்யாய ராகவேந்த்ராய , பிறந்த ஊர், அற்புதங்கள்